13
கனேடிய பல்கலைக்கழகத்தினுடைய தமிழ்த் துறை விரிவுரையாளர், மூத்த தமிழ் ஊடகவியலாளர் பொன்னையா விவேகானந்தன் அவர்கள் எழுதிய நான்கு நூல்களின் அறிமுக நிகழ்வு, கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை (18) பிற்பகல் 03 மணிக்கு நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவை, தாய்வீடு இதழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்விற்கு கவிஞர் தீபச்செல்வன் தலைமையேற்கிறார்.
கனடாவில் வெளியிடப்பட்ட இந்த நான்கு நூல்களும் முன்னதாக வணக்கம் இலண்டன் மற்றும் கிளி மக்கள் அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இலண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், நூள்களின் ஆசிரியரின் சொந்த மண்ணான கிளிநொச்சியில், அவர் வாழ்ந்த நிலத்திலேயே, உறவுகள், நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் சூழ இன்று அறிமுகமாகின்றன.
நிகழ்வில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கலை ஆழுமைகள் ஒவியர் மருது, ஒவியர் ஜீவா, மேலும் கனடா தாய்வீடு இதழின் ஆசிரியர் டிலீப்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையும் உரையாற்றுகின்றனர்.
அத்துடன், பொன்னையா விவேகானந்தனினுடைய நூல்களுக்கான அறிமுக உரையை ஆசிரியரும் ஓய்வு பெற்ற அதிபரும் எழுத்தாளருமான பெருமாள் கணேசன், ஆசிரியர் கலாநிதி சு. குணேஸ்வரன், திருநகரூர் கவிஞர்ஜெகா, யாழ். பல்கலைக்கழக மாணவன் பாலா சயந்தன் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.
தமிழ்மொழி, பண்பாடு, கல்வி மற்றும் இலக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த 4 நூல்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இலக்கிய வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
