• Tue. Jun 3rd, 2025

24×7 Live News

Apdin News

கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து தொல்லியல் ஆய்வுத் துறை விளக்கம் | Archaeological Survey explanation regarding the Keeladi excavation report

Byadmin

May 30, 2025


கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்திய தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த அகழாய்வு குறித்து இந்திய தொல்லியல் துறை சில விளக்கங்களை கோரி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வு அறிக்கை வெளியீடு குறித்து ஒருதரப்பு ஊடகங்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை திட்டவட்டமாக மறுக்கிறது.

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையானது தலைமை இயக்குநரின் பெயரில் அகழாய்வு செய்யப்பட்ட இடங்களின் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு அகழ்வாய்வு பணியிலும் அதிக நேரம், ஆற்றல் மற்றும் பணம் செலவிடப்படுகிறது. எனவே அகழாய்வு அறிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில், அகழாய்வு ஆராய்ச்சியாளர்களால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அவை பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களுக்கு அனுப்பப்படுகின்றன. துறை வல்லுநர்களின் பரிந்துரைகளின்படி அகழாய்வு ஆராய்ச்சியாளர்களால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வெளியீட்டுக்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் இவை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் நினைவுக் குறிப்புகளாக வெளியிடப்படுகின்றன.

கீழடி அறிக்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. இதன்படி நிபுணர்களுக்கு ஆய்வுக்காக அறிக்கை அனுப்பப்பட்டது. அதன்படி கீழடியின் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவர் (அமர்நாத் ராமகிருஷ்ணன்) தற்போதுவரை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை.

ஒரு தரப்பு ஊடகங்களால் பரப்பப்படும் செய்திகள் தவறானவை, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. அகழாய்வு செய்யப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தை தலைமை இயக்குநரும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன அதிகாரிகளும் புரிந்து கொள்கின்றனர்.

ஆனால் அனைத்து அறிக்கைகளும் வெளியீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு முறையான ஆய்வு, திருத்தம், சான்று வாசிப்பு மற்றும் வடிவமைப்பு தேவையாக உள்ளன. கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது கற்பனைக் கதையாகும். இது வேண்டுமென்றே தொல்லியல் துறையை தவறாக சித்தரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. கீழடி விவகாரத்தில் ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



By admin