“அந்த தர்கா மற்ற மதத் தலங்களைப் போலவே புனிதமானது. குறைந்தது ஆறு தர்காக்களும், எனது முன்னோர்களது கல்லறைகள் சிலவும் அழிக்கப்பட்டுள்ளன.”
இவை 40 வயதான இஸ்மாயில் மன்சூரியின் வார்த்தைகள்.
சனிக்கிழமை (செப்டம்பர் 28) அதிகாலை நடந்த ‘மெகா இடிப்பு இயக்கத்தின்’ ஒரு பகுதியாக, குஜராத்தின் சோம்நாத் கோவில் அருகே சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அவர் ‘எல்லாவற்றையும்’ இழந்ததாகத் தெரிகிறது.
இடிப்பு நடவடிக்கை தொடங்கியபோது அவரது குடும்பத்தினர் அவசரமாக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மன்சூரி கூறுகிறார். அவர்களால் தங்கள் சாமான்களைக் கூட எடுத்துச் செல்ல முடியவில்லை.
“இப்போது உடுத்துவதற்குப் போதுமான ஆடைகள் மட்டுமே எங்களிடம் உள்ளன. எங்களது மற்ற உடைமைகள் அனைத்தும் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுவிட்டன, அல்லது எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன,” என்று இடிப்பு செயல்முறையால் ஏற்பட்ட அழிவைப் பற்றிப் பேசுகிறார் மன்சூரி.
இது நடந்த குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பிரபாஸ் படான் பகுதியில் உள்ள ‘பாபா ஹாஜி மங்ரோலி ஷா’ தர்காவை அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். இந்த தர்கா பல நூற்றாண்டுகள் பழமையானது என்றும் இந்தியத் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், பிபிசி குஜராத்தியால் இந்தக் கூற்றை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இதுகுறித்து இந்தியத் தொல்லியல் துறையின் (ஏ.எஸ்.ஐ) வதோதரா வட்ட அலுவலகத்தில் இருந்து கூடுதல் தகவல்களைப் பெற முயன்றோம். பலமுறை முயற்சித்தும், ஏ.எஸ்.ஐ-இடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்ட இந்த இடிப்புச் செயல்பாடு குஜராத் உட்பட இந்தியா முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இப்பகுதியின் நிர்வாகம் வழங்கிய தகவல்களின்படி, இந்த நடவடிக்கையின் போது, ஒன்பது பெரிய மத தலங்கள், மூன்று சிறிய மத தலங்கள், மற்றும் இரண்டு கி.மீ எல்லைக்குள் மசூதிகள் உட்பட 45 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் திக்விஜய் சிங் ஜடேஜா அளித்த தகவலின்படி, சோம்நாத் கோவிலை ஒட்டிய 102 ஏக்கர் நிலத்தில் இருந்து ‘சட்டவிரோத’ கட்டுமானங்கள் அகற்றப்பட்டுள்ளன.
ஒருபுறம், முழு சம்பவத்தையும் ‘சட்ட நடவடிக்கை’ என்று நிர்வாகம் கூறுகிறது, மறுபுறம், ‘சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் சொத்துக்கள்’ மட்டுமே குறிவைக்கப்படுகின்றன என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
பிரபாஸ் படானில் உள்ள பழைய வழிபாட்டுத் தலங்கள், இத்கா மற்றும் மங்ரோலி ஷா பாபா தர்காவைச் சட்டவிரோதமாக இடித்தது தொடர்பாக கிர் சோம்நாத் ஆட்சியர் மற்றும் மற்றொரு அரசு அதிகாரிக்கு எதிராக சமஸ்த் பட்னி முஸ்லிம் ஜமாத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இது குறித்து கலெக்டர் திக்விஜய் சிங் ஜடேஜா கூறுகையில், ”நோட்டீஸ் வழங்கப்பட்டும், குடியிருப்பாளர்கள் இடங்களை காலி செய்யத் தயாராக இல்லை. நிர்வாகத்திற்கு இடிப்பு நடவடிக்கையைத் தவிர வேறு வழியில்லை.” என்றார்.
இந்த நடவடிக்கையால் பாபா ஹாஜி மங்ரோலி ஷா தர்கா உட்பட பல தர்காக்கள், மசூதிகள், சிறிய வீடுகள் மற்றும் செங்கல் வீடுகள் அகற்றப்பட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து கலெக்டர் திக்விஜய் சிங் ஜடேஜா கூறுகையில், “முறையான நடைமுறையைப் பின்பற்றி, ரூ.320 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது,” என்றார்.
போலீசார் வழங்கிய தகவலின்படி, இடிப்புப் பணியைத் தடுத்ததாக 80 பேர் சம்பவ இடத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை பரப்பியதாக 8 முதல் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, பாபா மங்ரோலி ஷாவின் தர்கா இப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுக்கு ஒரு ‘நம்பிக்கை மையமாக’ இருந்தது.
இந்த தர்காவை அகற்றும் நடவடிக்கையால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தர்கா அகற்றப்பட்டதையடுத்து, அங்குள்ள கடைகளை அப்பகுதியினர் மூன்று நாட்களாக அடைத்து வைத்தனர்.
இந்த நடவடிக்கையின் போது ஷா சிலார் தர்கா, கரீப் ஷா தர்கா மற்றும் ஜாபர் முசாபர் தர்கா உள்ளிட்ட ஒன்பது தர்காக்கள் இடிக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது.
‘வாழ்க்கையை புதிதாக தொடங்க வேண்டும்’
இஸ்மாயில் மன்சூரி போன்ற பலர் தங்கள் வாழ்க்கையைப் புதிதாகத் துவங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இடிக்கப்பட்ட தர்காவை குறைந்தது 25 குடும்பத்தினர் கவனித்து வந்தனர். தர்காவிற்கு வருபவர்களுக்காக சுமார் 40 அறைகள் கட்டப்பட்டிருந்தன.
பெயர் வெளியிட விரும்பாத, பாதிக்கப்பட்ட ஒருவர் பிபிசியிடம், “இப்போது நாங்கள் எங்கள் உறவினர் வீட்டில் தங்கியுள்ளோம். எங்கள் வீட்டைக் கட்ட எங்கும் இடமில்லாததால் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று கூறினார்.
நிர்வாகத்தின் ‘கடுமையான நடவடிக்கை’ ஒரு பக்கம் இருந்தாலும், இதில் ‘எல்லாவற்றையும் இழந்த’ மக்கள், தங்கள் முன் மலைபோல் சவால்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
கிர் சோம்நாத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் இந்த நடவடிக்கையால் ‘அதிருப்தி அடைந்துள்ளனர்’.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் வாலி முகமது நக்வா, இடிப்பு நடவடிக்கைக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள நிலைமையை விவரிக்கும்போது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.
“ஹாஜி மங்ரோலி ஷாவின் சமாதி ஐந்து நூற்றாண்டுகள் பழமையானது. அதற்கு பெயிண்ட் அடிப்பதற்கு இந்தியத் தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ) இடமிருந்து ஆண்டுக்கு ரூ.1,200 நிதி பெற்றோம்,” என்று அவர் கூறுகிறார்.
பிபிசி குஜராத்தியால் இந்தக் கூற்றை இந்தியத் தொல்லியல் துறையிடம் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்தச் செயலைக் கண்டித்து வாலி உட்பட பலர் கடந்த 48 மணி நேரமாக எதையும் சாப்பிடாமல் இருக்கின்றனர்.
“நாங்கள் எப்படிச் சாப்பிட முடியும்? எங்கள் பாரம்பரியம், நிகழ்காலம், வரலாறு ஆகியபை அழிக்கப்பட்டுள்ளன. அதுவும் நாங்கள் எந்தத் தவறும் செய்யாலே,” என்று அவர் கூறுகிறார்.
தீவிரமான போலீஸ் கட்டுப்பாடு
ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கிர் சோம்நாத் எஸ்.பி மன்ஹர்சிங் ஜடேஜாவிடம் ஏன் கூடுதல் போலீஸ் தேவை என்று பிபிசி கேட்டபோது, ”இது வழக்கமான பயிற்சி. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் இதுபோன்ற பிரசாரத்திற்கு காவல்துறை உதவுமாறு கோரப்பட்டுள்ளது,” என்றார்.
இந்த இடிப்பு நடவடிக்கையின் போது மாவட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க, வெள்ளிக்கிழமை முதல் திங்கள் (செப்டம்பர் 27 – செப்டம்பர் 30) வரை 1,400-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சூழ்நிலையின் சிக்கலான தன்மையைக் கருதி மாவட்டம் முழுவதும் 144 விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர்வாசிகளின் செய்திகள் மற்றும் சமூக ஊடக இடுகைகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன. வாட்ஸ் அப் குழுக்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், எந்தச் செய்தியையும் பரப்ப வேண்டாம் என அப்பகுதி மக்களிடம் போலீசார் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
பழங்கால சொத்துக்கள் தொடர்பான சர்ச்சை
சம்பவம் நடந்த இடம் பிரசித்தி பெற்ற சோம்நாத் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது.
சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்பட்டதாக கூறப்படும் இடம் கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தமானது என கூறப்படுகிறது.
“இது இரண்டு அறக்கட்டளைகளுக்கு இடையேயான விஷயம். அதை நாங்கள் தீர்த்து வைப்போம் என்று நாங்கள் அதிகாரிகளிடம் கூறினோம். ஆனால் அவர்கள் எங்கள் சொத்தை இடிக்க முடிவெடுத்தனர்,” என்று உள்ளூர் தலைவர் அப்பாஸ்பாய் பிபிசியிடம் கூறினார்.
சனிக்கிழமை (செப்டம்பர் 28) காலை சட்டவிரோதமான கட்டுமானங்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்குவதற்குச் சற்று முன்னர் போலீஸாரால் தடுத்து வைக்கப்பட்ட முஸ்லிம் தலைவர்களில் அப்பாஸும் ஒருவர்.
அவர் கூறுகையில், “அதிகாரிகள் எங்களைச் சந்தித்து பிரச்னை குறித்து விவாதிக்க விரும்புவதாக எங்களிடம் கூறப்பட்டது. ஆனால் எனது செல்போன் பறிக்கப்பட்டது. நான் தடுத்து வைக்கப்பட்டேன். அதன் பிறகு புல்டோசர்கள் மூலம் இடிப்பு தொடங்கியது,” என்றார்.
இருப்பினும், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், இடிப்புக்கு முன், உள்ளூர் தலைவர்களுடன் பேசியே, முழு நடவடிக்கையும் மேற்கொண்டதாகக் கூறுகிறார்கள்.
குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேலுக்குச் சிறுபான்மை ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முஜாஹித் நஃபிஸ் எழுதிய கடிதத்தில், ”வருவாய் பதிவேடுகளின்படி, ஹாஜி மங்ரோலி ஷாவின் கல்லறை ஜுனாகத் சமஸ்தானத்தால் 1924-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி ஒதுக்கப்பட்டது.” என குறிப்பிட்டுள்ளார்
மேலும், சொத்து தொடர்பான மனுக்கள் குஜராத் உயர்நீதிமன்றத்திலும், வக்பு வாரியத்திலும் பரிசீலனையில் இருப்பதாகவும் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். எந்த தீர்ப்பும் வருவதற்கு முன்பே இடிப்பு பணிகளை மாநில அரசு எடுத்துள்ளது, என்று தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
இப்போது, சோம்நாத் கோவிலைச் சுற்றி நடந்திருக்கும் இந்த இடிப்பு வழக்கு உயர்நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது.
தர்காக்கள் மற்றும் கல்லறைகள் குறித்து, அவுலியா-இ-தின் கமிட்டி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து, தற்போதைய நிலையைத் தொடரக் கோரியது.
இந்த அமைப்பின் சார்பில் சாகிப் அன்சாரி என்பவர் மனு தாக்கல் செய்தார். அவரது வழக்கறிஞர் மிரால் தாக்கூர், கட்டுமானம் பொது இடத்தில் இருந்தாலோ, நீதிமன்ற உத்தரவு இருந்தாலோதான் இடிக்கப்பட முடியும் என்று நீதிமன்றத்தில், தெரிவித்தார்.
ஆனால், 1951-ஆம் ஆண்டு அப்போதைய சவுராஷ்டிரா அரசின் அறிவிப்பின்படி இந்த நிலம் பொது நிலமாக அறிவிக்கப்பட்டது என்று மறுபுறம் இருந்த அரசு வழக்கறிஞர் கூறினார்.
தர்காவைச் சுற்றியிருந்த சிறிய அறைகள், விருந்தினர் மாளிகைகளுக்கு தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், தர்காவை இடிக்க முடியாது என்றும் வழக்கறிஞர் மிரால் தாக்கூர் வாதிட்டார். ஹாஜி மங்ரோலி வழிபாட்டுத்தலம் மற்றும் கல்லறை இடிப்பு தொடர்பாக எந்த ஒரு ஆவணமும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றார்.
மாவட்ட நிர்வாகம் கட்டடத்தை இடித்துள்ள நிலையில், பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இடிக்கப்பட்ட கட்டடத்தைச் சுற்றி சுவரெழுப்ப அரசு அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ள போதிலும், வேலி அமைக்கப்பட்டு நிலம் அரசாங்கத்தின் வசம் உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.