பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு முறை நீங்கள் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிக்கும் போதும் அதில் பல பாக்டீரியாக்களை விட்டு செல்கிறீர்கள். நாள் முழுவதும் அது இன்னும் லட்சக்கணக்கில் அதிகரிக்கும். இதிலிருந்து தப்பிக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதை விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
மீண்டும்மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்கள் எந்த அளவில் சுகாதாரமாக இருக்கின்றன என்பது குறித்து கார்ல் பெஹன்கே எப்பொழுதுமே சிந்தித்து வந்துள்ளார். ஒருமுறை பாட்டிலில் பேப்பர் டவலை நிரப்பிய அவர் சிறிது நேரம் கழித்து அதில் படலம் ஒன்று படிந்திருப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார்.
“நான் டவலை வெளியே எடுத்தவுடன் அது வெள்ளை நிறத்தில் தான் இருந்தது, அந்த துணியில் நான் உணர்ந்த வழவழப்பு அதில் வளர்ந்திருந்த பாக்டீரியாவால் உருவாகியிருந்தது,” என்று இண்டியானாவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் உணவுத் துறை பாதுகாப்பு நிபுணரான கார்ல் பெஹன்கே தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய திட்டமிட்ட அவர், தனது குழுவினருடன் இணைந்து அந்த பல்கலை க்கழகத்தில் எதார்த்தமாக சென்றுகொண்டிருந்த அனைவரிடமும் அவர்களது தண்ணீர் பாட்டிலை கடனாக பெற்றுக்கொண்டார்.
அதன் சுத்தத்தை அவர் சோதிக்க விரும்பினார்.
பட மூலாதாரம், Gorka Olmo/ BBC
“ஆய்வு முடிவை தெரிந்துகொள்ள விருப்பம் காட்டாத மக்கள் அதிகளவில் இருந்தது தான் இதில் முக்கிய பகுதியாக இருந்தது. அதாவது பெரும்பாலானோருக்கு அதன் விடை தெரிந்திருந்தது. ஏனெனில் பலரிடம் அதை சுத்தம் செய்யும் பழக்கம் குறைவாகவோ அல்லது அவை சுத்தம் செய்யப்படாமலோ இருந்தன. இதே போன்ற ஒரு முடிவை தான் ஆராய்ச்சியும் வெளிப்படுத்தியது,” என்கிறார் பெஹன்கே.
2024 ஆம் ஆண்டு உலகளாவிய அளவில் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்ட பாட்டில்களின் சந்தை மதிப்பீடு 10 பில்லியன் டாலராக இருந்தது. இத்தாலியில் உள்ள சுகாதாரத் துறை பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பாதி பேர் இது மாதிரியான பாட்டில்களைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
அதேசமயம் பல்கலைக் கழக மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 50-இல் இருந்து 81 சதவீதத்தினர் பாட்டில்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது,
நமது உடலில் உள்ள நீர் சத்தை மேம்படுத்த அடிக்கடி தண்ணீர் குடிப்பது மிக முக்கியம் என்றாலும், நாம் எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்வதில் ஆரோக்கியம் சார்ந்த சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்போது பாட்டில்கள் பயன்பாட்டை முழுமையாக தடுப்பது தான் இதற்கு இருக்கும் தீர்வா அல்லது இதிலிருந்து தப்பிக்க வேறு வழிகள் ஏதேனும் இருக்கின்றதா என்பதை காண்போம்.
பாட்டில் உள்ளே இருப்பது என்ன?
பட மூலாதாரம், Gorka Olmo
சமையலறையில் உள்ள குழாய்களில் இருந்து நேரடியாக தண்ணீர் குடிப்பது சிறந்த வழியாக இருந்தாலும், அதிலும் பாக்டீரியா வளர்ந்திருக்கும்.
அதனால் தான் தண்ணீர் பாட்டிலில் எவ்வளவு நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைக்கிறோமோ அந்த அளவிற்கு அதில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும் என்கிறார் லண்டனில் உள்ள லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நுண்ணுயிரியல் இணை பேராசிரியர், ப்ரிம்ரோஸ் ஃப்ரீஸ்டோன்.
மனித உடலில் தொற்றை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியாக்கள் 37 டிகிரி செல்சியசில் வாழும் என்றும் 20 டிகிரி செல்சியசில் அது வளர்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை நீண்ட நேரம் பாட்டிலில் சேமித்து வைத்தால் பாக்டீரியாவின் எண்ணிக்கை பல மடங்கு உயரும்,” என்கிறார் அவர்.
சிங்கப்பூரில் கொதிக்க வைக்கப்பட்ட குழாய் நீரைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், அழிந்திருக்க வேண்டிய பாக்டீரியாக்கள் அனைத்தும், நீரை பாட்டிலில் வைத்து நாள் முழுவதும் பயன்படுத்துகையில் வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒருவர் பயன்படுத்தும் பாட்டிலில் மதிய நேரம் வரையில் சரசரியாக மில்லிலிட்டர் ஒன்றுக்கு 75,000 பாக்டீரியாக்கள் உருவாகும் எனவும் 24 மணி நேரத்தில் 10 முதல் 20 லட்சம் பாக்டீரியாக்கள் உருவாகும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
பாக்டீரியா வளர்ச்சியை குறைப்பதற்காக ஒவ்வொரு முறை பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்த பிறகும் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம், ஆனால் இது முழுமையாக பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்காது.
சில சமயங்களில் பாக்டீரியாவின் வளர்ச்சி, தண்ணீரின் தன்மையைப் பொறுத்து அமைந்தாலும், பெரும்பான்மையாக அதை குடிப்பவர் மூலமாகவே இது ஏற்படுகிறது.
அலுவலகம், உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களுக்கோ அல்லது வீட்டிலேயே வைத்திருந்தால் கூட பாட்டிலின் வெளிப்புறத்தில் நிறைய நுண்ணுயிர்கள் இடம்பெற்றிருக்கும்.
இவை நீங்கள் தண்ணீர் குடிக்கும் பொழுது வாய் வழியாக வரும் பாக்டீரியாவுடன் இணைந்து கலக்கப்படும், என்கிறார் ஃப்ரீஸ்டோன்.
அடிக்கடி கை கழுவாதவர்கள் பயன்படுத்தும் பாட்டில்களில் ஈ-கோலி எனப்படும் பாக்டீரியா உருவாகலாம் என்கிறார் அவர்.
இந்த பாக்டீரியா நமது கைகள் சுத்தமாக இல்லையென்றால் குறிப்பாக கழிவறை சுகாதாரம் குறைவாக இருந்தால் உருவாகக் கூடிய பாக்டீரியா ஆகும்.
இந்த பாட்டிலை மற்றவர்களுடன் பகிரும் பொழுது அதனால் பல்வேறு வைரஸ் தொற்று பாதிப்பும் ஏற்படலாம். உதாரணமாக நோரோ வைரஸ் இந்த வழிமுறையில் எளிதாக பரவலாம்.
பொதுவாக மனிதர்களின் வாயில் 500 முதல் 600 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக ஃப்ரீஸ்டோன் தெரிவித்தார்.
“உங்களுக்கு நோய் ஏற்படுத்தாத பாக்டீரியா மற்றவருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறிவிட முடியாது. உங்களுக்கு ஒரு தொற்று ஏற்பட்டிருக்கலாம், ஆனால் உங்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம், ஏனென்றால் நம்மை பாதுகாப்பதில் நமது நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக வேலை செய்யும்,”என்றார் அவர்.
பாக்டீரியா வளர்ச்சிக்கு வித்திடும் இன்னொரு காரணி, நீங்கள் தண்ணீரோடு கலக்கும் மற்ற பொருட்கள், அதாவது உதாரணமாக சுத்தமான குடிநீருடன் சர்க்கரை கலக்கப்பட்டால், பாட்டிலில் பாக்டீரியா அல்லது பூஞ்சை உருவாகும்.
ஏனெனில் உங்களுக்கு சத்து அளிக்கக் கூடிய அனைத்துமே பாக்டீரியாவின் வளர்ச்சிக்கும் சத்து அளிப்பதாக இருக்கும், என்கிறார் ஃப்ரீஸ்டோன்.
“தண்ணீர் தவிர, புரோட்டின் ஷேக்ஸ் போன்றவை பாக்டீரியா வளர கூடாரமாக அமைகின்றன,” என்கிறார் அவர்.
பாலை ஒரு குவளையில் சிறுது நேரம் விட்டுவிட்டு, திரும்பி வந்து பார்க்கும் பொழுது அதில் ஏடு உருவாகியிருக்கும். இந்த ஏடு தான் பாக்டீரியாக்களுக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் ஃப்ரீஸ்டோன்.
பாக்டீரியா ஏற்படுத்தும் பாதிப்பு
நம்மை சுற்றி இருக்கும் நிலம், காற்று ஆகிய எல்லாவற்றிலும் பாக்டீரியாக்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதில் பெரும்பான்மையானவை பாதிப்பற்றதாகவோ அல்லது பலனளிக்கும் வகையிலோ இருக்கும்.
ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பிரச்னைகளை உருவாக்கலாம். ஆனால் எல்லா சமயங்களிலும் அல்ல. இந்த பாக்டீரியா சுற்றுசூழலில் இயற்காகவே கலந்திருக்கும், குறிப்பாக மனித உடலின் வயிற்றுப் பகுதியில் இருக்கும். இது எப்போது குறிப்பிட்ட சில பண்புகளை வெளிப்படுத்துகிறதோ அப்பொழுது தான், ஆபத்தாக உடல் உபாதைகளை உண்டாக்கும். இதனால் குடலில் ஏற்படும் வீக்கம், நமது குடலில் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
“நமது குடல் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 1000 வகையான உயிரிகள் நமது குடலில் இருக்கின்றன. ஆனால் பாக்டீரியா இருக்கும் தண்ணீரைக் குடித்து வயிற்றில் கோளாறு ஏற்படுவதால் உருவாகும் மாற்றம் நல்லதுக்காக இருக்காது.”
ஆன்டிபயாடிக் எடுத்துக் கொண்டிருந்தால், அது அவர்களது உடலில் மாற்றங்களை விட்டு செல்லும்.
இவ்வாறு இருப்பவர்கள் மற்ற தொற்று நோய்க்கு எளிதாக ஆளாகலாம். பாட்டிலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் க்ளெப்சியெல்லா கிரிமோண்டி என்ற பாக்டீரியாவை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாகவே மனிதனின் உணவுக் குழாயில் இது காணப்பட்டாலும், ஆன்டிபயோடிக் எடுத்துக்கொண்டோருக்கு கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம்.
பாட்டிலில் பூஞ்சை போன்றவை உருவாகியிருந்தால், அலர்ஜி இருப்பவர்கள் அதை பயன்படுத்தும் போது அவர்களின் அறிகுறிகள் அதிகரித்துவிடும்.
ஆனால் இதுவரையில் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும் இந்த பாட்டில்களால் தீவிரமான உடல் உபாதைகள் ஏற்பட்டதாக எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.
அதனால் இவ்வாறு நிகழ வாய்ப்பே இல்லை என்றும் கூற முடியாது. அதேபோல ஒரு பிரச்னைக்கு குறிப்பிட்ட ஒரு காரணியை சுட்டுவது மிகவும் கடினமான ஒன்றே.
குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்?
பட மூலாதாரம், Gorka Olmo
தான் வைத்திருந்த பாட்டிலில் இருந்த நீரின் சுவை நன்றாக இல்லை என்பதை உணர்ந்த பெஹன்கே, “இது போல ஏற்படும் நேரத்தில் சூடான நீரை ஊற்றி, அதன் பின்னர் அதை ஊற்றிவிடுவேன். ஆனால் இதைத் தாண்டி நான் வேறு எதுவும் செய்ததில்லை,” என்றார்.
இவருடைய பேப்பர் டவல் ஆராய்ச்சி, ஒருவர் தான் பயன்படுத்தும் பாட்டிலை சுத்தமாக எவ்வாறு பாதுகாப்பது குறித்து அனைவரையும் சிந்திக்க வைத்தது.
ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 90 மாணவர்களில், பாதி பேர், தன்னுடைய பாட்டிலை மற்றவர்களுடன் பகிர்வதாகவும், 15% அவர்களுடைய பாட்டில்களை இதுவரை சுத்தம் செய்ததில்லை என்றும் கூறினர்.
ஆனால் பாட்டிலை அலசியவர்களுக்கும் அதை அலசாதவர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை.
பாட்டிலை எவ்வளவு நாளுக்கு ஒருமுறை கழுவுகின்றோம், எப்படி கழுவுகின்றோம் என்பது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
இருந்தாலும் சோப் மற்றும் பிரஷ் ஆகியவற்றைக் கொண்டு கழுவியவர்களின் பாட்டிலில் குறைந்த அளவிலான பாக்டீரியாக்களே இருந்தது கண்டறியப்பட்டது.
பெஹன்கே மற்றும் இவருடைய குழுவினர், பாத்திரம் கழுவும் சோப்பைக் கொண்டு, குறைந்த இடைவெளையில் பாட்டிலைக் கழுவுவது இதற்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று அறிவுறுத்துகின்றனர்.
ஆனால் சிலர் இதை வேறு விதமாக விளக்குகின்றனர்.
ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்த செயல்முறைகளைக் கேட்ட ஆய்வாளர்கள், அனைத்துமே சுத்தமாக, கழுவி இருக்க வேண்டும் என்ற பொதுக் கருத்திற்கேற்ப அதன் முடிவுகளை மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்தனர்.
டீ, காப்பி மற்றும் ஜூஸ் போன்ற திரவங்கள் இருக்கும் பாட்டில்கள் இன்னும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாட்டிலை சுத்தமாக கழுவி பயன்படுத்துவதே இதற்கான ஒரே தீர்வு. பாட்டிலுக்கு இருக்கும் நீர் சுத்தமானதாக இருந்தாலும் கூட, தண்ணீர் குடிக்கும் பொழுது உங்கள் எச்சில் அதில் விழுந்தால், அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களில் அந்த பாக்டீரியா செழுமையாக வளரும்.
குளிர்ந்த நீரில் கழுவுவதால் இந்த பிரச்னை தீரப் போவதில்லை. ஏனென்றால் குளிர்ந்த நீர் பாட்டிலில் இருக்கும் படலத்தை முழுமையாக நீக்குவதில்லை. அதனால் பாக்டீரியாக்கள் நன்றாக வளரும்.
ஆகவே 60 டிகிரி செல்சியசிற்கு அதிகமான வெப்பநிலையில் உள்ள நீரைக் கொண்டு கழுவுவதே இதிலிருக்கும் கிருமிகளைக் கொல்லும். சூடான நீருடன் பாத்திரம் கழுவும் சோப்பை நன்றாக கலக்கிவிட்டு 10 நிமிடங்களுக்கு ஊறவிட்ட பின்பு மீண்டும் சுடுநீரில் கழுவுவது சிறந்த வழி.
இதற்கு அடுத்தப்படியாக பாட்டிலை காற்றில் காய விடவேண்டும். ஏனென்றால் ஈரப்பதம் இருக்கும் இடத்தில் தான் இந்த நுண்ணுயிரிகள் உருவாகும்.
ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் இந்த வழிமுறையைப் பின்பற்றி கழுவுவது அவசியம்.
அல்லது குறைந்தபட்சமாக வாரத்திற்கு சிலமுறை கழுவுவது நல்லது. அதிலிருந்து வாடை வரும் வரை கழுவாமல் வைத்திருக்காதீர்கள் என்று ஃப்ரீஸ்டோன் அறிவுறுத்துகிறார்.
“உங்கள் பாட்டிலில் மோசமான வாடை வந்துவிட்டது என்றால் அதை நீங்கள் உடனே தூக்கிப் போட்டுவிட வேண்டும்.”
சுத்தமான பாட்டிலை பயன்படுத்தும் பொழுது உங்கள் கைகள் சுத்தமாக இருப்பதும் அவசியம்.
பெஹன்கே, இப்பொழுது பாட்டிலை பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்.
வாரத்திற்கு ஒரு முறை பிளீச் பயன்படுத்தி கழுவி, அதை காற்றில் காய வைத்த பின்னர் அதை பயன்படுத்துகிறார். பிரஷை பயன்படுத்தி பாட்டிலின் வாய்ப் பகுதி மற்றும் அடிப்பகுதி என அனைத்து இடத்தையும் சுத்தமாக கழுவுகிறார்.
எந்த பாட்டிலை பயன்படுத்தக் கூடாது ?
ஸ்டீல் பாட்டில்களுடன் ஒப்பிடுகையில் நெகிழி பாட்டில்களில் அதிக பாக்டீரியா இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தாலும், அதை சுத்தமாக பராமரிப்பதில் தான் வித்தியாசம் இருக்கின்றது. பாட்டிலின் எல்லா பகுதியையும் சுத்தமாக கழுவுவது மிகவும் அவசியம்.
ஆனால் நெகிழியை விட்டு ஸ்டீல் பாட்டிலை பயன்படுத்துவது பல காரணங்களுக்கு சிறந்ததாக பார்க்கப்படுகின்றது.
“நெகிழியில் நிறைய வேதியியல் கலப்புகள் உள்ளன. இது தான் அவற்றின் உறுதி, சூடு தாங்கும் தன்மை மற்றும் குறைந்த எடை மற்றும் பல நாட்களுக்கு பயன்படுத்தும் வகையில் இருக்கக் காரணம்,” என்கிறார் கத்தாரில் உள்ள வெயில் கார்னல் மருத்துவத்தில், மருத்துவ மக்கள் தொகை அறிவியலில் சுகாதார அறிவியல் உதவி பேராசிரியராக இருக்கும் அமித் ஆபிரகாம்.
“நெகிழியில் இருக்கும் இந்த வேதியியல் கலப்புகள் தண்ணீருடன் இணைந்துவிடும்,” என்கிறார் அவர்.
இதய நோய், ஹார்மோன் செயல்பாட்டில் கோளாறு, பக்கவாதம் போன்ற பல்வேறு தீவிரமான நோய்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன.
ஒருமுறை பயன்படுத்தவோ அல்லது மறுபயன்பாட்டிற்காகவோ உருவாக்கப்பட்ட நெகிழி பாட்டில்கள் அனைத்திலும் இந்த வேதியியல் கலப்புகள் இருக்கும்.
அதனால் கண்ணாடி மற்றும் ஸ்டீல் பாட்டில்களைப் பயன்படுத்துவது நல்லது.
எந்த பாட்டிலை பயன்படுத்தினாலும் அதை சுத்தமாக பராமரிப்பது அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் பருகும் நீர் சுத்தமாக, பாக்டீரியாக்கள் இல்லாத நீராக இருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு