• Wed. Sep 10th, 2025

24×7 Live News

Apdin News

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர்: தமிழக பாஜகவுக்கு என்ன பலன்?

Byadmin

Sep 10, 2025


சி.பி.ராதாகிருஷ்ணன்

பட மூலாதாரம், X/@CPRGUV

குடியரசு துணைத்தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், மீண்டும் ஓர் உயர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். முன்பு அப்துல் கலாமை குடியரசு தலைவராக்கிய பாஜக, மீண்டும் ஒரு தமிழருக்கு உயர் பதவியைக் கொடுத்திருப்பதாக பாஜக தரப்பில் பெருமிதம் தெரிவிக்கப்படுகிறது.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு தமிழரை, குடியரசு துணைத்தலைவராக்கியதன் பலன், தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்குமென்று கோவை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்கு மண்டலத்தில் குறிப்பாக கொங்கு வேளாளர் சமுதாயத்தினரின் ஆதரவு அதிகரிக்க இது உதவுமென்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் செல்வக்குமார் கூறினாலும், அவரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அல்லது ஒரு பகுதியின் பிரதிநிதியாகப் பார்க்க முடியாது என்கிறார்கள் பாஜக மூத்த நிர்வாகிகள். ஆனால் சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுத்திருப்பது, தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கிறார் பத்திரிக்கையாளர் ப்ரியன்.

இந்தியாவின் புதிய குடியரசு துணைத்தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அவர், பாஜக சார்பில் இரு முறை (1998 மற்றும் 1999) கோவை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக பாஜக தலைவராக பதவி வகித்துள்ளார். தேசிய கயிறு வாரியத் தலைவர், ஜார்க்கண்ட் ஆளுநர் பதவிகளை வகித்த அவர், மகாராஷ்டிரா ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

By admin