காணொளி: குட்டி மனிதர்களின் மாயத் தோற்றங்களை பார்க்க வைக்கும் அரிய காளான்கள்
சில அரிய வகை காளான்கள் மக்களை, குட்டி மனிதர்களைப் பார்க்கச் செய்யும் மாயத் தோற்றங்களை உண்டாக்குவதாகக் கூறுகிறார் யுடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான காலின் டோம்னாவர்.
சீனா, பப்புவா நியு கினி மற்றும் பிலிப்பின்ஸில் இதுகுறித்த பதிவுகள் உள்ளன. ஆனால், பப்புவா நியு கினியில் இந்த காளான் இனம் இன்னும் கண்டறியப்படவில்லை. இவை பொழுதுபோக்கிற்காக உட்கொள்ளப்படுவதில்லை.
அவரது கூற்றுப்படி, “இதுவரை நாமறிந்த கலாசாரங்களில், மனதை மயக்கும் விளைவானது, காளானை சரியாகச் சமைக்காததால் ஏற்படும் ஒரு தற்செயலான, அரிதாக நிகழும் பக்கவிளைவாக மட்டுமே உள்ளது.”
இவற்றில் இருக்கும் மருட்சியை உண்டாக்கும் ரசாயன சேர்மம் எது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
எல். ஏசியாட்டிகா காளான்களில், அதை உட்கொள்பவர்களுக்கு மாயத் தோற்றங்களைப் பார்க்க வித்திடுவது எத்தகைய ரசாயன சேர்மம் என்பதை அடையாளம் காணும் முயற்சியில் டோம்னாவர் மற்றும் அவரது குழுவினர் இன்னமும் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய பரிசோதனைகளின்படி, இது அறியப்பட்ட வேறு எந்த உளவியல் மயக்கமூட்டும் சேர்மத்துடனும் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
முதலாவதாக, இது ஏற்படுத்தும் மாயத் தோற்ற அனுபவங்கள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் நீடிக்கின்றன. பொதுவாக 12 முதல் 24 மணிநேரம் வரை நீடிக்கும் இவை, சில நேரங்களில் ஒரு வாரம் வரை நீடித்து நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் நிலையையும்கூட ஏற்படுத்துகின்றன.
இந்த மாயத்தோற்ற அனுபவங்களின் அசாதாரணமான நீண்ட கால அளவு மற்றும் மனப்பிரமை, தலைச்சுற்றல் போன்ற நீடித்த பக்க விளைவுகளுக்கான வாய்ப்பு காரணமாக, டோம்னாவர் இன்னும் அந்தக் காளான்களை தானே உட்கொண்டு முயன்று பார்க்காமல் தவிர்த்து வருகிறார்.
இந்தப் பெரியளவிலான மாயத்தோற்ற அனுபவங்கள், சீனா, பிலிப்பைன்ஸ், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளிலுள்ள மக்கள் எல். ஏசியாட்டிகாவை அதன் உளவியல் மயக்க விளைவுகளுக்காக வேண்டுமென்றே தேடிப் பயன்படுத்தும் ஒரு மரபைக் கொண்டிருக்காததற்கான காரணத்தை விளக்கக்கூடும் என்று டோம்னாவரின் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு