• Wed. Mar 12th, 2025

24×7 Live News

Apdin News

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in Kumari, Nellai and Thoothukudi districts today

Byadmin

Mar 12, 2025


கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (மார்ச் 12) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோரப் பகுதிகளைடொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகர்வதால் இன்று தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 14 முதல் 16-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இன்று 35.6-37.4 டிகிரி பாரன்ஹீட்டாக குறையக்கூடும். வரும்13 முதல் 15-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 35.6-37.4 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 91.4 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய லட்சதீவு– மாலத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவழிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் மார்ச் 11-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் தலா 3 செ.மீ. மழை பதிவானது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin