பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் போது ஏற்பட்ட நடுவர் தீர்ப்பு தொடர்பாக, இலங்கை கிரிக்கெட் நடுவரான குமார் தர்மசேனா மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.
டாக்காவில் உள்ள Shere Bangla National Stadium மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி, தொடரை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டமாக இருந்தது. தொடரில் இரு அணிகளும் 1–1 என்ற நிலையில் இருந்ததால், இந்த போட்டி வெற்றியாளரை தீர்மானிக்கும் ஆட்டமாக அமைந்தது.
அந்த போட்டியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 291 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. பதிலுக்கு விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணிக்காக சல்மான் அலி அஹா 98 பந்துகளில் 106 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் அணி வெற்றியைப் பெற முடியவில்லை.
இறுதி ஓவரில் பாகிஸ்தான் அணிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ரிஷாட் ஹொசைன் வீசிய ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலை ஏற்பட்டது.
அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை பாகிஸ்தான் அணியின் வீரரான ஷாஹீன் அஃப்ரிடி எதிர்கொண்ட போது, நடுவர் குமார் தர்மசேன அந்த பந்தை ‘வைட்’ என அறிவித்தார். எனினும், பந்துவீச்சாளர் ரிஷாத் ஹொசைன் மற்றும் விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் ஆகியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து DRS மதிப்பாய்வு கோரினர்.
UltraEdge தொழில்நுட்பத்தில் பந்து துடுப்பைத் தொடும் போது தெளிவான பதிவு பதிவாகியதால், நடுவரின் ஆரம்ப தீர்ப்பு மாற்றப்பட்டது. இந்த முடிவால் ஷாஹீன் அஃப்ரிடி அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பங்களாதேஷ் அணி மதிப்பாய்வு கோரிய நேரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது. மைதானத்தின் பெரிய திரையில் பந்து துடுப்பை கடக்கும் காட்சி மீள்பதிவு காட்டப்பட்ட பிறகே மதிப்பாய்வு கோரப்பட்டதாகவும், இது வழக்கமான விதிமுறைகளுக்கு முரணானதாகவும் பாகிஸ்தான் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பொதுவாக, எந்த மீள்பதிவும் திரையில் காண்பிக்கப்படுவதற்கு முன்பே 15 வினாடிகளுக்குள் மதிப்பாய்வு கோரப்பட வேண்டும். ஆனால் அந்த போட்டியில் ஒளிபரப்பில் நேர கணிப்புக் கருவி காட்டப்படாததால், பங்களாதேஷ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் மதிப்பாய்வு கோரியதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக போட்டி நடுவரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post குமார் தர்மசேனாவுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு appeared first on Vanakkam London.