திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 5 தொழிலாளர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு கசிந்து 5 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக தொழிற்சாலை நிர்வாகம் அவர்களை மீட்டு மஞ்சங்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த ஒடிசாவை சேர்ந்த தனஞ்செய மாலிக் (26) என்ற தொழிலாளியை மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாதிரிவேடு காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் மூச்சு திணறலுக்கு உள்ளான 4 தொழிலாளர்கள் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிரிவேடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி வட மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.