0
குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக முன்னோர்களால் வழிபடப்பட்டு வரும் தெய்வத்திற்கு குலதெய்வம் என்று பெயர். எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் குலதெய்வத்தை வழிபட்டு, அந்த தெய்வத்தின் அருளை பெறுவது தான் முக்கியம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே நிம்மதி, மகிழ்ச்சி, முன்னேற்றம், செல்வம் ஆகியவை கிடைக்கும்.
குலதெய்வத்தை முன்னோர்கள் வழிபட்ட முறையை பின்பற்றி அதன் வழிபடுவது வழிபடுவதே சிறப்பு. குலதெய்வத்தை எந்த கிழமையில் சென்று வழிபட்டால் தெய்வத்தின் முழுமையான அருளை பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம்?
ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம் என எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அவற்றை எவ்வளவு தீவிரமாக வழிபட்டாலும் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வந்த குலதெய்வத்தை வழிபட வேண்டியது மிக மிக அவசியம். குல தெய்வத்தை முறையாக வழிபட்டு, குலதெய்வத்தின் அருளை பெற்றால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருளை பெற முடியும். வாழ்க்கையில் பல விதமான துன்பங்கள், தடைகள், பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் அந்த நிலை மாற வேண்டும் என்றால் முறையாக குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
குலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி?
குல தெய்வம் தெரிந்தவர்கள் அதை வழிபடலாம். ஆனால் சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குலதெய்வத்தை தெரிந்து கொள்ள நினைத்தால் தினமும் பூஜை அறையில் நெய் விளக்கேற்றி வைத்து மனதார வழிபடலாம். குலதெய்வம் எது என தரிய வேண்டும் என வேண்டிக் கொண்டு 48 நாட்கள் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் யாராவது உறவினர்கள் மூலமாகவோ அல்லது கனவிலோ குலதெய்வம் யார் என தெரிய வரும். அப்படியும் தெரியவில்லை என்பவர்கள் நாடி ஜோதிடத்தில் குலதெய்வ காண்டத்தை பார்த்து தங்களின் குலதெய்வம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குலதெய்வத்தின் அருளை பெற…
குலதெய்வம் கோவிலுக்கு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ சென்று கண்டிப்பாக வழிபட்டு விட்டு வர வேண்டும். குலதெய்வம் கோவில் வெகு தொலைவில் உள்ளது, அடிக்கடி செல்ல முடியாது என்பவர்கள் வீட்டில் குலதெய்வத்தின் படத்தை வைத்து மிக எளிமையாக அதற்கு பூப்போட்டு தினமும் வழிபட்டு வரலாம். அதுவும் முடியாதவர்கள் இன்னும் எளிமையாக தினமும் காலையில் எழுந்ததும் குலதெய்வத்தை மனதில் நினைத்து, “இன்றைய நாள் சிறப்பானதாக இருக்க வேண்டும். அனைத்தும் நல்லவையாக நடக்க அருள் செய்” என மனதார வேண்டிக் கொண்டு தினசரி பணிகளை செய்வதால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
குலதெய்வத்தை வழிபட ஏற்ற நாள்
குலதெய்வத்தை வழிபடுவதற்கும், குல தெய்வம் கோவிலுக்கு செல்வதற்கும் அனைத்து நாட்களும் விசேஷமானவை தான். இருந்தாலும் அமாவாசை மற்றும் பெளர்ணமி ஆகிய இரண்டு நாட்களும் குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றவையாகும். இந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாளில் குலதெய்வம் கோவிலுக்கு நேரில் சென்றோ அல்லது வீட்டிலேயோ குலதெய்வத்திற்கு ஏதாவது நைவேத்தியம் செய்து படைத்து, வழிபட்டு வரலாம். இதுனால் குலதெய்வத்தின் அருள் எப்போதும் வீட்டில் நிறைந்திருக்கும். அதே போல் இந்த இரண்டு நாட்களில் குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதுடன் சிறப்பானதாக இருக்கும்.
குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்ற கிழமை
கிழமை என்று எடுத்துக் கொண்டால் குலதெய்வத்தை வழிபட்டு, குலதெய்வத்தின் பரிபூரண அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுவது ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகள். ஒருவேளை உங்களின் குலதெய்வம் சிவ பெருமானாகவோ அல்லது சிவனுடன் தொடர்புடைய முனீஸ்வரர் போன்ற தெய்வங்களாக இருந்தால் திங்கட்கிழமையில் சென்று வழிபடலாம். முருகனுடன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால் செவ்வாய்கிழமையில் சென்று வழிபடலாம். பெருமாளுடன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால் புதன் மற்றும் சனிக்கிழமையில் சென்று வழிபடலாம். அம்பாள் அல்லது பெண் தெய்வமாக இருந்தால் வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடலாம்.
குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?
குலதெய்வ வழிபாடே இதுவரை குடும்பத்தில் செய்தது கிடையாது. குலதெய்வம் தெரியாது. கண்டுபிடிக்க வழியே இல்லை என்பவர்கள் ஏதாவது தெய்வத்தை குலதெய்வமாக ஏற்ற நினைப்பவர்கள் ஆண் தெய்வங்களில் முருகப் பெருமானை குலதெய்வமாக ஏற்கலாம். முருகப் பெருமான் வழிபாட்டில் அனைத்து தெய்வ வழிபாடுகளும் அடங்குவதால் அவரை குலதெய்வமாக ஏற்று வழிபடலாம். பெண் தெய்வத்தை குலதெய்வமாக ஏற்ற வேண்டும் என்றால் காமாட்சி அம்மனை குலதெய்வமாக ஏற்றலாம். காமாட்சிக்குள் முப்பெரும் தேவர்களும் அடக்கம். மூன்று தேவியரின் அம்சமாகவும் விளங்குபவள் அவள் தான். ஒருவேளை வைண தெய்வத்தை குலதெய்வமாக ஏற்ற விரும்பினால் திருப்பதி ஏழுமலையானை குலதெய்வமாக நினைத்து வணங்கலாம்.