• Wed. Jun 18th, 2025

24×7 Live News

Apdin News

கூடங்குளம் அருகே இளைஞரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை – வழக்கின் முழு விவரம் | 10 people sentenced to life imprisonment

Byadmin

Jun 18, 2025


திருநெல்வேலி: கூடங்குளம் அருகே இளைஞரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கில், 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள கூத்தங்குழி கிராமத்தில் 2007 நவம்பர் மாதம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, அப்பகுதியை சேர்ந்த ஜேசு அருளப்பன் மகன் ரீகன்(22), கணேசன் ஆகிய இரு தரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது.

ஒன்றரை மாதத்துக்குப்பின் விஜயாபதியில் உள்ள ஓட்டலில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2008 ஜனவரி 22-ம் தேதி விஜயாபதி அருகே ரீகனை வழிமறித்த ஒரு கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது. இச்சம்பவம் நெல்லையில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

19 பேர் கைது: இது தொடர்பாக கூத்தங்குழி சிலுவை அந்தோனி (68), அவரது மகன்கள் கணேசன் (40), சிம்பு (39), அதே பகுதியை சேர்ந்த ஜான் பால் (42), அன்டன் (49), வினோத் (42), அருள் சகாயராஜ் (46), ஏரோணிமூஸ் மகன் அன்டன் (44), ஜேம்ஸ் (40), மைக்கேல் (44), யாகப்பன் (27), பச்சாலி (66), ஹெர்குலஸ் (39), சகாயம்(52), சக்கரியாஸ் (57), அருள்தாஸ் (39), ஆன்றனி மைக்கேல் (39), மிக்கேல் அந்தோனி (39), ஹால்டன் (31) ஆகிய 19 பேரை கூடங்குளம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

17 ஆண்டுகளுக்கு பிறகு.. வழக்கு விசாரணை காலத்தில் யாகப்பன், சக்கரியாஸ், ஹால்டன் ஆகியோர் இறந்துவிட்டனர். கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட சிலுவை அந்தோனி, கணேசன், சிம்பு, ஜான்பால், வினோத், அருள் சகாயராஜ், ஏ.அன்டன், ஜேம்ஸ், மைக்கேல், மிக்கேல் அந்தோனி ஆகிய 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து, நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் உத்தரவிட்டார். மற்ற 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.



By admin