46
இங்கிலாந்தின் கென்ட் (Kent) பல்கலைக்கழகத்தில் மூளைக்காய்ச்சல் (Meningitis) நோய் பரவியதன் விளைவாக, ஒரு மாணவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கேன்டர்பரி (Canterbury) பகுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களில் பலர் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நோய் பரவல் கேன்டர்பரியில் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்வோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என சுமார் 30,000 பேரைத் தொடர்புகொண்டு, நிலைமை குறித்து இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) விளக்கி வருகிறது.
மேலும், குறிப்பிட்ட சில வளாகக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு உடனடியாக நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய்க்கான குறிப்பிட்ட வகை திரிபு இன்னும் கண்டறியப்படவில்லை.
முக்கிய அறிகுறிகள் மூளைக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள்:
அதிக காய்ச்சல் மற்றும் வாந்தி
கடுமையான மற்றும் மோசமடைந்து வரும் தலைவலி
மறையாத தோல் தடிப்புகள்
உயிருக்கு ஆபத்தான செப்சிஸ் பாதிப்பு
இந்த அறிகுறிகள் சாதாரண காய்ச்சல் அல்லது போதை மயக்கத்துடன் எளிதில் குழப்பமடைய வாய்ப்புள்ளதால், மாணவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உடல்நிலை சரியில்லாதவர்கள் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவை (A&E) அணுகுமாறு அல்லது 999 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாகம் இது குறித்து கூறுகையில், “எங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். பொது சுகாதாரக் குழுக்களுடன் இணைந்து தேவையான ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
அதேவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி டஃபீல்ட் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.