அவரை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
15 இலட்சம் ரூபா இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளரான அவரின் சகோதரரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் எஸ்.வியாழேந்திரனைக் கொழும்பில் வைத்து இலஞ்ச, உழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் நேற்று கைது செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மண் அகழ்வுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக வர்த்தகர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வாங்கினார்கள் என்ற குற்றச்ச்சாட்டின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் பிரதேச அமைப்பாளர் ஆகிய இருவரையும் மட்டக்களப்பு – கல்லடி கடற்கரைப் பகுதியில் வைத்து இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிடம் விசாரணைகளை மேற்கொண்டு வந்த இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் , குறித்த சம்பவத்துக்கு உடந்தையாக இராஜாங்க அமைச்சர் இருந்துள்ளார் எனக் கண்டறிந்தனர். இந்நிலையில், அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.