• Fri. Mar 20th, 2026

24×7 Live News

Apdin News

கொரோனா தடுப்பூசி வாங்கியதால்தான் கோட்டாவின் ஆட்சியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது | சரத் வீரசேகர

Byadmin

Mar 20, 2026


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கையிருப்பில் இருந்த அனைத்து நிதியும் நாட்டு மக்களின் உயிரைக் காக்க கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே செலவிடப்பட்டது. இதன் காரணமாகவே அந்தச் சந்தர்ப்பத்தில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி இல்லாமல் போனது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இன்றைய தினம் (19) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், அன்று நாடு டொலர் நெருக்கடியில் இருந்தபோது, தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே ஒன்றிணைந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களை இலங்கைக்கு டொலர்களை அனுப்ப வேண்டாம் எனத் தூண்டிவிட்டு கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்குத் தள்ளியதாகக் குற்றம் சாட்டினார்.

அன்று எரிபொருள் வரிசைகள் ஏற்பட்டபோது ராஜபக்ஷக்களைத் திருடர்கள் என விமர்சித்தவர்கள், இன்று உலக யுத்தத்தைக் காட்டித் தப்பித்துக்கொள்ள முயல்வதாகச் சுட்டிக்காட்டிய அவர், முறையான வெளிநாட்டுக் கொள்கை இருந்திருந்தால் ரஷ்யா போன்ற நட்பு நாடுகளின் உதவியுடன் இந்த எரிபொருள் நெருக்கடியைத் தீர்த்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். மேலும், தற்போதைய அரசாங்கம் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தமையால் மின்சார உற்பத்திக்காக பாரியளவில் டீசல் வீணடிக்கப்படுவதாகவும், இது அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியே தவிர யுத்தத்தின் விளைவல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சரத் வீரசேகர, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஆறு ஜனாதிபதி ஆணைக்குழுக்களோ அல்லது அமெரிக்காவின் குடீஐ அமைப்போ சுரேஷ் சலேவுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அவர் இந்தியாவிலும் மலேசியாவிலும் தங்கியிருந்த நிலையில், அரசியல் தஞ்சக்கோரிக்கை பெறுவதற்காகச் சிலரால் கூறப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். யுத்த காலத்தில் புலிகளைத் தோற்கடிக்கப் பெரும் பங்காற்றிய ஒரு அதிகாரியை, தமிழ் புலம்பெயர் அமைப்புகளைத் திருப்திப்படுத்துவதற்காக இன்று எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் நிறைந்த ஒரு சிறையில் அடைத்து அரசாங்கம் பழிவாங்குவதாக அவர் கடுமையாகச் சாடினார்.

அத்துடன், உண்மைத் திருடர்களைப் பிடிக்க முடியாத அரசாங்கம், சிறு காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர்களைச் சிறையிலடைத்து மக்களை ஏமாற்றும் நாடகத்தை அரங்கேற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

By admin