• Wed. Feb 5th, 2025

24×7 Live News

Apdin News

கொழுந்து கூடை | கேசுதன் – Vanakkam London

Byadmin

Feb 5, 2025


 

மலை இடுக்குகளில் வழியும் சுனைகளின்
நடுவே கதிரவனின் கதிர்கள்
புதிதாய் சிவந்தது

தகர கொட்டகைக்குள் எழும் சண்டை எந்த குடும்பத்தின்
புலம்பல் என்றியாது விழிகள் பிதுங்கியது
லயம் காக்கும் நாய்கள்
அதற்கும் எஜமான்கள் அதிகம் தான்
நன்றிகள் மிகையானதால்

விசும்பின் அசைவில் மூடு பனியால்
மேவித் தத்தளித்தது வெள்ளை பூக்களும்
அதிகாலை ஊதுபத்திகளின் சுகந்தம்
சுற்றுவட்டாரத்தை ஆசுவாசப்படுத்தியது

கொட்டும் பனியில் நனைந்த கிழவனும் கிழவியும்
குழந்தையை ஆரவாரப்படுத்தினர்
உச்சிமேட்டில் பள்ளியை நோக்கி ஏறினர்
மாணவர் குழாம்

கொழுவிய புத்தப்பைகளை நிரந்தரமாய் காண
தாயவளும் கொழுந்துகூடையை சுமக்க தயாரானாள்
கூடை நிரம்புவதற்குள் குழந்தை வந்துவிடுவான்

ஒருநேர கூலியும் இருநேர சாப்பாட்டுக்கே முடிந்துவிடும்
இரவானால் அடுத்தவனின் அந்தரங்கம் அயலவனுக்கே
தெரிந்திடுமாபோல் லயத்து வீடுகள்

ஓட்டு வாங்கிய அரசுக்கு ஒரு நேரம் படியளக்கக்கூட
பாவம் பணமில்லை போலும்
கட்டுப்படியாகவில்லை கடன் வாங்கிய தொகையும்
கொடுத்தவன் தொண்டையை நெரிக்க
ஓடி ஒழிய முடியவில்லை

மானம் கப்பல் இருக்கிறது கடன்
கொடுத்தோன் கூச்சலில்
வாங்கிய கடனுக்கு மேல் கட்டிய வட்டிக்கு
கொழுந்து பிடுங்கிய விரல்களும் சுருங்கியது

சம்பளம் கூடினால் கொடுத்துவிடலாமெனும்
நப்பாசைக்கு பரிகாரம் கிட்டவில்லை
கொழுந்து கூடைகளுக்கு.

கேசுதன்

By admin