ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி கொல்லப்பட்டு, எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. தற்போது வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையில், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸாரும், குற்றம் சாட்டப்பட்டுள்ள, கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாளையாறு மனோஜ், ஜித்தின் ஜாய் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரிக்க அரசுத் தரப்பில் கூடுதல் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.