சென்னை: கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற தமிழக அரசு முயன்று வருவதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து, இந்து முன்னணியின் எக்ஸ் தளத்தில் கூறப்பட்டிருப்பதாவது: சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 300 கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழக அரசு, கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்றுவதற்கு முயன்று வருகிறது. இதுபோன்று கோயில் நிலத்தை அரசு பயன்பாட்டுக்கும் அலுவலகங்கள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டுவதற்கும் முயற்சி செய்கின்றனர்.
ஆனால், நீதிமன்றம் கோயில் நிலத்தை கோயிலுக்கே பயன்படுத்த வேண்டும் என்று வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை வழங்கியுள்ளது. சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் சம்பந்தமான வழக்கில் நீதிபதிகள் அறநிலையத் துறை சட்டப்படி கோயில் சொத்துகளை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை என்று அறிவுறுத்தியுள்ளது. இனியாவது அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவையும் அறநிலையத் துறை சட்டத்தையும் மதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.