வேளாண் கடன் தொகையைச் செலுத்திய பின்பும், அடகு ஆவணத்தைத் திரும்பத் தராமலும், கடன் அடமான பத்திரத்தை ரத்து செய்யாமலும் தாமதித்த வங்கி நிர்வாகம், பாதிக்கப்பட்ட பெண் விவசாயிக்கு ரூ.13 லட்சம் வழங்க கோவை நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கடன் தொகையைச் செலுத்திய பெண் விவசாயியின் மகனே ஆஜராகி வாதிட்டு, இந்த இழப்பீடு உத்தரவைப் பெற்றுள்ளார்.
பொதுவாக வங்கிகள் வாங்கி வைத்திருக்கும் இத்தகைய அசல் பத்திர ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது வங்கி நிர்வாகத்தின் பொறுப்பு என்றும், அது தொலைந்து விடும்பட்சத்தில் பதிவுத்துறையிடம் நகல் வாங்கிக் கொடுத்தாலும், வங்கி நிர்வாகத்தின் சார்பில் இந்த விபரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தர வேண்டுமென்று நுகர்வோர் அமைப்பினர் விளக்குகின்றனர்.
என்ன நடந்தது?
கோவை மாவட்டம் தேவராயபுரத்தைச் சேர்ந்த பெண் விவசாயி பாக்கியலட்சுமி. இவருடைய தந்தை கிருஷ்ணசாமியின் பெயரில் அதே பகுதியில் ஒரு ஏக்கர் 58 சென்ட் பரப்புள்ள விவசாய நிலம் இருந்தது. கடந்த 1992 ஆம் ஆண்டில் அந்த நிலத்தை கிருஷ்ணசாமி, தனது மகள் பாக்கியலட்சுமிக்கு தானமாக அளித்து உயில் எழுதியுள்ளார். அதை தொண்டாமுத்துார் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்துள்ளனர்.
கிருஷ்ணசாமி இறந்த சில ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2015 ஆம் ஆண்டில், நரசிபுரத்தில் அப்போதைய கார்ப்பரேஷன் வங்கியில் இந்த அசல் உயிலை அடமானம் வைத்து பாக்கியலட்சுமி, ரூ.3 லட்சம் விவசாயக்கடன் வாங்கியுள்ளார். இதற்கான விவசாயக் கடன் அடமான பத்திரமும் (MoD) தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2015 அக்டோபர் 13 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், அடுத்த ஆண்டிலும் பாக்கியலட்சுமி மேலும் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால் விவசாயத்தில் ஏற்பட்ட தொடர் நஷ்டங்களால் கடன் தொகையை முழுவதுமாக அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதற்கிடையில் அந்த கார்ப்பரேஷன் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டில் அந்த கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.7 லட்சத்து 5 ஆயிரத்தைச் செலுத்துமாறு பாக்கியலட்சுமிக்கு வங்கி நிர்வாகத்திடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அந்தத் தொகையை பாக்கியலட்சுமியின் மகன் சுரேஷ்குமார், தனது வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தியுள்ளார்.
அதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய சுரேஷ்குமார், ”கடந்த 2025 ஜூன் 26 அன்று, ஆர்டிஜிஎஸ் (RTGS) மூலமாக அந்தத் தொகையை நான் செலுத்திய பின்பு, தொகை வந்ததையும் வங்கி நிர்வாகம் உறுதி செய்தது. அதனால் எனது தாயாரால் அடகு வைக்கப்பட்ட அசல் உயில் ஆவணத்தைக் கேட்டோம். தேடிக் கொண்டிருப்பதாகக் கூறி, இன்று நாளை என்று இழுத்தடித்தனர். அதன்பின் ஆவணம் தொலைந்துவிட்டது, அதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று மிகவும் சாதாரணமாகக் கூறினர். ஒரு மாதம் காத்திருந்தும் பயனில்லை.” என்றார்.
”அதற்குப் பின்பே நாங்கள் சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பினோம். அதற்கும் வங்கி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இறுதியாகத்தான் நாங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி எனது தாயார் பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்தது. ஆறே மாதங்களில் மனு விசாரிக்கப்பட்டு, மார்ச் 25-ஆம் தேதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.” என்றார் சுரேஷ்குமார்.
நுகர்வோர் குறைதீர் ஆணைய தீர்ப்பு என்ன?
இவ்வழக்கில் கோவை மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய நீதிபதி தட்சிணாமூர்த்தி, ஆணைய உறுப்பினர் சுகுணா ஆகியோர் அளித்த உத்தரவையும் பிபிசியிடம் சுரேஷ்குமார் பகிர்ந்தார். அந்த உத்தரவில் இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ன் படி, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.12 லட்சம் வழங்க வேண்டும் என்றும், மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல், அலைச்சல் மற்றும் சேவை குறைபாடுக்கு ரூ.1 லட்சமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேவை குறைபாடு மற்றும் வழக்கு செலவுத்தொகையை பைசல் செய்யும் நாள் வரை, 12 சதவீத வட்டியும் சேர்த்துத் தர வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் உத்தரவு கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 2 மாதத்திற்குள் விவசாயக் கடன் அடமான பத்திரத்தை ரத்து செய்து கொடுக்க வேண்டுமென்றும், அதற்குப் பின் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரம் ரூபாய் வீதமாகச் செலுத்தவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
படக்குறிப்பு, சுரேஷ்குமார், பாதிக்கப்பட்ட பெண் விவசாயி பாக்கியலட்சுமியின் மகன் மற்றும் வழக்கில் வாதிட்ட வழக்கறிஞர்
தாயாருக்காக கடனை செலுத்தி வழக்கிலும் வாதாடிய மகன்
பாதிக்கப்பட்ட பெண் விவசாயி பாக்கியலட்சுமியின் மகனான சுரேஷ்குமார்தான், தனது தாயார் பெயரிலான கடன் தொகைக்குரிய தொகையை, தனது வங்கிக் கணக்கிலிருந்து பரிவர்த்தனை செய்திருக்கிறார். வழக்கறிஞரான அவரே, நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார். அவருடைய சீனியர்கள் தியாகராஜன், சுஜி தியாகராஜன் ஆகியோரும் இணைந்து வாதாடியுள்ளனர்.
”நாங்கள் அசல் உயில் ஆவணத்தை வங்கியில் கொடுத்து கடன் வாங்கியிருந்தோம். ஆனால் அவர்கள் அதைத் தொலைத்து விட்டு, நாளிதழில் விளம்பரம் கொடுத்து, பதிவுத்துறையிடம் நகல் வாங்கிக் கொடுப்பதாகக் கூறினர். அதை நாங்களே வாங்கியிருப்போம். இந்திய ரிசர்வ் வங்கி விதிகளின்படி, கடன் தொகை செலுத்திய 30 நாட்களுக்குள் அடகு ஆவணத்தைத் தரவேண்டும். அதிகபட்சம் 60 நாட்களுக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும். ஆனால் 30 நாளுக்குப் பின், ஒவ்வொரு நாளும் ரூ.5 ஆயிரம் வீதம் இழப்பீடு தரவேண்டும்.” என்றார் சுரேஷ்குமார்.
அந்தக் கணக்கின்படியே, கடன் தொகை முழுமையாகச் செலுத்தப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குப் பின் துவங்கி, தற்போது வரையிலும் நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் கணக்கிட்டு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக அவர் விளக்கினார்.
இந்த உத்தரவு பற்றி பிபிசியிடம் விளக்கிய வழக்கறிஞர் சுஜி தியாகராஜன், ”பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவரே, இதில் வாதாடி இத்தகைய உத்தரவைப் பெற்றிருப்பதை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறோம். உண்மையிலேயே இதுபோன்று பாதிக்கப்படும் நுகர்வோர் பலருக்கும் இந்த உத்தரவு நம்பிக்கையளிப்பதாக இருக்கும். வங்கிகளில் நுகர்வோரால் வழங்கப்படும் அசல் ஆவணங்களைக் கையாள்வதில் வங்கி நிர்வாகங்கள் கவனமுடன் இருப்பதற்கு இந்த உத்தரவு உதவுமென்று நம்புகிறோம்.” என்றார்.
இந்த வழக்கில் சொத்து ஒரே ஒரு நபருக்கு எழுதித் தரப்பட்டிருப்பதால் அவரிடம் அசல் உயில் ஆவணம் இருந்துள்ளது. ஒரே உயிலில் 2 அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்து பகிரப்பட்டிருந்தால் ஒருவரிடம் மட்டும்தான் அசல் உயில் இருந்திருக்கும். மற்றவர்களிடம் அதன் நகல் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. அதனால் அசல் உயில் ஆவணத்தை விட, அசல் மூலப் பத்திரங்களைத்தான் அதிகமான பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டுமென்று இல்லாவிடில் அதைத் தவறாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக பெயரை வெளியிட விரும்பாத பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
பாக்கியலட்சுமியிடம் அடமானம் பெற்ற அசல் மூலப்பத்திரங்கள் மற்றும் கிரயப்பத்திரங்களை வங்கி நிர்வாகம் திருப்பிக் கொடுத்துவிட்டதாக சுரேஷ்குமார் தெரிவித்தார். அசல் உயில் ஆவணம் மட்டுமே வங்கி நிர்வாகத்தால் தொலைக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்காக மட்டுமே தங்களால் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட விவரத்தையும் அவர் கூறினார்.
வங்கிக் கிளை மேலாளர் பதில்
இதுகுறித்து நரசிபுரம் யூனியன் வங்கிக் கிளை மேலாளர் பிபின் பாஸ்கரிடம் கேட்டபோது, ”கண்டிப்பாக நாங்கள் மேல் முறையீடுக்குச் செல்வோம். ஆவணம் காணாமல் போனதற்கான காரணம் குறித்து வங்கி நிர்வாகம் தரப்பில் வழக்கமான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
படக்குறிப்பு, கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளரும், முன்னாள் வங்கி அதிகாரியுமான கதிர்மதியோன்
அடமான பத்திரங்களை பதிவு செய்யும் முறை
வங்கி நிர்வாகங்களிடம் இதுபோன்று அடகு ஆவணமாக ஒப்படைக்கப்படும் அசல் ஆவணங்கள் தொலைந்து விடும் பிரச்னை நீண்டகாலமாகவே இருப்பதாக கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளரும், முன்னாள் வங்கி அதிகாரியுமான கதிர்மதியோன் கூறினார். அந்த அசல் ஆவணம் தொலைந்து விட்டதாகக் கூறி, பதிவுத்துறையிடம் நகல் ஆவணத்தை வாங்கி முறைகேடு செய்வதும் கூட நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
”பெரும்பாலும் அசல் ஆவணங்கள் அந்தந்த வங்கிக் கட்டடங்களிலேயே பாதுகாக்கப்படுகின்றன. சில பெரிய வங்கிகளில் பொதுவாக ஓரிடங்களில் இவை சேகரித்து பாதுகாக்கப்படுவதுண்டு. முன்பு வங்கிகளில் அசல் ஆவணங்களை அடகு வைத்துவிட்டு, பின்பு தொலைந்துவிட்டதாக பதிவுத்துறை அலுவலகத்தில் நகல் வாங்கி, அந்த சொத்தை விற்கும் முறைகேடு நடந்திருக்கிறது. அதன்பின்பே, அடகு வைத்து கடன் தரும்போது (Equitable Mortgage) ஆவணங்களை பதிவு செய்யும் நடைமுறை (Memorandum of Deposit of Title Deeds) வந்தது.” என்றார் அவர்.
”நுகர்வோருக்கு அசல் ஆவணம் முக்கியம். நகல் அதற்கு ஈடாகாது. அதனால் அசல் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைப்பது வங்கி நிர்வாகத்தின் பொறுப்பாகும். இதுபோன்று அசல் ஆவணம் தொலைந்துவிட்டால், முறைப்படி போலீசில் புகார் கொடுத்து, அதன் ரசீதை வைத்து நாளிதழில் விளம்பரம் கொடுத்து, அதை வைத்து பதிவுத்துறையில் நகல் வாங்கிக் கொடுக்க வேண்டும். அத்துடன் அசல் ஆவணம் தொலைந்த விவரத்தையும், வங்கி நிர்வாகத்தால் நகல் பெற்ற விபரத்தையும் குறிப்பிட்டு வங்கி நிர்வாகம் சார்பில் ஒரு கடிதம் தரவேண்டும். அதையே அசல் ஆவணமாக நுகர்வோரால் பயன்படுத்த முடியும்.” என்றார்.