-
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத்திட்டத்தின் கடைமடை பகுதி விவசாயிகளான காங்கேயம், வெள்ளகோவில் பகுதி விவசாயிகளுக்கு போதிய அளவு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்று கூறி, தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் 124 கி.மீ. துாரம் கால்வாயில் வரும்போது தண்ணீர் திருட்டு, நீர்க்கசிவால் மிகவும் குறைந்துவிடுவதால் கூடுதல் தண்ணீர் கேட்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
ஆனால், மற்ற பகுதிகளை விட வெள்ளகோவில் கால்வாயில் கூடுதல் தண்ணீர் விநியோகித்தும் அரசியல் காரணங்களுக்காக போராடுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் உள்ள பாசனத்திட்டங்களில் முக்கியமானது, பரம்பிக்குளம்–ஆழியாறு திட்டம். சுருக்கமாக பிஏபி என்று அழைக்கப்படும் இந்த திட்டம், காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது செயல்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பாயும் 6 ஆறுகள் மற்றும் அதையொட்டியுள்ள சமவெளிகளில் பாயும் 2 ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டி, பாசனத்துக்கும், நீர் மின் உற்பத்திக்கும், குடிநீருக்கும் பயன்படுத்துவதே இத்திட்டம்.
மலைகளைக் குடைந்து, சுரங்கங்கள் அமைத்து, தண்ணீரைக் கொண்டு வந்து, எங்குமே மோட்டார் பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க புவியீர்ப்பு விசையின்படி தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய்களைக் கட்டி, பாசனத்துக்குத் தண்ணீர் தரும் இத்திட்டம், கடந்த நுாற்றாண்டின் பொறியியல் சாதனையாகவே கருதப்படுகிறது.
ஒரு படுகை; 2 மாவட்டங்கள்; 3.74 லட்சம் ஏக்கர் நிலங்கள்
இரு மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், தமிழ்நாட்டில் பாலாறு படுகை மற்றும் ஆழியாறு படுகை என இரு படுகைகளில், மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இவற்றில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படும் பாலாறு படுகையில் மட்டும் 3 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள இந்த பாசன நிலங்கள் 90–95 ஆயிரம் ஏக்கர் வீதமாக 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இரு மண்டலங்களுக்கு தலா 135 நாட்கள் வீதமாக, நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கும் வகையில், ஒரு மடை விட்டு ஒரு மடை என்ற முறையில், தமிழ்நாடு நீர் வள ஆதாரத்துறை தண்ணீரை விநியோகித்து வருகிறது.
இதற்காக பரம்பிக்குளம் பிரதான கால்வாய், காண்டூர் கால்வாய் மற்றும் ஏராளமான கிளைக் கால்வாய்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலமாக வெவ்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது. இதில், பி.எம்.சி. என்று விவசாயிகளால் அழைக்கப்படும் பரம்பிக்குளம் பிரதான கால்வாய், மொத்தம் 124 கி.மீ. நீளமுடையது. இதன் இறுதியில்தான் திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் கால்வாய் அமைந்துள்ளது.
இந்த கால்வாயில் இருந்து காங்கேயம், வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 48 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. தலா 12 ஆயிரம் ஏக்கர் வீதமாக, 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
பட மூலாதாரம், -PAP Veeranampalyam Canal Water Users Association
ஆனால், பிரதான கால்வாயிலிருந்து கடைமடைப் பகுதியான வெள்ளகோவிலுக்கு திறந்தவெளி கால்வாயில் தண்ணீர் வருவதற்குள் நீர்க்கசிவு, தண்ணீர் திருட்டு, நீர் உறிஞ்சுதல், ஆவியாதல் உள்ளிட்ட பல காரணங்களால் நிர்ணயிக்கப்பட்ட அளவில் 40 சதவிகிதத் தண்ணீர் குறைந்து விடுவதால் பாசனம் செய்ய முடிவதில்லை என்பது விவசாயிகளின் நீண்டகால புகாராக உள்ளது.
அதனால் வெள்ளகோவில் பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் அவ்வப்போது போராட்டம் நடத்துவதும் தொடர்ந்து வருகிறது.
கடந்த ஜூன் 24 அன்று காலையில், காங்கேயம் வீரணம்பாளையம் கால்வாய் பாசனப் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆடு, மாடுகள், குதிரைகள், மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்கள் சகிதமாக, பிஏபி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
காவல்துறை அனுமதி தராததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அகற்ற காவல்துறையினர் முயன்றபோது, கடுமையான வாக்குவாதம், மோதல் நடந்தது. அதன்பின், 99 பெண்கள் உட்பட 230 பேர் கைது செய்யப்பட்டு, சிறிது நேரம் கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
பட மூலாதாரம், -PAP Veeranampalyam Canal Water Users Association
போராட்டம் நடந்துள்ள காங்கேயம் தொகுதி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதனின் சொந்தத் தொகுதியாகும். இன்னும் ஓராண்டுக்குள் சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், இப்போது நடந்துள்ள இந்தப் போராட்டம், பெரிதும் கவனம் பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்துக்குப் பின், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் அரசியல்ரீதியான மோதலும் வலுத்து வருகிறது. இரு தரப்பினரும் சமூக ஊடகங்களில் கடுமையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் பின்னணியில், எதிர்க்கட்சியினர் இருப்பதாக ஆளும்கட்சியினர் குற்றம்சாட்டும் நிலையில், காங்கேயம்–வெள்ளகோவில் பகுதி விவசாயிகளின் கோரிக்கைக்கான போராட்டத்தை அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் திசை திருப்புவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீர்ப்பாசனத்திட்டமா? நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமா?
போராட்டத்துக்கு தலைமை வகித்த பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கேயம்–வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வேலுசாமி, ”காவல்துறையினர் தேவையின்றி பலப்பிரயோகம் செய்கின்றனர். தண்ணீர் திருட்டு காரணமாக எங்கள் பகுதிக்கு பாசனத்துக்கான நீர் வரத்து குறைவதால் கிராம மக்கள் 250 பேர், விவசாயிகள் பாதிக்கப்படுகிறோம். எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த அமைதியாகப் போராடவே நாங்கள் கூடியிருந்தோம்.” என்றார்.
இதே பாசன சங்கத்தின் பொருளாளர் ஜெகதீஸ்வரன், இதுபற்றி பிபிசி தமிழிடம் விரிவாக விளக்கினார்.
”சமச்சீரான பாசனம் இல்லை என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வரும் வழியில் முதல் பகுதியில் தரும் அதே தண்ணீரை எங்களுக்கும் தர வேண்டுமென்றுதான் கேட்கிறோம். ஏனெனில், 124 கி.மீ. கடந்து வரும்போது, ஏராளமான தண்ணீர் திருட்டு நடக்கிறது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். எங்களுக்கான தண்ணீரை மற்றவர்களுக்குத் தருகின்றனர். இதை எதிர்த்துப் போராடினால் முடக்கப் பார்க்கின்றனர்.” என்றார் ஜெகதீஸ்வரன்.
பட மூலாதாரம், -PAP Veeranampalyam Canal Water Users Association
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், காங்கேயம், வெள்ளகோவில் போன்ற வறட்சியான பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இத்திட்டம், இப்போது போதிய தண்ணீர் கிடைக்காததால் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாக மாறிவிட்டது என அவர் கூறுகிறார்.
“அணையிலிருந்து ஒரு சுற்றுக்கு ஒரு டிஎம்சி எடுப்பதற்குப் பதிலாக 2 டிஎம்சி எடுக்கின்றனர். 3.74 லட்சம் ஏக்கரில் எங்கள் பகுதியிலுள்ள 48 ஆயிரம் என்பது எட்டில் ஒரு பங்கு. அதன்படி 8 லிட்டர் எடுத்தால் ஒரு லிட்டர் கொடுக்க வேண்டும். இப்போது 16 லிட்டர் எடுக்கும்போது எங்களுக்கு ஒன்றரை லிட்டர் மட்டுமே தருகின்றனர். தண்ணீர் பங்கீட்டில் இருக்கும் இந்தப் பிரச்னையை தான் நாங்கள் கேட்கிறோம்.” என்றார்.
பட மூலாதாரம், Paramasivam
இந்தக் கருத்தை மறுக்கும் கோவை மாவட்டத்தில் உள்ள பிஏபி பாலாறு படுகை பாசனத்திட்டக்குழுத் தலைவர் பரமசிவம், கடந்த 2000ம் ஆண்டிலிருந்து வெள்ளகோவிலில் பாசன சங்கங்கள் செயல்பட்டாலும் இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், இப்போது வந்துள்ள சிலர்தான் திட்டமிட்டு பிரச்னை செய்கின்றனர் என்கிறார். அந்தப் பகுதிக்குத் தர வேண்டிய தண்ணீர் அளவை விட, நீர்க்கசிவு, நீர் திருட்டு உள்ளிட்ட பல காரணங்களைக் கணக்கிட்டு, கூடுதலாக 31 சதவிகிதம் தண்ணீர் தரப்படுகிறது என்கிறார், திட்டக்குழுத் தலைவர் பரமசிவம்.
”ஆரம்ப காலத்தில் சுற்றுப்படி 12 நாட்கள் தண்ணீர் கொடுத்தால் போதும் என்றனர். சில ஆண்டுகள் கழித்து போராடி 14 நாட்கள் கேட்டு வாங்கினர். மீண்டும் போராடி 15 நாட்கள் தண்ணீர் வாங்கிவிட்டனர். இதேபோல, கடைமடை கால்வாயில் வரும் தண்ணீரின் உயரம் 4.2 மீட்டர் இருந்ததில் துவங்கி போராடிப் போராடி 4.5 மீட்டர் வரை பெற்று விட்டனர். இந்த அளவில் 3 ஆண்டுகளாக நீர் பகிரப்படுகிறது. இப்போது அதையும் மேலும் உயர்த்தச் சொல்கின்றனர். அவர்கள் கோரிக்கையில் எந்த நியாயமும் இல்லை.” என்றார் பரமசிவம்.
பட மூலாதாரம், -PAP Veeranampalyam Canal Water Users Association
அரசியல் தலையீடா?
தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம்-2000ன்படி மொத்தம் 134 நீர்ப்பாசன சங்கங்களை அரசு அங்கீகரித்து தேர்தல் நடத்துகிறது. அந்தந்தப் பகுதியிலுள்ள பல சங்கங்களை ஒருங்கிணைத்து 9 பகிர்மானக்குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
ஊராட்சித்தேர்தல், கூட்டுறவு சங்கத்தேர்தல் போலவே, இதிலும் தற்போது அரசியல் புகுந்து விட்டதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது வெள்ளகோவில் பகுதியில் உள்ள பகிர்மானக்குழுவில் கீழுள்ள 21 சங்கங்களில் 15 சங்கங்களில் திமுகவினரும், மற்ற 6 சங்கங்களில் அதிமுக, பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் நிர்வாகிகளாக இருப்பதாக தகவல் பகிர்கின்றனர்.
வெள்ளகோவில் கால்வாய் பகிர்மானக் குழுத் தலைவர் பாலசுப்ரமணியம் பேசுகையில் , ”அடிமடைப் பகுதிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்துவிடுகிறது. கடைமடைப் பகுதிகளுக்கு உரிய அளவில் தண்ணீர் போவதில்லை என்பதும் சரிதான். இதற்காகப் போராட வேண்டாம்; பேசித் தீர்ப்போம் என்று சொல்லியிருந்த நிலையில் திடீரென போராட்டத்தை நடத்திவிட்டனர். எல்லா பாசன சங்க நிர்வாகிகளையும் அழைத்துக் கொண்டு, துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளோம். அவரை சந்தித்துப் பேசினால் தீர்வு கிடைக்குமென்று நம்புகிறோம்.” என்றார்.
அரசியல் தலையீடு குற்றச்சாட்டைப் போலவே, வெள்ளகோவில் கால்வாய் பகுதியில் 10 சதவிகிதம் மட்டுமே விவசாயப்பரப்பு உள்ளது, பாசன நீரை தேக்கி வைத்து, அரிசி ஆலைகளுக்கு விற்கின்றனர் என்ற குற்றச்சாட்டையும் பொள்ளாச்சி பகுதி பாசன சங்கத்தினர் சிலர் தெரிவிக்கின்றனர். இதை மறுக்கும் வீரணம்பாளையம் கால்வாய் பாசன நீர் பயன்படுத்துவோர் சங்கத்தின் பொருளாளர் ஜெகதீஸ்வரன், இந்த குற்றச்சாட்டை வைப்பவர்கள் களத்துக்கு வந்து பார்க்க வேண்டும் என்கிறார்.
”இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயை ஒட்டி விதிகளை மீறி 2,314 மின் இணைப்புகள் இருப்பதாக நீர்வள ஆதாரத்துறையே நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன் அடிப்படையில், எங்கள் பகுதி உட்பட பல பகுதிகளிலும் நிறைய மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. ஆனால், இப்போதும் கால்வாயை ஒட்டி 300 அடிக்குள் விதிகளை மீறி, தென்னை நார்த் தொழிற்சாலை, கோழிப் பண்ணைகளுக்கும் பாசன நீர் எடுக்கப்படுகிறது. கள ஆய்வு செய்தால் அதையும் கண்டுபிடிக்கலாம்.” என்கிறார் ஜெகதீஸ்வரன்.
தற்போது கிடைக்கும் அரைகுறை தண்ணீரை வைத்து முழுமையாக பாசனம் செய்ய முடியாது என்பதால், வேறு வழியின்றி குட்டைகளில் தேக்கி வைத்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திக் கொண்டு, விவசாயம், கால்நடை மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கிறார் அவர்.
இதே கருத்தைக் கூறும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்த பாரதிய கிஷான் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத்தலைவர் பெரியசாமி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியிலுள்ள தென்னை நார்த் தொழிற்சாலைகளில் பிஏபி தண்ணீரை அதிகம் பயன்படுத்துவதால்தான் அப்பகுதி நிலத்தடி நீரும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்கிறார். திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலுார் பகுதியில் நடக்கும் தண்ணீர் திருட்டுக்கு அங்குள்ள அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர் என்று கூறும் அவர், அதனால்தான் நாங்கள் நேரடியாக களத்துக்கு ஆய்வு செய்யச் சென்றபோது காவல்துறையை வைத்து தடுத்துவிட்டனர் என்றார்.
வெள்ளகோவில் கால்வாய்க்கு கூடுதலாக 31 சதவிகிதம் தண்ணீர்
காங்கேயம் விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து கருத்துக் கேட்க, தமிழக நீர் வள ஆதாரத்துறையில் பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத்திட்டத்தின் தலைமைப் பொறியாளர் முருகேசன், கண்காணிப்புப் பொறியாளர் கார்த்திகேயன் இருவரையும் தொடர்புகொண்ட போதும், அவர்களிடமிருந்து எந்த விளக்கமும் கிடைக்கவில்லை.
ஆனால், இந்தப் பாசனத்திட்டத்தில் முன்பு பணியாற்றிய தலைமைப் பொறியாளர்கள், நிர்வாகப் பொறியாளர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, பிஏபி பாசனத்திட்டமே கடும் பிரச்னைக்கு உள்ளான ஒரு திட்டமாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டனர். தமிழ்நாட்டிலேயே காவல்துறையினரை வைத்து, நீர் விநியோகம் செய்ய வேண்டிய அவலநிலை இருப்பது இங்கே மட்டும்தான் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். நீர்வள ஆதாரத்துறையுடன் வருவாய்த்துறை, மின் வாரியம், காவல்துறை இணைந்து, தொடர்ச்சியாக பாசனக் கால்வாய்களைக் கண்காணிக்க வேண்டிய நிலையிருப்பதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
காங்கேயம் பகுதி கடைமடை விவசாயிகளின் கோரிக்கை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பிஏபி முன்னாள் தலைமைப்பொறியாளர் சிவலிங்கம், ”பிஏபியில் ஒரு மண்டலத்துக்கு ஆண்டுக்கு 135 நாட்கள் ‘ஆன் – ஆஃப்’ முறையில் தண்ணீர் விடப்படுகிறது. அதாவது, 15 நாள் தண்ணீர் தரப்படும்; 15 நாள் நிறுத்தப்படும். வெள்ளகோவில் கால்வாயில் ஒரு மண்டலத்தில் உள்ள 12 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு 120 டியூட்டி வீதமாக 100 மில்லியன் கனஅடி தண்ணீர் தரவேண்டும்.” என்று நீர்ப்பங்கீட்டு முறையை விளக்கினார்.
பட மூலாதாரம், Sivalingam
தொடர்ந்த அவர், ”நீர்க்கசிவு, நீர் திருட்டு, ஆவியாதல் போன்ற விநியோக இழப்பை (Transmission Loss) கணக்கிட்டு, மற்ற பகுதி விவசாயிகளுக்கு 10–15 சதவிகிதம் கூடுதல் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், கடைமடை என்பதால் வெள்ளகோவில் கால்வாயில் கூடுதலாக 31 சதவிகிதம் சேர்த்து 131 மில்லியன் கனஅடி தண்ணீர் விடப்படுகிறது. அங்குள்ள கடைமடை கால்வாயில் உள்ள அளவுகோலில் அதிகபட்சமாக 4.5 மீட்டர் இருக்கும் அளவுக்கு தண்ணீர் செல்கிறது. பல்வேறு இன்னல்களுக்கிடையே இந்த அளவு தண்ணீர் தரப்படுகிறது. இப்போது அதற்கு மேலும் வேண்டுமென்கின்றனர் வெள்ளகோவில் விவசாயிகள்.” என்றார்.
இரு தரப்பு விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து, மறியல் நடந்த காங்கேயம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சருமான சாமிநாதனை தொடர்புகொண்டபோது, அவருடைய உதவியாளர்கள் பலமுறை மீண்டும் அழைப்பதாகக் கூறினர். இறுதி வரை அவர்களிடம் பதில் பெற முடியவில்லை.
பிஏபி பாலாறு படுகை (திருமூர்த்தி அணை) பாசனத் திட்டக்குழுத்தலைவர் பரமசிவம், ”பரம்பிக்குளம் பிரதானக் கால்வாய் உட்பட கால்வாய் அனைத்தும் முற்றிலும் சேதமாகிவிட்டது. ஓடையில் தண்ணீர் போவது போல்தான் போகிறது. தண்ணீர் திருட்டும் அதிகம் நடக்கிறது. நீதிமன்றத்தில் நிறைய வழக்குகளும் உள்ளன. எல்லா கால்வாய்களையும் சீரமைக்க ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. உலக வங்கி, நபார்டு போன்றவற்றில் கடன் பெற அரசு முயற்சி செய்து வருகிறது. இதனை சீக்கிரமாகச் செய்ய வேண்டும் என நாங்கள் அரசை வலியுறுத்தி வருகிறோம்.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு