• Thu. Nov 20th, 2025

24×7 Live News

Apdin News

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது ஏன்?

Byadmin

Nov 20, 2025


மு.க. ஸ்டாலின், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி கோரி தமிழ்நாடு அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி புதன்கிழமை கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்க நேரில் வந்திருந்த தினத்தில், கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மறுத்துள்ள செய்தி மற்றும் அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு அரசியல் ரீதியாகவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் என்ற காரணத்தினால் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் எப்படி மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று மாநில அமைச்சர்களும், திமுக கூட்டணிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

மத்திய அரசின் விதிகள் தெரிந்தும் கூட, இந்த நகரங்களின் சரியான மக்கள்தொகையையும், பிற விவரங்களையும் மாநில அரசு முறையாக சமர்ப்பிக்காமல் மத்திய அரசு மீது பழி போடுவதாக பாஜக குற்றம் சாட்டுகிறது.

இதற்கிடையில், கோவையில் ‘பிஹார் காற்று வீசுகிறது’ என்று பேசிய நரேந்திர மோதியிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கோரிக்கையை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

By admin