
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கோவை வனக்கோட்டத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் ஆளில்லா டிரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு டிரோன்களின் உதவியுடன், ரயில் வரும் போது யானைகள் ரயில் பாதை அருகிலேயே வராமல் துரத்தும் புதிய திட்டம் தற்போது துவக்கப்பட்டுள்ளது.
இந்த டிரோன்கள் 24 மணி நேரமும் 2 ரயில் பாதைகளை டிரோன் மூலமாகக் கண்காணித்து, ரயில் பாதைக்கு அருகில் வரும் யானைகளை சைரன் சத்தம் எழுப்பி துரத்துவதை பிபிசி தமிழ் மேற்கொண்ட களஆய்வில் அறிய முடிந்தது.
இந்தியாவில் 14 ஆண்டுகளில் ரயில் மோதி 186 யானைகள் பலி
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 2010-2024 காலகட்டத்தில் 186 யானைகள் ரயில்கள் மோதி உயிரிழந்துள்ளன.
ரயில்வே அமைச்சகம் மற்றும் மாநில வனத்துறைகள் உடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இணைந்து நடத்திய கூட்டு ஆய்வில், 77 ரயில் பாதைகளில் அதிகமான காட்டுயிர் உயிரிழப்புகள் நடப்பதை அறிந்து பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டதாகக் கூறுகிறது அந்த அறிக்கை.
அதன்படி, தமிழ்நாடு – கேரளம் எல்லைப்பகுதிகளில் காட்டுப்பகுதி மற்றும் பட்டா நிலங்களில் அமைந்துள்ள 2 ரயில் வழித்தடங்களில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பது அதிகமாக நடந்துள்ளது.
தமிழக எல்லையிலுள்ள எட்டிமடை ரயில் நிலையம், கேரளா எல்லையிலுள்ள வாளையார் ரயில் நிலையம் ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏ மற்றும் பி என 2 வழித்தடங்கள் 7 கி.மீ. தூரத்துக்கு அமைந்துள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர், இவ்விரு ரயில் வழித்தடங்களும் மதுக்கரை வனச்சரகம் சோளக்கரை காப்புக்காட்டுப் பகுதியை மூன்று துண்டுகளாக பிரிக்கின்றன.

இவற்றில் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்கு தண்டவாளத்தை கடக்கும்போதுதான் ரயில்கள் மோதி காட்டு யானைகள் இறந்துள்ளன. கடந்த 2008 லிருந்து 2021 வரையிலும் 6 ரயில் மோதல் நிகழ்வுகளில் 11 யானைகள் உயிரிழந்துள்ளதாக பிபிசியிடம் வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பின் நீதிமன்ற உத்தரவு காரணமாக, வனத்துறை மற்றும் ரயில்வே துறை இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
தமிழக வனப்பகுதியில் ரயில் பாதைகள் அமைந்துள்ள இடங்களில், கனமான இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டன. யானைகள் ஒரு புறமிருந்து மறுபுறமுள்ள காட்டுப்பகுதிக்கு பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில், ரயில்வே இருப்புப்பாதைக்கு கீழே 2 சுரங்கப்பாதைகள் ரயில்வே துறையால் கட்டப்பட்டுள்ளன.
ரயில் பாதைகளை ஒட்டி யானைகள் வரும்போது, அவற்றை சியர்ச் லைட் மற்றும் பட்டாசுகள் வெடித்து துரத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள வழித்தடக் காவலர்கள் (Track Watchers) நியமிக்கப்பட்டனர்.
இதற்கு ஓரளவுக்கு பலன் கிடைத்தது. இருப்பினும் 7 கி.மீ. தூரமுள்ள 2 ரயில் வழித்தடங்களிலும் ரயில்கள் வரும்போதெல்லாம் ஆட்களை வைத்து, யானைகளைக் கண்காணித்து துரத்துவதில் பல நடைமுறைச் சிரமங்கள் இருந்தன.
ஏஐ கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது?

2023ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை வைத்து, யானைகளைக் கண்காணிக்க தமிழக வனத்துறை திட்டமிட்டது. அதற்காக வாளையார் அருகேயுள்ள நவக்கரை வனப்பகுதியில் ஏஐ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது.
ஏ மற்றும் பி வழித்தடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் இரவு நேரங்களிலும், யானையின் உடல் வெப்பத்தை வைத்து, அவற்றைக் கண்டறியும் திறனுள்ளவை. இந்த கேமராக்கள் ஏஐ கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தலா 2 பேர் வீதமாக 24 மணி நேரமும் இவற்றைக் கண்காணித்து வருகின்றனர்.
“யானைகள் ரயில் தடத்துக்கு அருகில் செல்லும்பட்சத்தில் மையத்திலுள்ள அலாரம் அலறுகிறது. உடனடியாக எந்த வழித்தடத்தில் எந்த இடத்தில் எவ்வளவு தூரத்தில் யானை இருக்கிறது என்பது ஏஐ தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்பட்டு, தானியங்கி முறையில் (Automatic Messages) ரயில்வே துறையினருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது.”
“உடனடியாக லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநருக்கு, ரயில் நிலைய மேலாளரிடமிருந்து தகவல் தரப்பட்டு, குறிப்பிட்ட பகுதியில் ரயிலை நிறுத்தவோ அல்லது மிகவும் மெதுவாக இயக்கவோ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த தகவல் தமிழக வனத்துறையின் வனவருக்கும் செல்கிறது. இவ்விரு வழித்தடங்களிலும் 25 டிராக் வாச்சர்கள் பணியில் உள்ளனர். அவர்களில் அப்பகுதியில் பணியில் இருப்பவர்களுக்கு வாக்கி டாக்கி அல்லது அலைபேசியில் தகவல் தரப்பட்டு, ரயில் தடத்திற்கு அருகிலுள்ள யானைகளைத் துரத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய ஏஐ கட்டுப்பாட்டு மையத்தின் ஊழியர் சந்தோஷ், ”2024 பிப்ரவரியிலிருந்து இந்த மையம் செயல்படுகிறது. தமிழக வனத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து எடுத்துள்ள இந்த கூட்டு முயற்சியால் அப்போதிலிருந்து இப்போது வரையிலும் 8750 முறை, யானைகள் இவ்விரு ரயில் பாதைகளைக் கடந்தும் ரயில் மோதி காட்டுயானை இறக்கும் நிகழ்வு நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளது. ” என்றார்.
கட்டுப்பாட்டு மையத்தின் பராமரிப்பு மேலாளரும், வனத்துறை தொழில்நுட்ப உதவியாளருமான நித்தியானந்தம், ”இதில் ரயில்வே துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒரே நாளில் ரயில் மோதி 3 யானைகள் இறப்பதற்கு முன்பு வரையிலும், சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இப்பகுதியில் 100–120 கி.மீ. வேகத்திலும், சரக்கு ரயில்கள் 60–70 கி.மீ. வேகத்திலும் சென்று கொண்டிருந்தன. அதன்பின்பு இந்த வேகத்தை முறையே 40–45 கி.மீ. மற்றும் 25–30 கி.மீ. வேகமாகக் குறைத்துவிட்டனர்.” என்றார்.
இவ்வாறு வேகத்தைக் குறைத்ததன் காரணமாகவே, ஏஐ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தகவல் சென்றதும், யானைகள் மீது ரயில் மோதாத வகையில் நிறுத்தவோ அல்லது மெதுவாகக் கடந்து செல்லவோ வழிவகை செய்ய முடிவதாக ஏஐ கட்டுப்பாட்டு மையத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த மையம் செயல்படத் துவங்கியதிலிருந்து இப்போது வரை ரயில் மோதி காட்டுயானை இறந்ததாக ஒரு நிகழ்வும் பதிவாகவில்லை என்று தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூவும் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் விரிவான தகவல்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
தேனீக்கள் ரீங்கார ஒலியால் யானைகளை துரத்தும் டிரோன்கள்

இந்நிலையில், ரயில் பாதைக்கு அருகிலேயே யானைகள் வராத வகையில் தடுத்து துரத்துவதற்கு, அதே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதியதொரு திட்டத்தை தமிழக வனத்துறை செயல்படுத்தியுள்ளது.
தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஆளில்லா வானூர்தி கழகத்துடன் (TNUAVTC-Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation) தமிழக வனத்துறை இணைந்து ரூ.8.3 கோடி மதிப்பில் இத்திட்டத்தைத் துவக்கியுள்ளது.
இதற்காக தனியார் நிறுவன உதவியுடன் இத்திட்டத்துக்காக 3 வயர் இணைப்புள்ள (Tethered Drone) டிரோன்களையும், 3 கண்காணிப்பு டிரோன்களையும் (Surveillance Drone) ஆளில்லா வானூர்தி கழகம் உருவாக்கியுள்ளது.
ஏற்கெனவே நவக்கரையில் செயல்பட்டு வரும் ஏஐ கட்டுப்பாட்டு மையத்துக்கு அருகிலேயே இதற்காக கட்டுப்பாட்டு அறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இரு ரயில் வழித்தடங்களையும் கண்காணிக்க அவற்றை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

இந்த 3 இடங்களிலிருந்தும் கேபிள் உதவியுடன் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட 3 டிரோன்கள் 24 X 7 மணி நேரமும் 100–150 மீட்டர் வரை உயரத்தில் ஒரே இடத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. மின்தடை ஏற்பட்டால் தொடர்ந்து இயங்க 6 மணி நேரம் இயங்கும் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தில் செயல்படும் அந்த டிரோன்களில் உள்ள கேமராக்களில் 2 தண்டவாளங்களை ஒட்டியுள்ள பகுதிகளும், அதையொட்டிய காட்டுப்பகுதிகளும் அதனுடன் இணைக்கப்பட்ட லேப் டாப்பில் தெரிகின்றன. இந்த லேப் டாப்கள், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. தெர்மல் முறையில் இரவிலும் உருவங்கள் துல்லியமாகத் தெரியும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தில் கேமராக்கள் செயல்படுகின்றன.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய தமிழ்நாடு ஆளில்லா வானூர்தி கழகத்தின் டிரோன் பொறியாளர் பாலமுருகன், ”இந்த வகை வயர் இணைப்புள்ள டிரோனில் (Tethered Drone) உள்ள மோட்டார் எல்லாமே DC மின்சாரத்தில் இயங்குவதால் சூடாகாது. இதில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் புவியமைப்பு சார்ந்த அனைத்து தகவல்களையும் துல்லியமாகத் தரும். தூரல் மழையிலும் இந்த டிரோன் இயங்கும். மிகக்கனமான காற்று மற்றும் மழையில் மட்டுமே இது இயங்காது.” என்றார்.
”இதிலுள்ள ஜூம் கேமரா 180 டிகிரியில் கண்காணிக்கும். வீடியோ கண்ட்ரோல் யூனிட்டில் பதிவாகும் காட்சிகள், லேப்டாப் மூலமாக கட்டுப்பாட்டு அறைக்கு வரும். அதனால் அனைத்து டிரோன்களின் தகவல்களும் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகிக் கொண்டே இருக்கும். இந்த டிரோன் பரவலாக 2.5 கி.மீ. துாரமுள்ள ரயில் பாதையை ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கும் திறனுடையது. ரயில் பாதை மட்டுமின்றி, மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் யானைகள் செல்வதையும் இதன் மூலமாகக் கண்காணித்து, அவற்றைத் துரத்த முடியும்.” என்றார் பாலமுருகன்.

ரயில் தடத்திற்கு இரு புறமும் 100 மீட்டர் வரையுள்ள தூரத்தை சிவப்புப் பகுதி (Red Zone) என்றும், 200–300 மீட்டர் வரையுள்ள பகுதிகளை ஆரஞ்சு பகுதி (Orange Zone) என்றும் பிரித்துள்ளனர். மதுக்கரை வனச்சரகத்தில் சோளக்கரை காப்புக்காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 3 கண்காணிப்பு கோபுரங்களிலும் (Watch Tower) இடங்களிலும் தலா 2 பேர் வீதமாக, 3 ஷிப்ட்களில் மொத்தம் 18 பேர் 24 மணி நேரமும் இந்த டிரோன்களை இயக்கி வருகின்றனர். வயர் டிரோன்கள் தவிர்த்து, பேட்டரியில் இயங்கும் டிரோன்களாலும் கண்காணிக்கின்றனர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய டிரோன் பைலட் ஷெர்பின், ”ஏற்கெனவே ரயில் வழித்தடங்களுக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள ஏஐ கேமராக்கள், யானைகள் மிக அருகில் வரும்போதுதான் அவற்றைக் கண்டறிந்து, ஏஐ கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தரும். ஆனால் இந்த கேபிள் இணைப்பு டிரோன்களால் 24 X 7 நேரமும் ரயில் பாதையைக் கண்காணிக்கும் போது 200 மீட்டர் தூரத்தில் யானை வரும்போதே கண்டறிந்து, அதை டிரோன் கட்டுப்பாட்டு அறைக்கும், ஏஐ கட்டுப்பாட்டு மையத்துக்கும் தகவல் தருகிறோம்.” என்றார்.
“யானை இருப்பது தெரிந்துவிட்டால் ஏஐ தொழில்நுட்பத்தை அதில் பயன்படுத்தும்போது, ரயில் தடத்திலிருந்து எந்த திசையில் எவ்வளவு தூரத்தில் யானை இருக்கிறது என்பதைக் காண்பிக்கும். உடனடியாக நாங்கள் கண்காணிப்பு டிரோனை வைத்து, அந்த யானைக்கு மேலாகக் கொண்டு சென்று, சைரன் அல்லது தேனீக்கள் ரீங்காரமிடும் சத்தத்தை ஒலிக்க விட்டு, யானையை காட்டுக்குள் துரத்திவிடுவோம்.” என்றார் ஷெர்பின்.

2024 ஆம் ஆண்டிலிருந்து ஏஐ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, ரயில்வே மற்றும் தமிழக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டதுடன், டிராக் வாச்சர்களால் யானைகளை துரத்தும் பணி நடந்துவந்தது. அதில் பல சிரமங்கள், ஆபத்துகள் இருந்ததை டிராக் வாச்சர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய டிராக் வாச்சர் மாதேஷ், ”ரயில்களில் யானைகள் அடிபடாமலிருக்க, இந்த 2 தண்டவாளங்களையும் 25 டிராக் வாச்சர்கள் கண்காணித்து வருகிறோம். ஏஐ தொழில்நுட்பம் வந்தபின்பு, எங்களுடைய பணிக்கு பெரிதும் உதவியாகவுள்ளது. இப்போது டிரோன்களை வைத்தே யானைகளைத் துரத்த முடியும் என்பது இந்த பணியை மேலும் எளிதாக்கியுள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள கேரள வனப்பகுதியில் சமீபத்தில் ஒரு யானை ரயில் மோதி இறந்தது. ” என்றார்.

தமிழகத்தில் யானை–மனித மோதல் அதிகமாக நடக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் மற்றும் கோவையின் வேறு சில பகுதிகளிலும் இரவு, பகலாக யானைகளைக் கண்காணித்து, அவற்றைத் துரத்துவதற்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கு இந்த ஏஐ தொழில்நுட்பத்தையும், டிரோன்களையும் இணைத்து ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்கிறார் கோவை மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் பிரபு.
பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய டிஎஃப்ஓ வெங்கடேஷ் பிரபு, ”கூடலூரில் இந்த ஏஐ தொழில்நுட்பம், யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து, யானைகளையும், யானைகளிடமிருந்து மக்களையும் காப்பதற்கு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது ரயில்களில் அடிபடாமல் யானைகளைக் காப்பதற்கு இதே தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கிறது.” என்றார்.
”இரவு நேரங்களில்தான் யானைகள் ரயிலில் அடிபடும் நிகழ்வுகள் அதிகமாக நடந்துள்ளன. இந்த ஏஐ தொழில் நுட்பத்தில் தெர்மல் முறையில் இரவிலும் யானைகள் நடமாட்டம் தெரிவதால், யானைகளை டிராக் வாச்சர்கள் மூலமாக ரயில்வே கீழ்பாலங்கள் வழியாக எளிதாகத் துரத்த முடிகிறது. இப்போது டிரோன்களை வைத்தே சத்தம் எழுப்பி யானைகளைத் துரத்த முடியும் என்பதால் எங்களது பணி இன்னும் முழுமையடைந்துள்ளது” என்றார் டிஎஃப்ஓ வெங்கடேஷ் பிரபு.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு