பட மூலாதாரம், Anuwar Hazarika/NurPhoto via Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்
கோவைக்கு அருகிலுள்ள மோளப்பாளையம் என்ற கிராமத்தில் நடந்து வரும் தொல்லியல் ஆய்வில் புதிய கற்காலத்தில் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறும் ஆய்வாளர்கள், இதில் கிடைத்துள்ள விலங்கு ஒன்றின் எலும்பு காண்டாமிருகத்தினுடையது என்று கூறுகின்றனர்.
இந்த கருத்தில் முரண்படும் காட்டுயிர் ஆய்வாளர்கள், சதுப்பு நிலங்களில் மட்டுமே வாழக்கூடிய காண்டாமிருகங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்ததில்லை என்றும், அதனால் அந்த எலும்பை மரபியல் சோதனைக்கு உட்படுத்தினால் மட்டுமே (DNA TEST) அது காண்டாமிருகத்தின் எலும்பு என்று உறுதியாக சொல்ல முடியுமென்று கூறுகின்றனர்.
ஆனால் உருவவியல் (MORPHOLOGY) அடிப்படையில் இந்தியாவின் தலைசிறந்த விலங்கியல் தொல்லியல் ஆய்வாளர்களால் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியை தொகுத்துள்ள தொல்லியல் பேராசிரியர் செல்வகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
தொல்லியல் ஆய்வில் கிடைத்த எலும்பு
கோவை அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள மோளப்பாளையம் என்ற கிராமத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தொல்லியல் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அங்கே 3 மனித எலும்புக்கூடுகளும், அதிகமான அளவில் விலங்கு எலும்புகளும், கடல் கிளிஞ்சல், அம்மிக்கற்கள், அரவைக் கற்கள், கல் உருண்டைகள், தானிய விதைகள், கற்கோடாரிகள், புதியகற்காலப் பானைகள், கடற்சங்கில் செய்யப்பட்ட மணிகள், சேமிப்புக் குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்கிறது, மோளப்பாளையம் அகழாய்வின் அறிக்கை.
படக்குறிப்பு, மோளப்பாளையத்தில் தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடம்
இங்கு கிடைத்த கற்கோடாரிகள் தற்போது கோவையிலுள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வின் முதற்கட்ட அறிக்கை, சமீபத்தில் மதுரையில் நடந்த கருத்தரங்கில் (Symposium) வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்தான், 3600 ஆண்டுகளுக்கு முன் மக்கள் அங்கே வாழ்ந்ததற்கான சான்று கிடைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்த இடத்தில் மெருகேற்றப்பட்ட கற்கோடாரிகள், பானை ஓடு, அரவைக்கல் என சமதளங்களில் கிடைத்த சில பொருட்களை வைத்தே அந்த இடத்தைத் தொல்லியல் ஆய்வுக்குத் தேர்வு செய்ததாகச் சொல்கிறார் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்தி வரும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் தலைவர் வீ.செல்வகுமார்.
படக்குறிப்பு, புதிய கற்காலத்தைச் சேர்ந்தவையாக கூறப்படும் கல் கருவிகள்
அகழாய்வு அறிக்கையை பிபிசி தமிழிடம் பகிர்ந்த செல்வகுமார், அதுபற்றி விரிவாகவும் விளக்கினார். மொத்தம் 13 பேர் ஆய்வுகளை மேற்கொண்டு எழுதியுள்ள இந்த அகழாய்வை இவர்தான் தொகுத்துள்ளார். 2021 மற்றும் 2024 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும், இங்கேயிருந்து 47 ஆயிரம் எலும்புகள் சேகரிக்கப்பட்டதில் 4 விதமான காட்டு விலங்குகளின் எலும்புகளும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
”அங்கே சேகரித்த எலும்புகளின் அகழாய்வு முடிவுகள் (Analysis), இப்போதுதான் வந்துள்ளன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, மோளப்பாளையத்தில் 3600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் ஆடு, மாடு மேய்த்து, வேளாண்மை செய்திருக்கின்றனர். அங்கே கிடைத்த எலும்பில் ஒன்றுதான் காண்டாமிருகத்தின் எலும்பு என்று தெரியவந்துள்ளது.” என்றார் செல்வகுமார்.
அமெரிக்காவிலுள்ள பீட்டா அகழாய்வு ஆய்வகத்தில் (Beta Analytic Lab) இரு முறை மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க கரிமக் காலக் கணிப்பு (radiocarbon dating) அடிப்படையில்தான், மோளப்பாளையத்தில் கிடைத்துள்ள எலும்புகள் மற்றும் பிற சான்றுகளின் காலம் 3600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை கண்டறிந்துள்ளதாகவும் செல்வகுமார் விளக்கினார்.
”காண்டாமிருகம் என்பது தாவர உண்ணிகளில் பேருயிராக (Megaherbivores) உள்ள ஒரு காட்டுயிராகும். அவை இங்கே இருந்திருக்கின்றன என்றால் இங்கே நல்ல மேய்ச்சல் நிலமும், சதுப்பு நிலமும் அப்போது இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் காண்டாமிருகம் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் வாழும் உயிரினம் என்பதால் அவை முற்றிலுமாக வேட்டையாடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அப்போதிருந்த பேருயிர்களில் யானை மட்டுமே இப்போது வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றன.” என்றார் செல்வகுமார்.
மோளப்பாளையம் அகழாய்வில் கிடைத்த விலங்கு எலும்புகளை ஆய்வு செய்த கேரள பல்கலைக்கழகத்தின் தொல்லியல் விலங்கியல் ஆய்வாளர் (Archaeozoologist) ஜி.எஸ்.அபயன், அங்கே கிடைத்த எலும்புகளில் ஆடு, மாடு, நாய் போன்றவற்றின் எலும்புகளை அடையாளப்படுத்தியிருப்பதுடன், பெரிய அளவில் இருந்த எலும்பு காண்டாமிருகத்தின் எலும்புதான் என்றும் அபயன் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சொல்கிறது அகழாய்வு அறிக்கை.
பட மூலாதாரம், Handout
படக்குறிப்பு, காண்டாமிருகத்தின் எலும்பு என ஆய்வாளர்கள் கூறும் பொருள்
தொல்லியல் ஆய்வில் காண்டாமிருகத்தின் எலும்பு கிடைத்திருக்கும் தகவல் பலரையும் ஈர்க்கின்ற விஷயமாக மாறியுள்ளது. அங்கே கிடைத்ததாகக் கூறப்படும் காண்டாமிருகத்தின் எலும்பை தங்கள் குழுவினர் பார்த்ததாகக் கூறும் யாக்கை அறக்கட்டளையின் தலைவர் சுதாகர் நல்லியப்பன், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பிற மாநிலங்களில் இதேபோன்ற சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய சுதாகர் நல்லியப்பன், ”தக்காண பீடபூமிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் காண்டாமிருகம் சார்ந்த பாறை ஓவியங்கள் பல இடங்களில் காணப்பட்டுள்ளன. அவை தத்ரூபமாக அமைந்துள்ளன. ஒரு விலங்கை நேரில் பார்க்காமல் அப்படி வரைவதற்கு வாய்ப்பேயில்லை. ” என்றார்.
யாக்கை அறக்கட்டளை, தமிழகத்தின் தொல்லியல் சான்றுகளை ஆவணப்படுத்தி வருகிறது. சமீபத்தில் இந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள நீலமலைத் தொல்லியல் என்ற பெரும்நுால், மேற்குத் தொடர்ச்சி மலையின் குறிப்பாக நீலகிரியில் உள்ள பாறை ஓவியங்கள், பெருங்கற்படைச் சின்னங்கள் மற்றும் பழங்குடித்தொடர்புறவுகள் குறித்து விரிவாக விளக்குகிறது.
”மோளப்பாளையத்தில் இன்னும் ஆழமாகத் தோண்டப்படவில்லை. அப்படி ஆழமாகச் செல்லச் செல்ல காலத்தில் முன்னோக்கிச் செல்லவும் வாய்ப்புள்ளது என்பது எங்களுடைய கணிப்பு.” என்கிறார் சுதாகர் நல்லியப்பன்.
மோளப்பாளையம் அகழாய்வு முடிவுகளை ஆமோதிக்கும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆலோசகர் பேராசிரியர் ராஜன், அகழாய்வு நடந்துள்ள இடங்களில் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தும் புதிய கற்கால வாழ்வியல் முறையையும், அப்போதிருந்த பண்பாட்டுக் கூறுகளையும் தெளிவாகச் சுட்டிக்காட்டுவதாகச் சொல்கிறார்.
பேராசிரியர் ராஜன், தமிழக அரசின் தொல்லியல் துறையின் தொல்லியல் கல்வி மற்றும் அகழ்வாராய்ச்சிக்கான ஆலோசகராகவுள்ளார்.
பட மூலாதாரம், Handout
படக்குறிப்பு, மோளப்பாளையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தானிய சேகரிப்பு குழிகள்
எழுப்பப்படும் சந்தேகங்கள்
மோளப்பாளையம் மற்றும் அதையொட்டியுள்ள மலைகளில் காப்புக்காடுகளில் காட்டுயானைகள், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு காட்டுயிர்கள் வாழ்கின்றன. இந்த அகழாய்வில் காண்டாமிருகத்தின் எலும்பு கிடைத்திருப்பது பற்றி, இதுவரை வனத்துறை சார்பில் வேறு எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் காட்டுயிர் ஆய்வாளர்கள் மத்தியில் விவாதங்கள் நடந்து வருகின்றன.
கோவைக்கு அருகிலுள்ள இந்த மலைப்பகுதியில் காண்டாமிருகம் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளதா என்பது பற்றி உதகை அரசு கலைக்கல்லூரியின் காட்டுயிர் உயிரியல் துறைத்தலைவர் ராமகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் பேசியது. அகழாய்வில் கிடைத்த எலும்பை வைத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதனை மரபியல் சோதனைக்கு(DNA Test) உட்படுத்தாத வரையிலும் அதை உறுதியாகச் சொல்லமுடியாது என்றார் அவர்.
”காண்டாமிருகம் முழுக்க முழுக்க சதுப்பு நிலத்தில் வாழும் பேருயிர். அதனால் வெப்பத்தைத் தாங்க இயலாது. அஸ்ஸாம் காசிரங்கா போன்று நீர்நிலைகள் அதிகமுள்ள பகுதியில்தான் அவற்றால் வாழமுடியும். கோவையில் அதுபோன்ற சதுப்பு நிலங்கள், வளமான நீர் நிலைகள் இருந்ததில்லை. அதேபோன்று இந்தியாவில் காட்டுயிர் சார்ந்து நடந்துள்ள இதுவரையான ஆராய்ச்சிகளில் தென்னிந்தியாவில் காண்டாமிருகம் வாழ்ந்ததற்கான எந்த சான்றுகளும் பதிவுகளும் இல்லை.” என்றார் ராமகிருஷ்ணன்.
பட மூலாதாரம், Anuwar Hazarika/NurPhoto via Getty Images
படக்குறிப்பு, அசாமின் காசிரங்கா பூங்காவில் காணப்படும் காண்டாமிருகங்கள்
யானை – மனித மோதல் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள ராமகிருஷ்ணன், ஆசிய யானைகள் நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள 13 நாடுகளைச் சேர்ந்த 101 உறுப்பினர்களில் ஒருவர்.
”மோளப்பாளையத்தில் கிடைத்த எலும்பின் புறத்தோற்றத்தை (Morphology) வைத்தே, அது காண்டாமிருகத்தின் எலும்பு என்றும், ரேடியோ கார்பன் டேட்டிங் முறையில் அது எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் அடையாளப்படுத்தியுள்ளனர். இதில் காலத்தைக் கணிப்பது அறிவியல்பூர்வமான முறை. ஆனால் உருவவியல் என்பது அனுமானம். அதனால் அந்த எலும்பின் கூறுகளையும், இந்தியாவில் தற்போதுள்ள காண்டாமிருகங்களின் மரபியல் கூறுகளையும் மரபியல் சோதனைக்கு (DNA TEST) உட்படுத்தினால்தான் இந்த எலும்பு குறித்த அறிவியல்பூர்வமான முடிவை அறியமுடியும்.” என்கிறார் பேராசிரியர் ராமகிருஷ்ணன்.
ஆனால் இந்தியாவின் தலைசிறந்த தொல்லியல் விலங்கியல் ஆய்வாளர்களால், அது காண்டாமிருகத்தின் எலும்புதான் என்பது இரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அகழாய்வை தலைமையேற்று நடத்தி வரும் பேராசிரியர் செல்வகுமார்.
”புனே டெக்கான் கல்லூரியின் தொல்லியல் துறையில் பணியாற்றும் தொல்லியல் விலங்கியல் பேராசிரியர் பி.டி.ஜோக்லேக்கர், உருவவியலின் (Morphology) அடிப்படையில் அது காண்டாமிருகத்தின் எலும்புதான் என்பதை உறுதி செய்துள்ளார். அவருடைய மாணவரான கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.எஸ்.அபயன்தான் இதை ஆய்வக சோதனையில் அடையாளப்படுத்தியுள்ளார். இதை இவர்கள் இருவரும் உறுதிபடக் கூறியிருப்பதால் இதற்கு மேல் மரபியல் சோதனை தேவையில்லை.” என்றார் செல்வகுமார்.
ஏறத்தாழ இதே கருத்தைப் பிரதிபலிக்கும் தொல்லியல் துறையின் ஆலோசகர் ராஜன், குஜராத் துவங்கி தமிழகம் வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு விலங்குகள் சூழலியல் மற்றும் இயற்கை நிகழ்வுகளால் இடம் பெயர்ந்திருக்கும் வாய்ப்புள்ளது என்கிறார்.
”வறட்சி, பருவமழை பொய்ப்பு, சமூகச்சூழல் மாற்றங்கள், அரசியல் நிர்வாக நடவடிக்கைகள், வனவளங்கள் அழிப்பு (Over Exploitation), நீர் பற்றாக்குறை, ஆறுகளை நோக்கிய இடப்பெயர்வு, மண்ணின் வளம், அதீதமான இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இதனால் காட்டுயிர்கள் மற்றும் சமூகரீதியான இடப்பெயர்வுகளும் நிகழ்ந்திருக்கலாம்.” என்றார் பேராசிரியர் ராஜன்.
மோளப்பாளையத்தில் நடந்த அகழாய்வு முடிவுகள் குறித்த அறிக்கையை, இந்தக் குழுவினர் இந்திய தொல்லியல் துறைக்கு அறிக்கையாகவும் சமர்ப்பித்திருப்பதாகத் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார் தொல்லியல் துறை ஆலோசகர் ராஜன்.