• Thu. Mar 19th, 2026

24×7 Live News

Apdin News

சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Byadmin

Mar 19, 2026


இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழல் மற்றும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர்  விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

தற்போது நிலவும் யுத்தம் போன்ற இக்கட்டான சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 10க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அரசாங்கத்துடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் வேளையில், பொலிஸாரின் வகிபாகத்தை எவரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருளைச் சட்டவிரோதமாகச் சேமித்து வைத்திருந்த நபர்கள் மற்றும் அதற்குத் துணை நின்றவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக, பியாகமவில் டீசல் இயந்திரம் மற்றும் 19.6 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது, மல்வானையில் 67.5 லீற்றர் டீசல் மற்றும் 10.5 லீற்றர் பெட்ரோல் என்பன மீட்பு, உடுதும்பறையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக 4 பேர் கைது மற்றும் வத்தளை/ஏனைய பகுதிகளில் 40 லீற்றர் டீசல் மற்றும் 5.5 லீற்றர் பெட்ரோலுடன் 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெறியற்ற முறையில் மற்றும் சமூக விரோதப் போக்குடன் செயற்படும் நபர்களுக்கு எதிராக பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக ‘இந்தன் ஹல்லசுவாமி’ என்பவரின் கொலைச் சம்பவம் மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய சுமார் 100 பேர் வரை இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

“இந்த இக்கட்டான தருணத்தில் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் வேதனை மற்றும் மோதல்கள் வருத்தமளிக்கின்றன. எவ்வாறாயினும், சட்டத்தை மதிக்கவேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும். மாணவர்கள் மற்றும் ஏனையவர்களின் சிவில் உரிமைகளை மதிக்கவேண்டும். வன்முறைகளைக் குறைப்பதற்கு அனைவரும் பொலிஸாருடன் இணைந்து செயற்படவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

குற்றச் செயல்கள் அல்லது வன்முறைகள் தொடர்பான தகவல்கள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும், சட்டத்தை நிலைநாட்டப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வுட்லர் மேலும் தெரிவித்தார்.

The post சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு : பொலிஸ் ஊடகப் பேச்சாளர் appeared first on Vanakkam London.

By admin