சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினர் தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து சட்ட விரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் கண்டறியப்பட்டு சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் போலி ஆவணங்களுடன் வங்கதேசம், மியான்மர், நைஜீரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களில் சிலர் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுபோன்றவர்கள் மீது சட்ட விரோதமாக குடியேறுதல், போலி ஆவணங்களை காண்பித்து ஏமாற்றுதல் உள்பட மேலும் சில சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் தங்கி இருக்கும் அனைத்து வெளிநாட்டினர், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறி உள்ள வங்கதேசத்தினரை வெளியேற்றுவதற்கு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதுபோன்ற சிறப்பு படையை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதன் மூலம் சட்ட விரோதமாக தமிழகத்தில் தங்கி இருக்கும் வங்க தேசத்தினர் மட்டும் அல்லாமல் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த பணியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கி ணைந்து செயல்பட்டு தமிழகத்தில் ஊடுருவிய வங்க தேசத்தினர் உள்பட வெளிநாட்டினர் கண்ட றியப்பட உள்ளனர்.
வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியர்கள் என அழைக்கப்படும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோரின் அனைத்து ஆவணங்களையும் உரிய முறையில் மாவட்ட நீதிபதிகள் மூலம் சரிபார்க்க வேண்டும் என்று காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண் டுள்ளது குறிப்பிடத்தக்கது.