என்கவுன்டரில் 30 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்த சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 30 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.
என்கவுன்டர் நடந்த இடத்தில் பெரிய எண்ணிக்கையிலான நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை கூறுகிறது.
என்கவுன்டரை அடுத்து, தேடுதல் வேட்டை தொடர்கிறது என்றும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
பிபிசி செய்தியாளர் அலோக் புதுலிடம் பேசிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைக்காக சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படையின் தனித்தனி குழுக்கள் வியாழக்கிழமை ஓர்ச்சா மற்றும் பர்சூர் காவல் நிலையங்களில் இருந்து புறப்பட்டதாக கூறினார்.
சம்பவ இடத்தில் இதுவரை 30 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். எனினும், அவர்களின் அடையாளம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பார்க்கும் போது சில பெரிய மாவோயிஸ்ட் தலைவர்களும் கொல்லப்பட்டவர்களில் இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
இது பெரிய வெற்றி என்றும் பாராட்டுக்குரியது என்றும் அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய் கூறியுள்ளார்.
“நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டு வரும் வரை எங்களது போராட்டம் ஓயாது. எங்கள் இரட்டை எஞ்சின் அரசு இதற்காக உறுதியாக உள்ளது. நக்சலிசத்தை மாநிலத்தில் இருந்து ஒழிப்பதே எங்கள் இலக்கு” என்றும் முதலமைச்சர் கூறினார்.