சத்தீஸ்கரில் உள்ள பன்பராஸ் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி யாதவ் கடந்த வாரம் வரை ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – சப்போரா கிளை’ என்றழைக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தார். ஆனால், அது உண்மையில் வங்கியே இல்லை என்பதை அவரால் இன்னும் நம்ப முடியவில்லை.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள் சிலர் போலீஸாருடன் அந்த வங்கிக் கிளைக்கு வந்தபோதுதான், ஜோதிக்கு அந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்து, வங்கி ஊழியர்கள், தனது பணி நியமனக் கடிதம் என அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 20 0கி.மீ. தொலைவில் உள்ள சக்தி மாவட்டத்தில் உள்ள சப்போரா கிராத்தினர் இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த வழக்கில் அனில் பாஸ்கர் என்ற நபரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவரது கூட்டாளிகள் 8 பேரைத் தேடி வருகின்றனர்.
‘எஸ்.பி.ஐ கிளையை’ பார்த்து மகிழ்ந்த மக்கள்
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு சப்போரா கிராமத்தில், ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ பெயரில் புதிய கிளை திறக்கப்பட்டதும், அக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இனி வங்கிப் பணிகளுக்கு வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை என அவர்கள் நினைத்தனர்.
ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை.
கடந்த வாரம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து அந்த வங்கியில் சோதனை நடத்திய போது, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெயரில் திறக்கப்பட்ட இந்த வங்கி முற்றிலும் போலியானது என்ற விஷயம் தெரிய வந்தது.
பாரத ஸ்டேட் வங்கி மட்டும் என்ன? அது வங்கியே அல்ல என்பதும் தெரிய வந்தது.
சப்போரா கிராமத்தைச் சேர்ந்த அஜய் அகர்வால், தங்கள் கிராமத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியின் ‘கியோஸ்க்’ வேண்டும் என விண்ணப்பித்திருந்ததாகக் கூறுகிறார்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ‘கியோஸ்க்’, ஒரு தனிநபர் அல்லது தனியார் நிறுவனம் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்காக வரையறுக்கப்பட்ட வங்கிச் சேவைகளை இயக்க அனுமதிக்கிறது.
பொதுவாக இந்தக் கியோஸ்க்குகள் சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் திறக்கப்படும்.
உண்மை வெளிப்பட்டது எப்படி?
இதுகுறித்துப் பேசிய அஜய் அகர்வால், “ஒரு நாள் கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை திறக்கப்பட்டதைப் பார்த்தபோது, அதிர்ச்சியடைந்தேன். ‘நமது கிராமத்தில் ஸ்டேட் வங்கி ஏன் கிளை திறக்க வேண்டும்?’ என்று நினைத்தேன்,” என்று கூறினார்.
கிராம மக்கள் வங்கிக்கு வந்து பார்த்த போது, அங்கு ஏராளமான ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டனர்.
அதிநவீன வசதிகளுடன், வங்கிக்குள் தனி மேசைகள் இருந்தன.
இந்த வங்கியில் கணக்கு தொடங்கும் பேச்சுவார்த்தை நடந்தபோது, சர்வர் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் கணக்கு திறக்கப்படும் என ஊழியர்கள் கூறியதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், பாரத ஸ்டேட் வங்கியின் கள அதிகாரிகளான சந்திரசேகர் போத்ரா மற்றும் அஜய் அகர்வால் ‘வங்கியின்’ ஊழியர்களிடம் விசாரித்த போது, அவர்களுக்குச் சந்தேகம் வந்தது.
மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி உயர் அதிகாரிகளுடன் அவர்கள் பேசியபோது, வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அடுத்த நாள், பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் உள்ளூர் காவல்துறையினருடன் இந்த ‘வங்கிக்கு’ வந்த போது, இந்தப் போலி வங்கியின் முகம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆனால் அதற்குள் வங்கியின் மேலாளர் என்று கூறப்படும் பங்கஜ் சாஹு தலைமறைவாகிவிட்டார்.
வழக்குப் பதிவு
இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் கோர்பா மண்டல அலுவலகத்தின் தலைமை மேலாளர் ஜீவரகான் காவ்டே செப்டம்பர் 27-ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின்படி, இந்தக் ‘கிளை’ செப்டம்பர் 18-ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. அங்கு 6 பேர் வேலை செய்தனர். அவருக்குப் போலி பணி நியமன கடிதங்களும் வழங்கப்பட்டன.
இந்த வழக்கில் அனில் பாஸ்கர் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
வங்கியில் வேலை தருவதாகக் கூறி பல்வேறு யு.பி.ஐ கணக்குகளில் இருந்து அனில் பாஸ்கர் மொத்தம் ரூ.6.6 லட்சம் பெற்றதாகப் போலீசார் தெரிவித்தனர்.
இந்தத் தொகையில் அனில் பாஸ்கர் ஒரு பழைய ஐ-20 காரையும் வாங்கியுள்ளார்.
விசாரணையின் போது, அனில் தனது 8 கூட்டாளிகள் குறித்துக் கூறியதாகவும், பல்வேறு போலீஸ் குழுக்கள் அவர்களைக் கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஏற்கனவே ஒரு மோசடி வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இவர் மீது, ரயில்வேயில் வேலைத் வாங்கி தருவதாகக் கூறி ரூ.7.5 லட்சம் மோசடி செய்த வழக்கு பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடந்து வருகிறது.
‘வேலைக்குப் பணம் பெற்றனர்’
இந்தப் போலி வங்கியில் பணிபுரிந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ‘வங்கியில்’ வேலை பெற்ற 6 பேரும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர், இந்த ‘வேலைக்காக’ அவர்களிடமிருந்து லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
இந்த ‘வங்கியில்’ பணிபுரிந்த ஜோதி யாதவ், தனக்குத் தெரிந்த ஒருவர் இந்த வங்கி குறித்து தகவல் கொடுத்ததாகக் கூறுகிறார். ‘வங்கியை’ அடைந்ததும், ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்து, கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, தனது கைரேகைகள் எடுக்கப்பட்டன, என்கிறார்.
ஜோதி மேலும் கூறும்போது, “இந்த வேலைக்காக என்னிடம் ரூ.2.5 லட்சம் வசூலிக்கப்பட்டது. எனக்குப் பணி நியமனக் கடிதமும் வழங்கப்பட்டது. சப்போரா கிளையில் பணி நியமனம் நடைபெறுவதாகவும், அங்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறினார்கள். நான் ஒரு மோசடியில் சிக்கியதாக உணரவேயில்லை. ஆனால் இப்போது எல்லாமே பாழாகிவிட்டது,” என்கிறார்.
கோர்பா மாவட்டத்தின் பவர்கோலா கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா, சக்தி மாவட்டத்தின் சாப்போராவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வழங்கப்படுவதாகத் தனக்கு அறிமுகமான ஒருவர் கூறியதாகக் கூறுகிறார். அங்கு சென்றபோது அவரிடம் ரூ.5 லட்சம் கேட்டுள்ளனர்.
சங்கீதா நகைகளை அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏற்பாடு செய்திருக்கிறார். மாதம் 5% வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். உறவினர்களிடம் இருந்து ரூ.50,000 ஏற்பாடு செய்திருக்கிறார். இப்படி, ரூ.2.5 லட்சம் செலுத்திய அவருக்கும் அந்த ‘வங்கியில்’ வேலை கிடைத்துள்ளது.
இந்த ‘வேலைக்காக’, அவர் ஊர்கா காவல் நிலையத்திற்கு போலீஸ் சரிபார்ப்புக்காக அனுப்பப்பட்டார். அங்கு அவர் சரிபார்ப்பும் செய்தார். ஆனால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
வேலை தருவதாகக் கூறி மக்களிடம் பணம் வசூலிப்பதற்காக மட்டும் இந்த வங்கி திறக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்கிறார் போலீஸ் அதிகாரி ஒருவர். ஆனால் வங்கியைத் திறந்ததன் உண்மையான நோக்கம் என்னவாக இருந்திருக்கும் என்பதை யூகிப்பது கடினம், என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.