1
செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை வழிபடச் சென்ற பெண்ணே மாலை ஆலயத்துக்குப் பின்புறமாக உள்ள தொண்டைமானாறு கடல் நீரேரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அச்சுவேலி, தோப்பு பகுதியைச் சேர்ந்த இராஜலிங்கம் சுபாஷினி (வயது 40) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தப் பெண் நேற்றுக் காலை வீட்டில் இருந்து ஆலயத்துக்குச் செல்வதாகச் கூறி சென்ற நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், பெண்ணின் பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றிருந்தனர்.
அதன்போதே மாலை தொண்டைமானாறு கடல் நீரேரியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறி புகைப்படங்களைப் பெற்றோரிடம் காட்டியுள்ளனர்.
அதையடுத்துப் பெற்றோர் சடலமாக மீட்கப்பட்ட பெண் தமது மகளே என அடையாளம் காட்டியுள்ளனர்.
அதேவேளை, சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் கூற முடியும் என்று தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.