பட மூலாதாரம், Ali Imran Chattha
பாகிஸ்தான் குடிமகன் ஒருவரை திருமணம் செய்துகொண்ட சரப்ஜித் கவுரின் பயண ஆவணங்களில் உள்ள சில குறைபாடுகளால் அவர் இன்னும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை.
பாகிஸ்தானின் பஞ்சாப் சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் சர்தார் ரமேஷ் சிங் அரோரா பிபிசியிடம் கூறுகையில், ஜனவரி ஐந்தாம் தேதி சரப்ஜித் கவுர் வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், ஆனால் அவருடைய பயண ஆவணங்களில் ஏற்பட்ட சில சிக்கல்களால் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
“சரப்ஜித் கவுரை மீண்டும் இந்தியா அனுப்புவதற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் இன்னும் தடையில்லா சான்றிதழை வழங்காததால், அவருடைய விசா காலாவதியானபிறகும் கூட அவர் அங்கேயே இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. எனவே, அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அவரால் சட்டபூர்வமாக நாட்டைவிட்டு வெளியேற முடியாது,” என்றார் அவர்.
இதனிடையே, சரப்ஜித் கவுர் கடந்த திங்கட்கிழமை வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டதாக அங்குள்ள வட்டாரங்கள் பிபிசி செய்தியாளர் ஷுமைலா கானுக்கு தகவல் தெரிவித்தன. கவுரின் விசா காலாவதியாகிவிட்டதால், அவரை பாகிஸ்தானைவிட்டு வெளியே அனுப்ப அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் அனுமதி வேண்டும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் கிடைக்காததால், வாகா எல்லையிலிருந்து அவர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்.
மற்றொருபுறம், தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக சரப்ஜித் கவுர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக, அவருடைய வழங்கறிஞர் அஹமது ஹசன் பாஷா பிபிசி உருதுவிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், வெளிநாட்டவர் சட்டம் 1946-ன்படி, தற்போது சரப்ஜித் கவுர் பாகிஸ்தானில் தங்க அனுமதியில்லை என்றும், அதனால் அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின், அங்கிருந்து ‘வாழ்க்கைத் துணையுடன்’ தங்குவதற்கான விசா பெற்று மீண்டும் பாகிஸ்தான் சென்று, அங்கு நிரந்தர குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பட மூலாதாரம், AFP via Getty Images
“சரப்ஜித் கவுருக்கு தற்போது ஆன்மிக விசா மட்டுமே இருக்கிறது, அது 10 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அந்த விசா சில நகரங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், அதனை நீட்டிக்கவும் முடியாது.” என்றார்.
சரப்ஜித் கவுருக்கு எதிரான வழக்கில் போராடிவரும் வழக்கறிஞர் அலி சங்கேஸி சந்து, இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
டிசம்பர் 5-ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, பஞ்சாப் காவல்துறை ஐஜி மற்றும் மத்திய விசாரணை அமைப்பு (FIA) உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முகமைகள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஃபரூக் ஹைதர் உத்தரவிட்டார். எனவே, சரப்ஜித் கவுரை கூடுமானவரை விரைந்து இந்தியா அனுப்ப பாகிஸ்தான் முகமைகள் விரும்புகின்றன.
தடுப்புக் காவலில் சரப்ஜித் கவுர் மற்றும் அவரது கணவர்
பட மூலாதாரம், Ahmad Pasha
சரப்ஜித் கவுரும் அவருடைய கணவர் நசீன் ஹுசைனும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் சர்தார் ரமேஷ் சிங் அரோரா ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 4-ஆம் தேதி சீக்கிய ஆன்மிக பயணிகள் குழுவுடன் சரப்ஜித் கவுர் பாகிஸ்தான் சென்றார். அவருடைய விசா நவம்பர் 13-ஆம் தேதி வரையே செல்லுபடியாகும் என்ற நிலையில், அவர் இந்தியா திரும்பவில்லை. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஷேக்புராவை சேர்ந்த நசீர் ஹுசைன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, அவர் தற்போதுவரை பாகிஸ்தானில் உள்ளார்.
கடந்த ஜனவரி 4-ஆம் தேதி நங்கனா சாஹிப்பில் உள்ள பெஹ்ரேவாலி எனும் கிராமத்தில் சரப்ஜித் கவுர் மற்றும் நசீர் ஹுசைன் இருப்பதை அறிந்ததும், உளவு முகமைகள் உடனடி நடவடிக்கை எடுத்ததாக, ரமேஷ் சிங் அரோரா பிபிசி உருதுவிடம் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் போது இருவரும் காவலில் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அவர்கள் இருவரும் பின்னர் நங்கனா சாஹிப் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இருவரும் தற்போது நங்கனா சாஹிப்பில் உள்ள சதார் காவல் நிலையத்தில் காவலில் உள்ளனர்.
ரமேஷ் சிங் அரோரா கூற்றுப்படி, இது குறித்து, காவல்துறை மற்றும் உளவு முகமை அதிகாரிகள் இணைந்து விசாரித்து வருகின்றனர்
விசாரணையில், சரப்ஜித் கவுர் மற்றும் நசீர் ஹுசைனுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு டிக்டாக் மூலம் தொடர்பு ஏற்பட்டதாகவும் பல சந்தர்ப்பங்களில் இருவரும் விசாவுக்காக விண்ணப்பித்தும் சட்டப்பூர்வ காரணங்களுக்காக அவர்களுக்கு விசா கிடைக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இருவரையும் துன்புறுத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு
சரப்ஜித் கவுரின் வேண்டுகோளுக்கு இணங்க, இருவரையும் துன்புறுத்த வேண்டாம் என லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது.
சரப்ஜித் கவுரின் வழக்கறிஞர் அகமது ஹசன் பாஷாவின் கூற்றுப்படி நவம்பர் 8-ஆம் தேதி இருவருடைய வீட்டிலும் பஞ்சாப் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ளுமாறு இருவரும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். கவுர் தாக்கல் செய்த மனுவின்படி, சரப்ஜித் கவுர் மற்றும் நசீர் ஹுசைனின் திருமண வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
சரப்ஜித் கவுரை பஞ்சாப் காவல்துறை துன்புறுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ள லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஃபரூக் ஹைதர், இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் காவல்துறை ஐஜிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எனினும், ஷேக்புரா காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரானா யூனுஸ் பிபிசி உருதுவிடம் கூறுகையில், எந்தவொரு இந்திய பெண்ணையோ அல்லது அவரின் பாகிஸ்தானிய கணவரையோ காவல்துறையினர் துன்புறுத்தவில்லை என்று கூறியுள்ளார். “இதுதொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை மற்றும் காவல்துறையினருக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை.” என்றார் அவர்.
“இந்த விவகாரம் மிகவும் உணர்வு ரீதியானது. இதை வெவ்வேறு முகமைகள் விசாரித்துவருகின்றன. என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் அது பாகிஸ்தான் சட்டப்படியே அமையும்,” என்றார்.
சரப்ஜித் கவுரின் வழக்கறிஞர் கூறுகையில், “இரு நாடுகளின் சட்ட முகமைகளின் அதிகாரிகளுக்கு முன்பாக இருவருடைய வாக்குமூலங்களையும் பதிவு செய்ய இருவரையும் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி என்னுடைய இடத்திற்கு அழைத்திருந்தேன். ஆனால், உறுதியளித்தபடி இருவரும் வரவில்லை. நசீர் ஹுசைனின் மொபைல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இஸ்லாமுக்கு மதம் மாறி திருமணம்
பட மூலாதாரம், Police
சீக்கிய ஆன்மிக பயணிகளுடன் நவம்பர் 4-ஆம் தேதி பாகிஸ்தான் சென்றடைந்த சரப்ஜித் கவுர், அதற்கடுத்த நாளான குரு நானக் ஜெயந்தியன்று நங்கனா சாஹிப் சென்றுள்ளார்.
நவம்பர் 7-ஆம் தேதி ஷேக்புரா நீதித்துறை நடுவரிடம் சரப்ஜித் கவுர் அளித்த வாக்குமூலத்தின்படி, பாகிஸ்தான் சென்றதும் சொந்த விருப்பத்தின் பேரில் இஸ்லாம் மதத்திற்கு மாறி, பாகிஸ்தானை சேர்ந்த நசீர் ஹுசைன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அவருடைய வழக்கறிஞர் அஹமது ஹசன் பாஷா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஷேக்புரா நீதித்துறை நடுவர் முஹமது காலித் மஹ்மூத் வரைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, இஸ்லாமிய மதகுரு காரி ஹஃபீஸ் ரிஸ்வான் பட்டி முன்பு சரப்ஜித் கவுர் இஸ்லாமுக்கு மாறி, ‘நூர்’ என்ற பெயரை வைத்துக்கொண்டார்.
இஸ்லாமுக்கு மாறியதாக அவருக்கு நவம்பர் 5-ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருமண சான்றிதழின்படி, நசீர் ஹுசைனுக்கு 43 வயது, சரப்ஜித் கவுருக்கு 48.5 வயது. அச்சான்றிதழின்படி, திருமணத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் என்பது வரதட்சணையாக முடிவு செய்யப்பட்டது.
அதில் நசீர் ஹுசைன் ஏற்கெனவே திருமணமானவர் என்பதும் இரண்டாவது திருமணம் செய்வதற்கு அவருக்கு அனுமதி தேவையில்லை என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னை பொய் வழக்கு போடுமாறு காவல்துறையினர் அச்சுறுத்துவதாக, சரப்ஜித் கவுர் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதித்துறை நடுவர் முஹமது காலித் மஹ்மூத் வரைச் முன்பு பாகிஸ்தான் தண்டனைச் சட்டம் பிரிவு200-யின்படி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நசீர் ஹுசைனை சுய விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்துகொண்டதாக சரப்ஜித் கவுர் தெரிவித்துள்ளார்.
அதில் சரப்ஜித் கவுர், “யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை, என் விருப்பத்தின்பேரிலேயே திருமணம் செய்துள்ளேன். மூன்று ஆடைகளுடன் மட்டுமே நான் என் பெற்றோரின் வீட்டிலிருந்து வந்துள்ளேன், வேறு எதையும் எடுத்து வரவில்லை,” என தெரிவித்துள்ளார்.
தன்னுடைய வாக்குமூலத்தில், “எனக்கு திருமணமானதால் காவல்துறையினர் மிகவும் கோபப்பட்டனர். நவம்பர் 5-ஆம் தேதி இரவு 9 மணியளவில் என் வீட்டுக்குள் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக நுழைந்தனர். தங்களுடன் வருமாறு காவல்துறையினர் அழைத்தனர், நான் மறுத்தபோது அவர்கள் கோபமடைந்தனர்,” என தெரிவித்துள்ளார்.
“நான் கத்தியபோது எங்களின் அண்டைவீட்டார் வந்தனர்,” என தெரிவித்துள்ளார். தனக்கும் தன்னுடைய கணவருக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் சரப்ஜித் கோரியுள்ளார்.
பட மூலாதாரம், PRADEEP SHARMA/BBC
9 ஆண்டுகால தொடர்பு
சரப்ஜித் கவுர் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள கபுர்தலா மாவட்டத்தை சேர்ந்தவர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கபுர்தலா காவல்துறை தெரிவித்துள்ளது. சுமார் 2,000 சீக்கிய ஆன்மிக பயணிகளில் ஒருவராக சரப்ஜித் பாகிஸ்தான் சென்றார். 10 நாட்கள் பயணத்திற்கு பிறகு அந்த குழுவினர் நவம்பர் 13-ஆம் அததி இந்தியா திரும்பினர். ஆனால் சரப்ஜித் இந்தியா திரும்பவில்லை.
பிபிசி பஞ்சாபி செய்திப்படி, இதுகுறித்து தகவல் அறிந்ததும் நவம்பர் மாதம் விசாரணையை தொடங்கியதாக கபுர்தலா உதவி காவல் கண்காணிப்பாளர் தீரேந்திரா வர்மா தெரிவித்துள்ளார். சரப்ஜித் இஸ்லாம் மதத்திற்கு மாறி திருமணம் செய்துகொண்டது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்தார்.
அப்படியான தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்படுவதாக தெரிவித்த அவர், இதுதொடர்பாக எவ்வித உறுதியான ஆதாரங்களோ அல்லது தகவல்களோ இல்லை என்றார்.
பிபிசி பஞ்சாபி செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபினிடம் பேசிய சிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழு செயலாளர் பிரதாப் சிங், இதுதொடர்பாக விசாரித்த பிறகு, திருமணமாகாத எந்த பெண்ணும் இனி இத்தகைய குழுக்களுடன் அனுப்பப்பட மாட்டாது என தங்களின் குழு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, சரப்ஜித் கவுர் ஏற்கெனவே விவாகரத்தானவர், அவருக்கு முந்தைய திருமணத்தின் வாயிலாக இரு மகன்கள் உள்ளனர். சுமார் 30 ஆண்டு காலமாக அவருடைய முன்னாள் கணவர் இங்கிலாந்தில் வாழ்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கபுர்தலா மாவட்டத்தில் உள்ள தல்வாண்டி சௌதரியான் கிராமத்தின் காவல்நிலைய பொறுப்பாளர் (SHO) கிராம பஞ்சாயத்து தலைவரின் வாயிலாக தான் இதுகுறித்து அறிந்ததாக தெரிவித்தார்.
இதனிடையே பாகிஸ்தானில் உள்ள சரப்ஜித் கவுரின் வழக்கறிஞர் அஹமது ஹசன் பாஷா பிபிசிக்கு அனுப்பிய காணொளியில், இந்தியாவில் தான் விவாகரத்து பெற்றவர் என்றும், தன் சொந்த விருப்பத்தின்பேரில் இஸ்லாம் மதத்திற்கு மாறி, நசீர் ஹுசைனை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாகவும் சரப்ஜித் கூறியுள்ளார்.
தனக்கு நசீர் ஹுசனை கடந்த 9 ஆண்டுகளாக தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.
வழக்கறிஞர் அஹமது ஹசன் பாஷா கூறுகையில், இன்ஸ்டாகிராம் வாயிலாக பேசி வந்த சரப்ஜித் மற்றும் நசீர் இருவரும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர்.
சட்டப்பூர்வ உதவிக்காக இருவரும் தன்னிடம் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு