பட மூலாதாரம், Getty Images
சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஒன்பது மாதங்களாகத் தங்கியிருந்த சர்வதேச விண்வெளி நிலையம், 2031ஆம் ஆண்டில் தனது பணியை நிறைவு செய்கிறது.
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) 1998இல் தொடங்கப்பட்டதில் இருந்து, விண்வெளித் துறையில் முன்னேற்றத்தின் ஓர் அடையாளமாக இருந்து வருகிறது.
பூமியில் இருந்து சுமார் 400 – 415கி.மீ உயரத்தில் அமைந்திருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம், 109 மீட்டர் நீளம் (ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு) மற்றும் நான்கு லட்சம் கிலோவுக்கும் அதிகமான எடை (400 டன், ஏறக்குறைய 80 ஆப்பிரிக்க யானைகளுக்கு நிகரான எடை) கொண்டது. இது 1998 முதல் 2011 வரை கட்டமைக்கப்பட்டது.
நாற்பதுக்கும் அதிகமான விண்வெளித் திட்டங்கள் மூலம் பூமியில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, அவை விண்வெளியில் ஒன்று சேர்க்கப்பட்டன. அப்படியிருக்க, இந்தப் பிரமாண்டமான விண்வெளி நிலையம் செயலிழந்தால் என்ன ஆகும்?
விண்வெளி நிலையம் பூமியின் தாழ் வட்டப்பாதையில் (Low earth orbit – பூமியிலிருந்து 160-2000 கிமீ வரையிலான உயரம்), அதுவும் பூமியின் மேற்பரப்பிலிருந்து வெறும் 415 கி.மீ உயரத்தில் சுற்றி வருகிறது. அப்படி இருக்கும்போது, அதன் பாகங்கள் பூமியில் எங்கு விழும்?
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஓய்வு அளிக்கப்படுவது ஏன்?
சர்வதேச விண்வெளி நிலையம், மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பயணிக்கிறது. அதாவது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது.
இத்தகைய வேகத்தில் சுற்றும் ஒரு பிரமாண்ட கட்டமைப்பு திடீரென கட்டுப்பாடின்றி, பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்வதே அச்சமூட்டுவதாக இருக்கும்.
ஆனால், அப்படி ஒரு ஆபத்தான சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே 2031இல், சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்த நாசா முடிவு செய்துள்ளது.
அதற்குக் காரணம் மிகவும் எளிமையானது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வயதாகிவிட்டது.
ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்து கூட்டாக இந்த விண்வெளி நிலையத்தை 1998இல் கட்டமைத்தன. பிறகு பல்வேறு கட்டங்களாக அது மேம்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் 15 ஆண்டுகள் செயல்படுவதற்காகவே இது வடிவமைக்கப்பட்டது.
இருப்பினும், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் விண்வெளித் துறையின் சர்வதேச கூட்டு முயற்சியில் அதன் தொடர்ச்சியான வெற்றி காரணமாக, விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.
இறுதியாக, முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகத்தில் (2021ஆம் ஆண்டு) இந்த விண்வெளி நிலையத்தின் ஆயுளை 2030 வரை நீட்டிப்பதாக முடிவு செய்யப்பட்டது.
பட மூலாதாரம், NASA
ஆனால், அதே ஆண்டில்(2021) இந்த விண்வெளி நிலையம் தொடர்பாக ரஷ்யாவில் இருந்து ஓர் எச்சரிக்கை வெளியானது. காலாவதியான கருவிகள், வன்பொருள்கள் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சரிசெய்ய முடியாத கோளாறுகள் ஏற்படலாம் என்பதே அந்த எச்சரிக்கை.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்ய பகுதியில் உள்ள கருவி அமைப்புகளில் 80 சதவீதம் காலாவதியானவை என்றும், இது தவிர, சிறிய விரிசல்கள் தென்படுவதாகவும் அது காலப்போக்கில் பெரிதாகலாம் என்றும் ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் விண்வெளி வீரர் விளாதிமிர் சோலோவ்யோவ் தெரிவித்தார்.
இதற்கிடையே சமீபத்தில், ஈலோன் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், 2030 வரைகூட அவகாசம் அளிக்கக்கூடாது, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்தை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார். அதேநேரம், இது தொடர்பான முடிவை அதிபர் டிரம்ப்தான் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
“சர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுப்பாதையில் இருந்து அகற்றுவதற்கான பணிகளைத் தொடங்க வேண்டிய நேரம் இது. எந்தக் காரணத்திற்காக அது நிறுவப்பட்டதோ, அது பூர்த்தியாகிவிட்டது. இனி நாம் செவ்வாய்க் கோளில் கவனம் செலுத்துவோம்” என்று அந்தப் பதிவில் கூறியிருந்தார் ஈலோன் மஸ்க்.
சர்வதேச விண்வெளி நிலையம் எவ்வாறு செயலிழக்கும்?
பட மூலாதாரம், NASA
முன்பே கூறியது போல, ஒரு கால்பந்து மைதானம் அளவுள்ள விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வரும்போது, வளிமண்டல இழுவை (Drag) காரணமாக அவ்வப்போது அதன் சுற்றுப்பாதையில் பாதிப்பு ஏற்படும்.
அதை அப்படியே விட்டுவிட்டால், சூரியனின் தாக்கம் காரணமாகவும் அது பாதிக்கப்பட்டு ஓரிரு ஆண்டுகளில் தனது சுற்றுப்பாதையில் இருந்து முழுவதுமாக விலகி, பூமியை நோக்கி விழும்.
அது பூமியில் வாழும் மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவேதான் ‘ரீ-பூஸ்ட்’ (Re-boost- விண்வெளி நிலையம் தொடர்ந்து செயல்படுவதற்கான உந்துதல்) என்ற செயல்முறை தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தைச் செயலிழக்கச் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று நாசா கூறுகிறது. அதன் முதல்கட்டமாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையானது வளிமண்டல இழுவையின்கீழ் தானாகச் சிதைவதற்கு அனுமதிக்கப்படும். அதாவது ‘ரீ-பூஸ்ட்’ செயல்முறை குறைக்கப்படும்.
அதுமட்டுமின்றி பிராக்ரஸ் (ரஷ்யாவின் விண்கலம்) போன்ற விண்வெளி நிலையத்துடன் டாக் (Dock) செய்யப்பட்ட விண்கலம் மற்றும் பிற உந்துவிசை மாடியூல்கள் மூலம், விண்வெளி நிலையத்தின் வேகத்தைக் குறைக்கும் செயல்முறைகள் மேற்கொள்ளப்படும்.
அதன் அத்தியாவசியமற்ற மாடியூல்கள் பிரிக்கப்பட்டு, தனித்தனியாக சுற்றுப்பாதையை விட்டு நீக்கப்படலாம். இந்தக் காலகட்டத்தில் (2026 முதல் 2030), 415 கி.மீ என்ற உயரத்திலிருந்து படிப்படியாக அதன் உயரம் குறையும்.
பட மூலாதாரம், NASA
அதன் பிறகு விண்வெளி நிலையத்தின் உயரம் 280 கிலோமீட்டராக குறைக்கப்படும். பின்னர் பிரத்யேக விண்கலத்தின் உதவியுடன் அதன் தூரத்தை 120 கிலோமீட்டராக குறைக்கும் வகையில் இறுதி உந்துதல் அளிக்கப்படும்.
இந்த முயற்சிகள் திட்டமிட்டப்படி வெற்றியடையும் பட்சத்தில், பூமியில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவை சர்வதேச விண்வெளி நிலையம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு நிலையம் 120 கிலோமீட்டர் தொலைவை அடைந்தால், அப்போது பூமியின் வளிமண்டலத்தை அது மணிக்கு 29 ஆயிரம் கிலோமீட்டர் என்ற அதிபயங்கர வேகத்தில் தாக்கும்.
ஆனால், வளிமண்டல மறுநுழைவின்போது அதீத வெப்பத்தின் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிடும் என நாசா கூறுகிறது.
மீதமுள்ள பாகங்கள் பசிபிக் பெருங்கடலின் ‘பாயின்ட் நீமோ’ எனும் பகுதியில் விழும். அது மக்கள் வாழும் பகுதி இல்லை என்பதாலும், வழக்கமாகத் தேவையற்ற விண்கலங்கள் இங்கு விழும் என்பதாலும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று நாசா கூறுகிறது.
இவ்வாறு சர்வதேச விண்வெளி நிலையத்தை, செயலிழக்கச் செய்து அழிக்க, ஈலோன் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாசா தேர்வு செய்தது. அதற்காக அந்த நிறுவனத்துடன் 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ஏழாயிரம் கோடி) மதிப்புள்ள ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்று என்ன?
பட மூலாதாரம், ISRO
இந்த விண்வெளி நிலையத்திற்கு ஓய்வு கொடுப்பதற்கு முன்பே தனியார் விண்வெளி நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்றும், அதன் மூலம் வணிக அடிப்படையில் விண்வெளிச் சேவைகளை, குறிப்பாக பூமியின் தாழ்வட்டப் பாதைக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என நாசா தெரிவிக்கிறது.
இதற்காக, ஆக்சியம் ஸ்பேஸ், ப்ளூ ஆரிஜின் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன. 2031க்குப் பிறகு, பூமியின் தாழ்வட்டப் பாதையைக் கடந்து சந்திரன் மற்றும் செவ்வாய்க் கோள் போன்ற பகுதிகளுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களில் கவனம் செலுத்தப் போவதாகவும் நாசா கூறியுள்ளது.
அதேநேரம் பிற நாடுகளும், தங்களுக்கான விண்வெளி நிலையங்களைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனப்படும் இந்திய விண்வெளி மையத்தை இஸ்ரோ 2035ஆம் ஆண்டு நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மையத்தின் முதல் பாகம் 2028ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் எஸ். சோம்நாத் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
முதல் பாகம் விண்ணில் செலுத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் கழித்து இந்தியா தனது விண்வெளி மையத்தை முழுமையாக இயக்கத் தயாராக இருக்கும்.
கடந்த 2022ஆம் ஆண்டு சீனா தனது டியாங்காங் அல்லது ‘சொர்க்க மாளிகை’ எனப்படும் விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. தற்போதுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தைப் போல பல நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பில் உருவாக்கப்படாமல், சீனா மட்டுமே தனியாக இதை உருவாக்கியுள்ளது.
வரும் 2031ஆம் ஆண்டுக்குப் பிறகு, இது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்றாக இருக்கும் என சீனா உறுதியாக நம்புகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு