• Wed. Feb 18th, 2026

24×7 Live News

Apdin News

சார்ல்ஸ் டார்வின் ‘கடவுளை கொன்று’ பரிணாம கோட்பாட்டை கண்டுபிடிக்க வித்திட்ட பீகிள் கடற்பயணம்

Byadmin

Feb 18, 2026


நம்பிக்கையா? அறிவியலா? – டார்வின் கண்ட பரிணாம உலகம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1835ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள், தென் அமெரிக்காவின் ஈக்வடார் நாட்டுக் கடற்கரையில் இருந்து சுமார் 965 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட கலாபகோஸ் தீவுக் கூட்டத்திற்கு, பிரிட்டிஷ் ஆய்வுக் கப்பலான எச்.எம்.எஸ். பீகிள் சென்றடைந்தது.

இந்தக் கப்பலின் தளபதி கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராய். இங்கிலாந்தின் கப்பற்படை, ராயல் நேவிக்காக தென் அமெரிக்கக் கடற்கரை வரைபடங்களைத் தயாரிப்பதே அவரது முக்கியப் பணி. சில ஆண்டுகளுக்கு முன்புதான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இளம் இயற்கை விஞ்ஞானியான சார்ல்ஸ் டார்வினும் அக்கப்பலில் இருந்தார்.

கலாபகோஸ் கடற்பரப்பில் வெறும் ஐந்து வாரங்கள் மட்டுமே பீகிள் கப்பல் தங்கியது; பின்னர் அதன் பயணத்தைத் தொடர்ந்தது. ஆனால் இந்த ஐந்து வாரத்தில் டார்வின் மேற்கொண்ட ஆய்வு, அறிவியல் வரலாற்றில் கலாபகோஸுக்கு அழியாத இடத்தை வழங்கியது.

நியூட்டனின் ஆப்பிளை போல, ஆர்க்கிமிடீசின் குளியலறைத் தருணத்தைப் போல, பரிணாமக் கொள்கையை வகுக்க இந்தத் தீவுகளில் வாழ்ந்த, குருவியைப் போன்ற சாயலுடைய பல விதமான ஃபின்ச் பறவைகள் டார்வினுக்கு வழிகாட்டின. எனவே அவை அறிவியல் கண்டுபிடிப்பு வரலாற்றில் முக்கிய நினைவுச் சின்னங்களாகக் கொண்டாடப்படுகின்றன.

‘கடவுளைக் கொன்ற’ பீகிள் பயணம்

“பிள்ளையாரைப் பிடிக்கப் போய்க் குரங்காய் முடிந்த கதை” என்பார்கள். அதுதான் சார்ல்ஸ் டார்வின் வாழ்விலும் நடந்தது. தொடக்கத்தில் டார்வினின் நோக்கம் வேறாக இருந்தது. ஆனால் அறிவைத் தேடிச் சென்றபோது அவர் சென்றடைந்த இறுதி நிலை, அதற்கு நேர் எதிரானதாக இருந்தது.

By admin