பஞ்சாபி ஹிப்-ஹாப் நட்சத்திரமான சித்து மூஸே வாலா, கூலிப்படையைச் சேர்ந்த நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சில மணிநேரங்களுக்குள், கோல்டி பிரார் என்ற பஞ்சாபி கேங்ஸ்டர் இந்தக் கொலைக்கு உத்தரவிட்டதாக பேஸ்புக்கில் பொறுப்பேற்றார்.
ஆனால் கொலை நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், யாரும் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவில்லை. கோல்டி பிரார் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவர் இருக்கும் இடமும் தெரியவில்லை.
இப்போது பிபிசி ஐ புலனாய்வு, பிராரை தொடர்புகொண்டு சித்து மூஸே வாலா எப்படி, ஏன் குறிவைக்கப்பட்டார் என்று கேட்டது.
எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் தெளிவாக அவர் பதிலளித்தார்.
“அவரது ஆணவத்தால், அவர்(மூஸ்வாலா) மன்னிக்க முடியாத சில தவறுகளைச் செய்தார்” என்று கோல்டி பிரார் பிபிசியிடம் தெரிவித்தார்.
“அவரைக் கொல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. அவர் தனது செயல்களுக்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. ஒன்று அவர் அல்லது நாங்கள் என்ற நிலை இருந்தது. அவ்வளவுதான்,” என்றார்.
கடந்த 2022 மே மாதத்தில், ஒரு கோடைக்கால மாலை வேளையில், சித்து மூஸே வாலா தனது கருப்பு நிற மஹிந்திரா தார் எஸ்யூவி வாகனத்தில் பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்தின் தெருக்களில் சென்று கொண்டிருந்தார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டு கார்கள் அவரைப் பின்தொடரத் தொடங்கின.
சிசிடிவி காட்சிகளில், அவர் வளைந்து வளைந்து செல்வதைக் காண முடிந்தது. பின்னர் சாலையின் ஒரு திருப்பத்தில், சித்து மூஸே வாலாவின் கார் சுவற்றின் அருகே சுற்றி வளைக்கப்பட்டது. சிறிதுநேரம் கழித்து துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்.
மூஸ்வாலா மீது 24 குண்டுகள் சுடப்பட்டன
பட மூலாதாரம், Getty Images
இந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் மொபைல் காட்சிகளில் பதிவாகியுள்ளன. அவரது எஸ்யுவி கார் தோட்டாக்களால் துளைக்கப்பட்டிருந்தது, கண்ணாடி உடைந்திருந்தது.
அருகில் இருந்தவர்கள் நடுங்கும் குரல்களில் தங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தினர்.
“யாராவது காரில் இருந்து அவர்களை இறக்குங்கள்.”
“கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்.”
“மூஸ்வாலா சுடப்பட்டுள்ளார்.”
ஆனால் மிகவும் தாமதமாகிவிட்டது. மருத்துவமனையை அடைந்த நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உடற்கூறாய்வு அறிக்கையில் அவர் 24 முறை சுடப்பட்டதாகப் பின்னர் தெரிய வந்தது.
இன்றைய பஞ்சாபின் மிகப்பெரிய கலாசார சின்னமும் 28 வயது ராப் பாடகருமான ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். தாக்குதலின்போது அவருடன் காரில் அமர்ந்திருந்த மூஸ்வாலாவின் உறவினர் மற்றும் நண்பர் காயமடைந்தனர். ஆனால் உயிர் தப்பினர்.
இறுதியில் துப்பாக்கி ஏந்திய 6 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் ஏகே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை ஏந்திச் சென்றனர்.
கொலை நடந்து சில வாரங்களுக்குப் பிறகு, சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் “என்கவுன்டர்” என்று விவரித்த சம்பவத்தில் இரண்டு துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டனர்.
பல கைதுகள் செய்யப்பட்டாலும், கொலைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. கொலைக்கு உத்தரவிட்டதாகக் கூறும் கோல்டி பிரார், கொலை நடந்த நேரத்தில் இந்தியாவில் இல்லை. அவர் கனடாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.
கோல்டி பிரார் உடனான எங்கள் உரையாடல் ஆறு மணிநேரம் நீடித்தது. வாட்ஸ் ஆப்பில் குரல் வழிக் குறுஞ்செய்திகள் மூலம் இது மேற்கொள்ளப்பட்டது.
இது மூஸ்வாலா கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான வாய்ப்பை எங்களுக்கு வழங்கியது. மேலும், கொலைக்குப் பொறுப்பேற்ற நபரின் நோக்கத்தை அறிய இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.
மூஸ்வாலாவிடம் இருந்த டூபக் ஷகுரின் தாக்கம்
பட மூலாதாரம், Joseph Okpako/Getty Images
சித்து மூஸே வாலாபஞ்சாபின் கிராமப்புறத்தில் ஒரு ஜாட்-சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். அவரது பெயர் சுப்தீப் சிங் சித்து.
கடந்த 2016ஆம் ஆண்டில், அவர் பொறியியல் படிக்க கனடாவுக்கு இடம்பெயர்ந்தார். அவரது பயணம் ஏராளமான பஞ்சாபி மக்களின் பயணத்தைப் போன்ற ஒன்றுதான்.
தனது கிராமமான மூசாவில் இருந்து இடம் பெயர்ந்த பிறகு, அங்குதான் அவர் ஒரு ராப் பாடகராக மாறுவதற்கான உத்வேகத்தைப் பெற்றார். பஞ்சாபி இசையின் செல்வாக்கு மிக்க கலைஞர்களில் ஒருவராக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
ஐந்தே ஆண்டுகளில் மூஸ்வாலா பஞ்சாபி ஹிப்-ஹாப்பின் ஒப்பிட முடியாத குரலாக வளர்ந்தார். அவரது தனித்துவமான, புதுமையான பாணியால், அவரது பாடல்கள் அடையாளம் மற்றும் அரசியல், துப்பாக்கிகள் மற்றும் பழிவாங்கல் குறித்து ஆராய்ந்தன.
மூஸ்வாலா பஞ்சாபி இசை கூற விரும்பியவற்றின் எல்லைகளைக் கடந்தார். 1996ஆம் ஆண்டு 25 வயதில் கொலை செய்யப்பட்ட ராப் பாடகரான டூபக் ஷகுரின் தாக்கம் அவரிடம் பெரிதும் இருந்தது.
“ஆளுமையைப் பொறுத்தவரை, நான் அவரைப் போல (டூபக் ஷகுர்) இருக்க விரும்புகிறேன்,” என்று ஒரு நேர்காணலில் மூஸ்வாலா கூறினார்.
“அவர் இறந்த நாளில், மக்கள் அவருக்காக அழுதனர். அதுதான் எனக்கு வேண்டும். நான் இறக்கும்போது மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்,” என்றார்.
தனது புகழ்பெற்ற வாழ்க்கையில், பஞ்சாபின் இருண்ட அத்தியாயங்களை, அதாவது கேங்ஸ்டர் கலாசாரம், வேலையின்மை, அரசியல் சிதைவு ஆகியவற்றை பாடகர் மூஸ்வாலா அம்பலப்படுத்தினார். இது கிராமப்புற வாழ்க்கையின் பழைய நினைவுகளையும் தூண்டியது
மூஸ்வாலா ஓர் உலகளாவிய சக்தியாகவும் இருந்தார். யூட்யூபில் தனது இசை வீடியோக்களில் ஐந்து பில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களுடன், அவர் பிரிட்டன் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களை அடைந்தார். பர்னா பாய் போன்ற சர்வதேச ஹிப்ஹாப் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
இந்தியா, கனடா, பிரிட்டன் மற்றும் அதற்கும் அப்பால் மூஸ்வாலா விரைவாக ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அவர்கள் அவரை ஒரு சின்னமாகவும் கிளர்ச்சியாளராகவும் பார்த்தார்கள்.
ஆனால், புகழுக்கு ஒரு விலை கொடுக்க வேண்டும். அவர் ஒரு நட்சத்திரமாக உயர்ந்து கொண்டிருந்தார். மேலும், சமூக உணர்வு மிக்கப் பாடல்கள் இருந்தபோதிலும், மூஸ்வாலா ஆபத்தான பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.
அவரது கலகத்தனமான அணுகுமுறை, புகழ் மற்றும் வளர்ந்து வரும் செல்வாக்கு பஞ்சாபின் மிகவும் பயங்கரமான கேங்ஸ்டர்களின் கவனத்தை ஈர்த்தது.
அவர்களில் கோல்டி பிரார் மற்றும் அவரது நண்பர் லாரன்ஸ் பிஷ்னோயும் அடக்கம். அந்த நேரத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் இந்தியாவின் உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
முன்பு மாணவர் தலைவராக இருந்த பிஷ்னோய்
பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
பிஷ்னோயால் இயக்கப்படும் கும்பல்களின் நெட்வொர்க்கில் ஒரு முக்கிய நபர் என்பதைத் தவிர கோல்டி பிரார் பற்றி அதிகம் தெரியவில்லை. அவர் இன்டர்போலின் சிவப்புப் பட்டியலில் உள்ளார்.
கொலைகளைத் திட்டமிடுவது, அச்சுறுத்தல்கள் விடுப்பது, குற்றப் பின்னணி கொண்ட கும்பலின் எல்லையை விரிவுபடுத்துவது அவரின் வேலை.
மூஸ்வாலா சென்று ஓர் ஆண்டு கழித்து, கோல்டி பிரார் 2017இல் கனடாவுக்கு குடிபெயர்ந்ததாக நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் அவர் ஒரு லாரி ஓட்டுநராகப் பணியாற்றினார்.
பிஷ்னோய் ஒரு காலத்தில் மாணவர் தலைவராக இருந்தார். பஞ்சாபில் வன்முறைகள் நிறைந்த கல்வி வளாக அரசியலின் ஒரு பகுதியாக ஆனார். பின்னர் அவர் இந்தியாவின் மிகவும் ஆபத்தான குற்றவியல் சூத்திரதாரிகளில் ஒருவராக உருவெடுத்தார்.
தி டிரிப்யூனின் துணை ஆசிரியர் ஜூபிந்தர்ஜித் சிங் கூற்றுப்படி, பிஷ்னோய் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து (காவல்துறை) வழக்குகளும் மாணவர் அரசியல் மற்றும் மாணவர் தேர்தல்களுடன் தொடர்புடையவை. “இதில் அடிப்பது, கடத்துவது, எதிர்க்கும் மாணவர்களைக் காயப்படுத்துவது ஆகியவை அடங்கும்.”
இதன் காரணமாக அவர் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அவர் மேலும் “கடுமையானவராக” மாறிவிட்டார் என்று பஞ்சாப் காவல்துறையின் குண்டர் தடுப்புப் பணிக்குழுவின் உதவி ஆய்வாளர் ஜெனரல் குர்மீத் சிங் சௌகான் கூறுகிறார்.
அதுகுறித்துப் பேசிய அவர், “சிறைக்குச் சென்ற பிறகு அவர் குற்றங்களில் ஆழமாக ஈடுபடத் தொடங்கினார். பின்னர் அவர் தனது சொந்த கும்பலை உருவாக்கினார். அது குற்றக் கும்பல்களுக்கு இடையிலான விஷயமாக மாறியபோது, அவர்கள் உயிர் வாழப் பணம் தேவைப்பட்டது.
தங்கள் கும்பலுக்கு அதிக ஆட்களும் ஆயுதங்களும் தேவைப்பட்டன. அதற்கெல்லாம் பணம் தேவைப்பட்டது. அதற்கு ஒன்று மிரட்டிப் பணம் பறித்தல் அல்லது குற்றத்தில் ஈடுபட வேண்டும்” என்றார்.
‘பிஷ்னோய், மூஸ்வாலா இடையிலான பேச்சுவார்த்தைகள்’
தனக்கென ஒரு பிரத்யேக இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தன்னைப் பின்பற்றும் ஒரு பெரிய கும்பலையும் கொண்டிருக்கும் 31 வயதான பிஷ்னோய், தனது கும்பலை சிறையில் இருந்துகொண்டு வழிநடத்துகிறார்.
“பிஷ்னோய் சிறையில் இருப்பதால், பிரார் கும்பல்களைக் கையாளுகிறார்” என்று உதவி ஆய்வாளர் ஜெனரல் சௌகான் கூறுகிறார்.
பிராரை அணுகுவதற்கு பிபிசி ஐ குழுவுக்கு ஓர் ஆண்டு ஆனது. இதில் ஆதாரங்களைச் சேகரிப்பது, பதில்களுக்காகக் காத்திருப்பது, படிப்படியாக முக்கிய நபரையே நெருங்குவது ஆகியவை அடங்கும்.
ஆனால், நாங்கள் பிராரை தொடர்புகொண்டபோது, அவரும் பிஷ்னோயும் மூஸ்வாலாவை எப்படி, ஏன் எதிரியாகக் கருதினார்கள் என்பது பற்றிய புதிய வெளிச்சத்தை அவருடனான உரையாடல் வெளிப்படுத்தியது.
பிஷ்னோய் உடன் மூஸ்வாலாவுக்கு இருந்த தொடர்பு அவரது கொலை நடப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பதுதான் இந்த உரையாடலில் முதலில் வெளிச்சத்திற்கு வந்த விஷயம்.
“லாரன்ஸ் (பிஷ்னோய்) சித்துவுடன் (மூஸே வாலா) தொடர்பில் இருந்தார். அவர்களை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஒருபோதும் கேட்டதில்லை. ஆனால் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.” என்றார் பிரார்.
“லாரன்ஸை மகிழ்விக்க, சித்து ‘காலை வணக்கம், இரவு வணக்கம்’ போன்ற குறுஞ்செய்திகளை அனுப்புவார்.”
பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசிய மூஸ்வாலாவின் நண்பர் ஒருவர், பிஷ்னோய் 2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மூஸ்வாலாவுடன் தொடர்பில் இருந்ததாகவும், பிஷ்னோய் சிறையில் இருந்து மூஸ்வாலாவுக்கு அழைத்து அவரது இசையை விரும்புவதாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.
‘கபடிப் போட்டி காரணமாக வெடித்த சர்ச்சை’
பட மூலாதாரம், Getty Images
மூஸ்வாலா இந்தியா திரும்பிய பிறகு அவர்களுக்கு இடையிலான ‘முதல் தகராறு’ ஏற்பட்டதாக பிரார் எங்களிடம் கூறினார். இந்தத் தகராறு பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கபடிப் போட்டியில் தொடங்கியது.
மூஸ்வாலா இந்தப் போட்டியை விளம்பரப்படுத்தியதாக பிரார் கூறினார். அது பிஷ்னோய்க்கு எதிரான பாம்பிஹா கும்பலால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது சூதாட்டம் மற்றும் கேங்ஸ்டர் செல்வாக்கு அதிகமாக உள்ள ஒரு விளையாட்டு.
பிபிசி ஐ குழுவிடம் பேசிய பிரார், “இது எங்கள் எதிரிகள் வரும் கிராமம். அவர் எங்கள் எதிரிகளை ஊக்குவித்து வந்தார். இதனால் லாரன்ஸும் மற்றவர்களும் அவர் மீது கோபம் கொண்டனர். அவர்கள் சித்துவை மிரட்டி, அவரை விடமாட்டோம் என்று கூறினர்” என்றார்.
இருப்பினும், மூஸ்வாலாவுக்கும் பிஷ்னோய்க்கும் இடையிலான தகராறு பிஷ்னோயின் கூட்டாளியான விக்கி மிதுகேடாவின் உதவியுடன் தீர்த்து வைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2021இல் மொஹாலி வாகன நிறுத்துமிடத்தில் மிதுகேடா குல்பல்களால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, சித்து மூஸே வாலா மீதான பிஷ்னோயின் விரோதம் மீள முடியாத நிலையை எட்டியதாக பிரார் கூறினார்.
மிதுகேடாவின் கொலைக்கு பாம்பிஹா கும்பல் பொறுப்பேற்றது.
துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு ஷகன்ப்ரீத் சிங் தகவல் மற்றும் தளவாட ஆதரவை வழங்கியதற்கான ஆதாரங்களை மேற்கோள் காட்டி, மூஸ்வாலாவின் நண்பரும் ஒரு காலத்தில் மேலாளராக இருந்தவருமான ஷகன்ப்ரீத் சிங் பெயரை போலீசார் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஷகன்ப்ரீத் சிங் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று ஆஸ்திரேலியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த வழக்கில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மூஸ்வாலா மறுத்திருந்தார்.
கொலைக்கு கோல்டி பிரார் கூறிய காரணம் என்ன?
ஆனால், மூஸ்வாலா ஷகன்ப்ரீத் சிங்கின் நண்பர், அவர் பம்பிஹா கும்பலுடன் தொடர்புடையவர் என்ற கருத்து அவரது உயிரைப் பறித்தது.
எந்த ஆதாரத்தையும் வழங்க முடியாது, ஆனால் மிதுகேடா கொலையில் பாடகர் (மூஸ்வாலா) ஈடுபட்டிருந்தார் என்பது தனக்கு உறுதியாகத் தெரியும் என்றார் பிரார்.
மிதுகேடா கொலைக்கு முன்பு ஷகன்ப்ரீத் சிங் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு உதவியதாகவும், மூஸ்வாலாவும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று ஊகித்ததாகவும் கோல்டி பிரார் எங்களிடம் பலமுறை கூறினார்.
பிபிசி ஐ குழுவிடம் பேசிய பிரார், “சித்துவின் பங்கு அனைவருக்கும் தெரியும். விசாரணை மேற்கொள்ளும் போலீசாருக்கும் அது தெரியும். அதை விசாரிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தெரியும். சித்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் கூட்டு சேர்ந்தார். அவர் எங்கள் எதிரிகளுக்கு உதவ அரசியல் அதிகாரம், பணம் மற்றும் வளங்களைப் பயன்படுத்தினார்” என்றார்.
“அவர் செய்ததற்கு அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை.
அதனால்தான் நாங்களே அதைச் செய்தோம். செவிடர்களுக்கு கண்ணியமான வார்த்தை புரியாதபோது அவர்கள் ஒரு துப்பாக்கிக் குண்டு சத்தத்தை மட்டுமே கேட்கிறார்கள்,” என்று கூறினார் பிரார்.
‘இந்தியாவில் நீதித்துறையும் சட்டத்தின் ஆட்சியும் உள்ளது. எனவே அவர் சட்டத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொள்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்?’ என்று நாங்கள் பிராரிடம் கேட்டோம்.
“சட்டம் அல்லது நீதி என்று எதுவும் இல்லை. அதிகாரம் மிக்கவர்களால் மட்டுமே நீதியைப் பெற முடியும். எங்களைப் போன்ற சாதாரண மக்களால் முடியாது” என்றார் பிரார்.
அரசியலில் இருந்தாலும், விக்கி மிதுகேடாவின் சகோதரர் இந்திய நீதி அமைப்பில் நீதி பெறப் போராடி வருவதாக அவர் தெரிவித்தார்.
“அவர் ஒரு சுத்தமான மனிதர். சட்ட வழிமுறைகள் மூலம் தனது சகோதரருக்கு நீதி கிடைக்க அவர் மிகவும் கடினமாக முயன்றார். தயவு செய்து அவரை அழைத்து விஷயங்கள் எப்படி நடக்கின்றன என்பதைக் கேளுங்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோல்டி பிரார் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
பட மூலாதாரம், Getty Images
“என் சகோதரருக்கு என்னால் முடிந்ததைச் செய்தேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று அவர் கூறினார்.
மூஸ்வாலாவின் கொலை ஒரு பெரிய இசைத் திறமையாளரை இழப்பதற்கு வழிவகுத்தது மட்டுமின்றி, பஞ்சாபின் குற்றப் பின்னணி கொண்ட கும்பல்களுக்கும் தைரியத்தைக் கொடுத்துள்ளது.
அவரது கொலைக்கு முன்பு, பஞ்சாபுக்கு வெளியில் மிகச் சிலரே பிஷ்னோய் அல்லது பிரார் பற்றிக் கேள்விப்பட்டிருந்தனர்.
ஆனால், கொலைக்குப் பிறகு அவர்களின் பெயர்கள் அனைத்து இடங்களிலும் ஒலித்தன. அவர்கள் மூஸ்வாலாவின் புகழைக் கடத்தி, அதை அவமானமாக மாற்றினர். இது மிரட்டிப் பணம் பறிப்பதற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவியாக மாறியது.
பஞ்சாப் பத்திரிகையாளர் ரித்தேஷ் லக்கி இதுகுறித்துப் பேசியபோது, “இது கடந்த சில தசாப்தங்களில் பஞ்சாபில் நடந்த மிகப்பெரிய கொலை. குண்டர்களின் பணம் பறிக்கும் திறன் அதிகரித்துள்ளது. மூஸ்வாலாவின் கொலைக்குப் பிறகு, கோல்டி பிரார் நிறைய பணம் பெறுகிறார்,” என்றார்.
பத்திரிகையாளர் ஜூபிந்தர்ஜித் சிங் இதை ஒப்புக்கொள்கிறார். “குண்டர்கள் குறித்த பயம் மக்களிடையே அதிகரித்துள்ளதாக” அவரும் குறிப்பிட்டார்.
மேலும், “பஞ்சாபின் இசைத் துறையில் மிரட்டிப் பணம் பறித்தல் என்பது ஒரு பழைய பிரச்னை. ஆனால் சித்துவின் கொலைக்குப் பிறகு, இசை மற்றும் திரைப்படத் துறையுடன் தொடர்புடையவர்கள் மட்டுமல்ல, உள்ளூர் தொழிலதிபர்களும் மிரட்டிப் பணம் பறிக்கப்படுகிறார்கள்,” என்று கூறுகிறார் அவர்.
பிபிசி ஐ குழு பிராரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, அவர் அதை மறுத்தார். ஆனால் மிரட்டிப் பணம் பறித்தல் அந்தக் கும்பலின் வேலையில் ஒரு முக்கியப் பகுதியாக இருந்தது என்பதை அவர் தெளிவாக ஒப்புக்கொண்டார்.
அதுகுறித்துப் பேசிய அவர், “ஒரு மனிதன் நான்கு பேர் கொண்ட குடும்பத்தை பார்த்துக்கொள்ள வாழ்நாள் முழுவதும் போராட வேண்டும். என் குடும்பத்திற்குச் சமமான நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்களை கவனித்துக் கொள்ள வேண்டும். மக்களிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும். பணத்தைப் பெற பயம் இருக்க வேண்டும்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு