இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய சிம்ஃபொனி வரும் மார்ச் 8-ஆம் தேதி லண்டன் நகரில் வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனி என்றால் என்ன? சிம்ஃபொனியை எழுதி, நிகழ்த்துவது ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது?
கேள்வி: சிம்ஃபொனி என்றால் என்ன?
பதில்: சிம்ஃபொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஒரு ஒத்திசைத் தொகுப்பு.
இந்த இசைத் தொகுப்பு, பல பகுதிகளை, பெரும்பாலும் நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். இந்தப் பகுதிகள் movements என்று குறிப்பிடப்படுகின்றன. அதில் ஒரு பகுதி சொனாடா என்ற வடிவத்தில் இருக்கும். சிம்ஃபொனிகளுக்கு என மிகத் தெளிவான விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு.
ஒரு சிம்ஃபொனி 30 முதல் 100 இசைக்கலைஞர்களைக் கொண்டு இசைக்கப்படும் ஒரு நிகழ்வாக இருக்கும். இதில் வயலின், செல்லோ போன்ற தந்திக் கருவிகள், ட்ரம்பட், புல்லாங்குழல், க்ளாரினெட், சாக்ஸபோன் போன்ற காற்றால் இசைக்கப்படும் கருவிகள், தாள இசைக் கருவிகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
ஐரோப்பிய இசை வரலாற்றில் செவ்வியல் இசையின் காலகட்டமாகக் கருதப்படும் 1740 – 1820 காலகட்டத்தில் சிம்ஃபொனிகள் உருவாகத் துவங்கியதாக பிரித்தானியா கலைக்களஞ்சியம் தெரிவிக்கிறது. ஜோசஃப் ஹைடன், மொசார்ட், பீத்தோவன் ஆகியோர் மிகச் சிறந்த சிம்ஃபொனி தொகுப்புகளை உருவாக்கியவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
கேள்வி: விரைவில் இளையராஜா வெளியிடவிருக்கும் சிம்ஃபொனியின் பின்னணி என்ன?
பதில்: இளையராஜா, Valiant என்ற பெயரில் ஒரு சிம்ஃபொனியை உருவாக்கியிருக்கிறார். இதனைத் தான் உருவாக்கிய முதல் சிம்ஃபொனி எனக் குறிப்பிடுகிறார் இளையராஜா. இந்த சிம்ஃபொனி லண்டனின் Royal Philharmonic Orchestra மூலம் இசைக்கப்பட்டு, ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுவிட்டது.
இந்தப் பதிவு, மார்ச் 8ஆம் தேதியன்று வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனிகள் மிகச் சிக்கலான இசை வடிவமாககக் கருதப்படும் நிலையில், இதனை வெறும் 34 நாட்களில் எழுதி முடித்ததாக இளையராஜா தெரிவித்திருக்கிறார்.
கேள்வி: இந்தியர் ஒருவர் இதற்கு முன்பாக சிம்ஃபொனிகளை உருவாக்கியிருக்கிறார்களா?
பதில்: ஆசியாவிலிருந்து சிலர் சிம்ஃபொனிகளை உருவாக்கியிருந்தாலும், இந்தியர் ஒருவர் இதுவரை சிம்ஃபொனிகளை உருவாக்கியதில்லை. இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறு சிறு இசைத் தொகுப்புகளை சிலர் சிம்ஃபொனி என அழைத்தாலும், அப்படி அழைப்பது சரியல்ல என தன்னுடைய பேட்டிகளில் சுட்டிக்காட்டுகிறார் இளையராஜா. சிம்ஃபொனிகளுக்கென உள்ள விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்படுவதை மட்டுமே சிம்ஃபொனி எனக் குறிப்பிட வேண்டும் என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Facebook
கேள்வி: சிம்ஃபொனியை இளையராஜா ஏன் லண்டனில் பதிவுசெய்தார்? இந்தியாவில் சிம்ஃபொனிகளை பதிவுசெய்ய முடியாதா?
பதில்: சிம்ஃபொனிகளை இசைக்க, மேற்கத்திய இசையை ஒத்திசைந்து இசைக்கக்கூடிய சுமார் 100 தேர்ந்த இசைக் கலைஞர்கள் தேவை. சிம்ஃபொனிகள் இறுதியாக பதிவுசெய்யப்படுவதற்கு முன்பாக, பல முறை அவை வாசிக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்படும்.
ஆகவே, அதற்கென வடிவமைக்கப்பட்ட அரங்கங்கள் தேவை. சிம்ஃபொனிகளை இசைக்கக்கூடிய சில இசைக் குழுக்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், புதிதாக சிம்ஃபொனி ஒன்றை உருக்கியுள்ள நிலையில் அதனை தேர்ச்சிபெற்ற மேற்கத்திய இசைக் கலைஞர்களை வைத்தே லண்டனில் பதிவுசெய்ததாகத் தெரிவிக்கிறார் இளையராஜா.
கேள்வி: இளையராஜா இதற்கு முன்பாக, மேற்கத்திய செவ்வியல் இசையில் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறாரா?
பதில்: 1986 ஆம் ஆண்டில் How to Name It? என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார் இளையராஜா. இதில் மொத்தம் பத்து ட்ராக்குகள் (tracks) இடம்பெற்றிருந்தன. இளையராஜாவின் முதல் ஃப்யூஷன் ஆல்பமாக (fusion album) இது வெளியானது.
1988 ஆம் ஆண்டில் Nothing but Wind என்ற ஆல்பத்தை வெளியிட்டார் இளையராஜா. மேற்கத்திய செவ்வியல் இசை, இந்திய நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி ஆகியவற்றை இணைத்து இளையராஜா உருவாக்கியிருந்த இந்த இசைத் தொகுப்பை வாசித்திருந்தவர், புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைக் கலைஞரான ஹரி பிரசாத் சௌராசியா.
1993 ஆம் ஆண்டில் இளையராஜா ஒரு சிம்ஃபொனியை உருவாக்கியதாக செய்திகள் வெளியாயின. ஆனால், அதிகாரபூர்வமாக அந்தத் தொகுப்பு வெளியாகவில்லை.
2005 ஆம் ஆண்டில் திருவாசகத்தை மேற்கத்திய இசைக் கருவிகளின் இசையோடு வெளியிட்டார் இளையராஜா. புடாபெஸ்ட் நகரில் புடாபெஸ்ட் சிம்ஃபொனி ஆர்க்கெஸ்ட்ரா இதனை இசைத்து, பதிவுசெய்யப்பட்டது. இது oratorio வகையைச் சேர்ந்தது.