புதுடெல்லி: கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.
கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தும் உத்தரவிட்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் ஆதவ் அர்ஜூனா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும் சிபிஐ விசாரணை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை,உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்கும்போது, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்தது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் நாளை (அக்.13) தீர்ப்பளிக்கஉள்ளனர்.