பட மூலாதாரம், Getty Images
வணிகவியல் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் எழும் பிரதானமான கேள்வி, பட்டயக் கணக்காளராக (சிஏ) ஆக வேண்டுமா அல்லது நிறுவனச் செயலாளராக (சிஎஸ்) ஆக வேண்டுமா என்பதுதான்.
இந்தச் சூழலில்தான் இந்த இரு துறைகள் என்ன, அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்ன ஆகியவற்றை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பெயரளவில் ஒன்றுபோல தோன்றினாலும் இந்த இரு துறைகளுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.
பட்டயக் கணக்காளர்கள் வணிகம் மற்றும் நிதித் துறைகளில் பணிபுரிகிறார்கள். அவர்களின் பொறுப்புகளில் தணிக்கை, வரிவிதிப்பு, நிதி மற்றும் பொது மேலாண்மை ஆகியவை அடங்கும். இது நிதி விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற பணி.
மறுபுறம், நிறுவனச் செயலாளர் என்பது பெருநிறுவனத்தில் உள்ள மூத்த நிர்வாகப் பதவி. இந்தப் பதவி இயக்குநர் குழு, பங்குதாரர்கள் மற்றும் ஒழுங்குமுறையாளர்களுக்கு இடையே முக்கிய இணைப்பாக செயல்படுகிறது.
சட்ட இணக்கத்தை உறுதிசெய்தல், சட்டப்பூர்வ பதிவுகளை நிர்வகித்தல் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குதல் ஆகியவை இதன் பொறுப்புகள்.
இந்தக் கட்டுரையில் நாம் நிறுவனச் செயலாளர் பணி பற்றி தெரிந்து கொள்வோம்.
நிறுவனச் செயலாளர் யார்?
நிறுவனச் செயலாளர்கள் பெருநிறுவனங்களில் முக்கியமான நபர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் சட்டம், நிர்வாகம் மற்றும் ஆளுகை தொடர்பான முக்கிய முடிவுகளில் பங்கு வகிக்கிறார்கள்.
பெருநிறுவனத் துறை விரிவடைந்து, நிறுவனங்களின் சட்டப் பொறுப்புகள் அதிகரிக்கும்போது, திறமையான நிறுவனச் செயலாளர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
நல்ல சம்பளம், பணி ஸ்திரத்தன்மை மற்றும் உயர் நிர்வாகத்துடன் பணிபுரியும் வாய்ப்பு ஆகியவை இந்தத் தொழிலை தனித்துவமானதாக ஆக்குகின்றன.
இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கு தெளிவான, வரையறுக்கப்பட்ட செயல்முறை உள்ளது, இது இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தால் (ICSI) நிர்வகிக்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
நிறுவன செயலாளரின் பணிகள் என்ன?
இந்தியாவில் பல்வேறு விதிகளும் ஒழுங்குமுறைகளும் உள்ளன. உதாரணமாக, சாலையில் வாகனம் ஓட்டும்போது, சிவப்பு விளக்கு எரியும்போது உங்கள் காரை நிறுத்த வேண்டும். இந்த விதிகளை மீறினால் அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்படலாம்.
அதேபோல், நாட்டில் செயல்படும் நிறுவனங்களும் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.
இவற்றில் மிக முக்கியமானவை:
- நிறுவனங்கள் சட்டம் 2013
- அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) 1999
- இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) ஒழுங்குமுறைகள்
- திவால் சட்டம்
கடந்த 10 ஆண்டுகளாக சிஎஸ் மாணவர்களுக்கு கற்பித்து வரும் ஷுபம் அப்பாத், “இந்தியாவில் சரியான வணிக செயல்பாடுகளை உறுதிசெய்ய விதிகளும் ஒழுங்குமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் முதன்மையாக நிறுவனங்கள் சட்டம் 2013-ஐ பின்பற்ற வேண்டும். ஒரு நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை என்றால், அது அபராதத்தை எதிர்கொள்கிறது. நிறுவனங்கள் இந்த விதிகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய, இந்திய அரசு 1980-இல் நிறுவனச் செயலாளர் சட்டத்தை இயற்றியது. ரூ.10 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பங்கு மூலதனம் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் நிறுவனச் செயலாளரை நியமிக்க வேண்டியது கட்டாயமாகும்”, என்கிறார்.
பங்கு மூலதனம் என்பது முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு ஈடாக நிறுவனத்திற்கு செலுத்தும் தொகையாகும்.
நிறுவனச் செயலாளரின் பங்கு
ஒரு நிறுவனத்தில் இணக்க அதிகாரியாக பணிபுரியும் முஸ்கான் சுஹாக், “நிறுவனச் செயலாளர்கள் சட்ட இணக்கம் மற்றும் ஆளுகைக்கு பொறுப்பானவர்கள். ஒரு நிறுவனம் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி செயல்படுவதை அவர்கள் உறுதிசெய்ய வேண்டும்”, என்கிறார்.
அதோடு, “பெருநிறுவன மறுசீரமைப்பு, வெளிநாட்டு ஒத்துழைப்பு, கூட்டு முயற்சி, நடுவர் மன்றம், நிதி மேலாண்மை, வேலை திட்டமிடல், பெருநிறுவன ஆலோசனை சேவைகள் போன்ற ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய சந்தர்ப்பத்திற்கும் நிறுவனச் செயலாளர்கள் தேவை. எளிமையாகச் சொல்வதானால், நிறுவனம் சரியாக, சட்டப்படி, நெறிமுறையாக மற்றும் நடைமுறைகளின்படி செயல்படுவதை உறுதிசெய்வது நிறுவனச் செயலாளரின் பொறுப்பாகும்.”
நிறுவனச் செயலாளர் பெரும்பாலும் பட்டயக் கணக்காளருடன் ஒப்பிடப்படுகிறார். சிஏ ஆக முடியாதவர்கள் சிஎஸ் ஆக மாறுவதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற கருத்தும் உள்ளது. இருப்பினும், நிபுணர்கள் இந்தக் கருத்தை முற்றிலும் நிராகரிக்கிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
பட்டயக் கணக்காளர் பணியிலிருந்து எந்த அளவுக்கு வேறுபட்டது?
பட்டயக் கணக்காளர்(சிஏ) தேர்வு நாட்டின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, ஆனால் நிறுவனச் செயலாளர் தேர்வும் அதே அளவுக்கு கடினமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதுபற்றி முஸ்கான் சுஹாக் விளக்குகையில், “சிஏ-வின் வேலை, அவர்களின் முக்கியப் பகுதி கணக்கியல், வரிவிதிப்பு, நிதி அறிக்கைகள் தொடர்பானது. அதேசமயம், நிறுவனச் செயலாளரின் முக்கியப் பகுதி நிறுவனச் சட்டம், வரிச் சட்டம், வணிகச் சட்டம், இணக்கச் சட்டம் போன்றவை. இருவரின் வேலையும் மிகவும் வேறுபட்டது, பெருநிறுவனத் துறையில், இரு தொழில் வல்லுநர்களின் பகுதிகளும் முற்றிலும் வேறுபட்டவை.” எனக் கூறுகிறார்.
ஷுபம் அப்பாத்தும் இதை உறுதிப்படுத்துகிறார், “சிஏ மற்றும் சிஎஸ்-ஐ ஒப்பிடுவது என்பது எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரையும் கண் மருத்துவரையும் ஒப்பிடுவது போன்றது. இருவரும் மருத்துவர்கள், ஆனால் அவர்களின் வேலை முற்றிலும் வேறுபட்டவை.”
நிறுவனச் செயலாளர் பணியில் சேர்வது எப்படி?
நிறுவனச் செயலாளராக உள்ள ராமன்தீப் சிங் ஒரு சைபர் வழக்கறிஞரும் கூட. இந்தியாவில் நிறுவனச் செயலாளராக ஆவதற்கு கற்றுக்கொடுக்க கல்லூரிகள் இல்லை என்று அவர் விளக்குகிறார். மாறாக, இந்திய அரசின், இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம் (ICSI) இந்தக் கல்வியை வழங்குகிறது.
ஐசிஎஸ்ஐ தலைமையகம் டெல்லியில் உள்ளது, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. நாடு முழுவதும் சுமார் 75 கிளைகள் உள்ளன.
12ஆம் வகுப்புக்குப் பிறகு எந்த மாணவர் நிறுவனச் செயலாளராக விரும்பினாலும், மூன்று கட்டங்களை முடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- சிஎஸ் எக்ஸிகியூட்டிவ் நுழைவு தேர்வு (சி.எஸ்.ஈ.ஈ.டி)
- எக்ஸிகியூட்டிவ் திட்டம்
- தொழில்முறை திட்டம்
சி.எஸ்.ஈ.ஈ.டி தேர்வு பிப்ரவரி, ஜூன் மற்றும் அக்டோபர் என ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படுகிறது. இதில் நான்கு தாள்கள் உள்ளன. அவற்றில் மூன்று கருத்து அடிப்படையிலானவை (Subjective) மற்றும் ஒன்று தரவு அடிப்படையிலானவை (Objective).
இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிறகு, மாணவர்கள் சிஎஸ் எக்ஸிகியூட்டிவ் தேர்வில் இரண்டு குழுக்களில் தோன்ற வேண்டும்: ஒரு குழுவில் நான்கு தாள்களும் மற்றொன்றில் மூன்றும் உள்ளன.
கூடுதலாக, அவர்கள் எக்ஸிகியூட்டிவ் மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒரு மாத பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்தத் திட்டம் ஐசிஎஸ்ஐ-ஆல் நடத்தப்படுகிறது. இருப்பினும், இரண்டு குழுக்களின் தேர்வுகளையும் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ எழுதுவது மாணவர்களின் விருப்பமாகும். எக்ஸிகியூட்டிவ் தேர்வு ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.

ராமன்தீப்பின் கூற்றுப்படி, சிஎஸ் எக்ஸிகியூட்டிவ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, மாணவர்கள் ஒரு சி.எஸ் நிறுவனம் அல்லது தனியார் நிறுவனத்தில் பணியும் நிறுவனச் செயலாளரின் கீழ் 21 மாத பயிற்சியை முடிக்க வேண்டும். இதை முடிக்காமல் சிஎஸ் தகுதிச் சான்றிதழைப் பெற முடியாது.
உங்கள் பயிற்சியை முடித்து சி.எஸ் தொழில்முறை தேர்வுக்குத் தகுதி பெற்ற பிறகு, கார்ப்பரேட் கற்றல் மேம்பாட்டுத் திட்டம் என்ற மேலும் ஒரு மாத பயிற்சித் திட்டத்தை முடிக்க வேண்டும்.
ஒரு மாணவர் எந்தக் குழுவின் ஒரு தேர்வில் தோல்வியுற்றால்கூட, அவர் மீண்டும் முழு குழுவுக்கும் தோன்ற வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
எதிர்கால வளர்ச்சி எப்படி உள்ளது?
சிஎஸ் என்பது சட்டத்தால் நியமிக்கப்பட வேண்டிய பதவி எனக் கூறும் நிபுணர்கள், நிறுவனச் செயலாளர்களுக்கான தேவை எதிர்காலத்தில் தொடர்ந்து வளரும் எனத் தெரிவிக்கின்றனர்.
இந்த துறை மிக வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறுகிறார் ஷுபம் அப்பாத்.
”இதில் தொடக்க சம்பளமே ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கும்” என்று முஸ்கான் சுஹாக் தெரிவித்தார்.
ஆனால் செயற்கை நுண்ணறிவு நிறுவனச் செயலாளர் வேலைகளையும் பாதிக்குமா? என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டால் பெரும்பாலான நிபுணர்கள் ஓரளவு ஒப்புக்கொள்கிறார்கள்.
ராமன்தீப்பின் கூற்றுப்படி, “ஏஐ என்பது சிஎஸ் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். படிவங்களைத் தாக்கல் செய்வது, நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பது போன்ற வேலை மட்டும் சில சிஎஸ்கள் செய்கிறார்கள். இந்தப் பணிகள் எதிர்காலத்தில் ஏஐ-ஆல் மேற்கொள்ளப்படும். ஆனால் எங்கு பணத்தை முதலீடு செய்வது, ஒரு நிறுவனத்தை எவ்வாறு இணைக்கலாம், அல்லது சட்டத்தை சூழ்நிலைகளுடன் இணைப்பது போன்ற ஆலோசனைப் பணிகளை சிஎஸ் மாணவர்கள் மட்டுமே செய்ய முடியும். அத்தகைய பகுப்பாய்வு வேலையை ஏஐ-யால் செய்ய முடியாது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு