பட மூலாதாரம், AFP via Getty Images
மின்சார வாகனங்களில் மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளை பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. இதன் மூலம் பில்லியனர் ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய வடிவமைப்பின் பயன்பாட்டை நிறுத்திய முதல் நாடாக மாறியுள்ளது.
சீனாவில் ஷாவ்மி மின்சார வாகனத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட இரண்டு விபத்துகள் உட்பட பல ஆபத்தான சம்பவங்களுக்குப் பிறகு, உலகம் முழுவதிலும் உள்ள பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் மின்சார வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஷாவ்மி மின்சார வாகன விபத்துகளில் ஆற்றல் தடைபட்டதன் காரணமாக கதவுகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
அரசு ஊடகங்களின்படி, புதிய விதிமுறைகளின் கீழ், கார்களின் கதவுகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் இயந்திர ரீதியாகத் திறக்கும் வசதி (காரின் கதவை மின்சாரம் இல்லாவிட்டாலும் கைப்பிடி, கம்பி அல்லது சாவி போன்ற முறையில் திறக்க முடியும்) இருந்தால் மட்டுமே அவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
இந்தப் புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன.