சீனா திடீரென தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகையை நடத்தி வருவது அந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. தைவானைச் சுற்றிலும் 9 இடங்களில் போர் ஒத்திகையை சீனா நடத்துகிறது.
சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தைவான, ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் உறுதி செய்ய தேவையான படைகளை அனுப்பியிருப்பதாக கூறியுள்ளது.
சீனா – தைவான் இடையே என்ன நடக்கிறது?
தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை
தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ஜாயின்ட் ஸ்வார்ட் 2024பி என்ற பெயரில் போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளது. தைவான் மீது தாக்குதல் நடத்துவதை உருவகப்படுத்தி, 9 இடங்களில் ஒத்திகை நடத்தப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
தைவான் தீவைச் சுற்றிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட சீன கடலோர காவல்படையும் சில கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.
7 கடற்படை போர்க் கப்பல்கள், 25 போர் விமானங்கள் மற்றும் 4 கப்பல்கள் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக தைவான் தெரிவித்துள்ளது.
சீன ராணுவம் கூறுவது என்ன?
தைவானைச் சுற்றிலும் போர் ஒத்திகை நடப்பதை சீன ராணுவம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஒத்திகையில் தரைப்படை, கடற்படை, விமானப்படை, ராக்கெட் படை மற்றும் பிற படையினரும் பங்கேற்றுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. சீன கடலோர காவல்படையும் இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்ளது.
போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் பல முனைகளில் இருந்தும் கூட்டு தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒத்திகை போருக்கான தயார் நிலை, முக்கிய துறைமுகங்களை முற்றுகையிடுவது, கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் போன்றவற்றில் முன்னிறுத்தி இந்த ஒத்திகை நடப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த பயிற்சிகளை “பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான வலுவான தடுப்பு” மற்றும் “தேசிய இறையாண்மையை பாதுகாக்க மற்றும் தேசிய ஒற்றுமையை பேணுவதற்கான சட்டபூர்வமான மற்றும் தேவையான நடவடிக்கை” என்று சீன இராணுவம் விவரிக்கிறது.
அத்துடன், சீனா ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவு, தைவானை சுற்றிலும் செய்யப்படும் போர் ஒத்திகை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
தைவானின் இறையாண்மையை சீனா அங்கீகரிக்கவில்லை என்பதும், தைவான் தனக்கு சொந்தமானது என்று சீனா கூறுகிறது என்பதும் நினைவு கூரத்தக்கது.
தைவான் பாதுகாப்புத்துறை பதில்
சீனாவின் நடவடிக்கைக்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஆத்திரமூட்டும் செயலைக் கண்டிப்பதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க தேவையான படைகளை அனுப்பியிருப்பதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பேணுவது குறித்து கடந்த வாரம் பேசிய அதிபர் லாயின் உறுதிப்பாட்டை அது சுட்டிக்காட்டியுள்ளது.
அச்சுறுத்தலை எதிர்கொள்ள போருக்கு தயாராவோம் என்றும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்குப் பதிலடியாக, தைவானும் தனது தயார் நிலையை வெளிப்படுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
தைவான் ராணுவம் தயார் நிலையில் இருக்க உத்தரவு
சீனாவின் நடவடிக்கையை கண்டித்திருந்த தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சீனா இந்த பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழலை பலவீனப்படுத்துவதாகவும், சர்வதேச விதிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நேரடியாக மோதல் ஏற்படும் வராமல் இருக்கும் வகையில் செயல்படுமாறும் அதன் படைகளை கேட்டுக் கொண்டுள்ளது.
சீன ஏவுகணைகளின் நகர்வை ராணுவ புலனாய்வுப் பிரிவு உன்னிப்பாக கண்காணித்து வரும் நிலையில், அனைத்து படைப் பிரிவுகளும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தைவானின் பாதுகாப்பு மண்டலங்கள் உச்சபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், போர்க் கப்பல்களும் போர் விமானங்களும் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவிடம் இருந்து வர வாய்ப்புள்ள எந்தவொரு தவறான தகவல் குறித்தும் விழிப்புடன் இருக்குமாறு குடிமக்களை தைவான் கேட்டுக் கொண்டுள்ளது-
சீனாவின் கோபத்திற்கு என்ன காரணம்?
தைவான் அதிபராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதவியேற்ற லாய், அண்மையில் மக்களுக்கு ஆற்றிய உரையில், தைவானின் தன்னாட்சி அந்தஸ்தை கட்டிக் காக்க உறுதியளித்தார்.
தைவானுக்கு உரிமை கோரும் சீனாவை மறைமுகமாக சாடும் வகையில், “இணைப்பு முயற்சியையோ, நமது இறையாண்மை மீதான ஆக்கிரமிப்பையோ தடுப்பதில் உறுதியாக” இருப்பதாக அவர் சூளுரைத்தார்.
லாய் பதவியேற்றதுமே செய்தது போன்ற போர் ஒத்திகையை இம்முறையும் சீனா செய்யும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.