சென்னை: சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு கார், ஜீப், வேன் ஆகியவைகளுக்கு சுங்கச்சாவடியை கடந்து செல்ல ஆண்டுக்கு ரூபாய் 3,000 என்றும் அல்லது சுங்கச் சாவடியை 200 முறை வரை கடக்கலாம் என்றும் புதிய விதியினை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.
தனியார் வாகனங்களை பொறுத்தவரை (ஓன் போர்டு வாகனங்கள் உள்ளிட்டவைகள்) சுங்கச்சாவடியை பயன்படுத்தும் காலம் சொற்பமாக உள்ளதால் இந்த கட்டணம் மிகவும் கூடுதலான தொகையாகும். எனவே இந்த வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1,500 வீதம் நடைமுறைப்படுத்துவதே சிறந்த வழிமுறை என கருதுகிறேன்.
அதோடு, மேலே குறிப்பிட்ட தனியார் வாகனங்களுக்கு 3,000 ரூபாய் ஆண்டுக்கு கட்டணம் என்பதனை வணிக மற்றும் சிறிய சரக்கு வாகனங்களுக்கு பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்தினால் அவர்களுக்கான நிதி சுமை குறையும் என்பதனை கருத்தில் கொண்டு இதனை நடைமுறைப்படுத்த வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.