16
பிரித்தானியாவில் வருடாந்தம் நடைபெறும் ‘சுடரி விருது’ விழாவில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடக ஆளுமைக்கான விருது ஊடகவியலாளரும் ஆய்வாளருமான துவாரகி சுந்தரமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் இலங்கையிலும் புலத்திலும் வாழும் சமூகம் சார்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைக் கௌரவிக்கும் இந்த விழாவானது பிரித்தானியாவின் Hayes பகுதியில் அண்மையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகத் தாயகத்தைச் சேர்ந்த சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ரனித்தா ஞானராஜா கலந்து சிறப்பித்திருந்தார்.
‘Digital Media & Production – Emerging Leader’ என்ற விருதைப் பெற்றுள்ள ஊடகவியலாளர் துவாரகி சுந்தரமூர்த்தி, தனியார் செய்தி ஊடகத்தில் செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்ததுடன் இலங்கை ஊடகத்துறை அமைச்சிலும் கடமையாற்றியிருந்தார்.
தெற்காசிய சட்ட ஆய்வு மையம் மற்றும் அடையாளம் – மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தில் ஆய்வாளராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படும் தனியார் காணிகள், போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவத்தினர், போரின் பின்னர் முன்னாள் பேராளிகள் எதிர்நோக்கும் அவலங்கள் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் மற்றும் செய்தி ஆவணப்படுத்தல்களை அவர் மேற்கொண்டிருந்தார்.