படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ்கட்டுரை தகவல்
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) புதிய குழுவினரை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு செலுத்தியுள்ளது.
இந்த இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் மட்டுமே தங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, அவர்கள் 9 மாதங்களுக்கும் மேலாக தங்க நேரிட்டது.
“புட்ச் மற்றும் சுனிதா ஆகிய இருவரும் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளனர். அவர்களை மீண்டும் அழைத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று நாசாவின் வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் கூறினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய குழுவினர் சென்ற 2 நாட்களில் சுனிதா மற்றும் புட்ச் பூமிக்கு தங்களது பயணத்தை தொடங்குவார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ், விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து இவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர்.
அவர்களுக்குப் பதிலாக, ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிகளைத் தொடர்வார்கள்.
பட மூலாதாரம், NASA
இவ்விரு குழுக்களுக்கான பணிப்பரிமாற்றம் 2 நாட்கள் நீடிக்கும். அதன் பிறகு பழைய குழுவினர் பூமிக்குத் திரும்பும் பயணத்தை மேற்கொள்வார்கள். ஆனால், பூமியில் பாதுகாப்பான மறு நுழைவுக்கான சூழ்நிலைக்காகக் காத்திருக்க நேரிட்டால், இன்னும் சிறிது தாமதம் ஏற்படலாம் என்று சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தின் மேலாளர் டானா வெய்கல் கூறினார்.
“வானிலை ஒத்துழைக்க வேண்டும், அது சாதகமாக இல்லாவிட்டால், அந்த நேரம் வரும் வரையில் நாங்கள் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்வோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த வாரமே விண்வெளி வீரர்கள் தங்களின் பணிகளை கைமாற்றத் தொடங்கிவிட்டதாக வெய்கல் விளக்கினார்.
“சுனிதா, விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவ்சினினிடம் தனது பணிகளை ஒப்படைத்தார்.” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், NASA
விண்வெளி நிலையத்தில் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக விண்வெளி வீரர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். சுனிதா வில்லியம்ஸ் அதை தனது “மகிழ்ச்சியான இடம்” என்று விவரித்தார். ஆனால் திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சிமியோன் பார்பர், தனிப்பட்ட முறையில் சில பாதிப்புகள் இருந்திருக்கும் என்று பிபிசி செய்தியிடம் கூறினார்.
“ஒரு வாரம் நீடிக்கும் ஒரு வேலைப் பயணத்திற்கு நீங்கள் அனுப்பப்படும் போது, அது ஒரு வருடத்தின் சிறந்த பகுதியை எடுக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
“விண்வெளியில் இவ்வளவு நீண்ட காலம் தங்கியிருப்பது குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்திருக்கும், அவர்கள் வீட்டில் பல விஷயங்களை அவர் தவறவிட்டிருப்பார்.” என்றார் அவர்.
ஸ்பேஸ்எக்ஸின் போட்டியாளரான போயிங் விண்வெளி நிறுவனத்தின் ஸ்டார்லைனர் என்ற சோதனை விண்கலத்தில் புட்ச் மற்றும் சுனிதா, ஜூன் 2024 தொடக்கத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.
விண்கலத்தின் மேம்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் அதனை ஏவுதல் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் போது சிக்கல்கள் இருந்ததால் ஸ்டார்லைனரை ஏவும் பணி பல ஆண்டுகள் தாமதமானது. பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவதற்கு விண்கலத்தின் வேகத்தை குறைக்க தேவைப்படும் ஸ்டார்லைனரின் சில த்ரஸ்டர்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் உந்துவிசை அமைப்பில் ஹீலியம் வாயு கசிவு ஆகியவை அவர்களின் இருப்பை விண்வெளியில் அதிகப்படுத்தியது.
இதையடுத்து புட்ச் மற்றும் சுனிதாவை ஸ்டார்லைனரில் கொண்டு வருவதில் ஒரு சிறிய ஆபத்தை கூட அனுமதிக்க கூடாது என்று நாசா முடிவு செய்தது.
இதையடுத்து, ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூலில் புட்ச் மற்றும் சுனிதாவை மீண்டும் பூமிக்கு அழைத்து வர தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சர்வதேச விண்வெளி நிலைய பணியாளர்குழு சுழற்சியின் போது இதைச் செய்வதே சிறந்த வழி என்று நாசா முடிவு செய்தது.
பட மூலாதாரம், NASA
“போயிங்கிற்கு கஷ்டம்தான்”
புட்ச் மற்றும் சுனிதாவை ஸ்டார்லைனரில் பூமிக்கு அழைத்து வருவது பாதுகாப்பானதாக இருந்திருக்கும் என்று போயிங் நிறுவனம் தொடர்ந்து வாதிட்டு வருகிறது. அதற்கு பதிலாக ஒரு போட்டியாளரான ஸ்பேஸ்எக்ஸின் காப்ஸ்யூலைப் பயன்படுத்துவதற்கான முடிவு குறித்து அந்நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ளது. இது போயிங்கிற்கு “தர்மசங்கடமாக” இருக்கும் என்று டாக்டர் பார்பர் கூறுகிறார்.
“விண்வெளிக்கு அழைத்துச் சென்ற விண்வெளி வீரர்கள் ஒரு போட்டியாளரின் விண்கலத்தில் திரும்பி வருவதைப் பார்ப்பது போயிங்கிற்கு கஷ்டம்தான்.” என்றார் அவர்.
பட மூலாதாரம், NASA
டிரம்ப், மஸ்க் குற்றச்சாட்டிற்கு நாசா மறுப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஈலோன் மஸ்க் ஆகிய இருவரும் கடந்த பிப்ரவரியில் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த கூட்டு நேர்காணலில், புட்ச் மற்றும் சுனிதாவை முன்பே வீட்டிற்கு அழைத்து வந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
“அவர்கள் விண்வெளியில் விடப்பட்டனர்” என்று டிரம்ப் கூறுகிறார்.
நெறியாளர் சீன் ஹானிட்டி, “அவர்கள் 8 நாட்கள் மட்டுமே அங்கே இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கிட்டத்தட்ட 300 நாட்களாக அங்கே இருக்கிறார்கள்” என்று என்று குறிப்பிட்டார். அதற்கு டிரம்ப் ஒரே வார்த்தையில், “பைடன்” என்று பதிலளித்தார்:
“அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அங்கேயே விடப்பட்டனர்.” என்று மஸ்க் கூறினார்.
இந்த கூற்றை நாசாவின் வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச் மறுக்கிறார்.
“நாங்கள் பல்வேறு வாய்ப்புகளை பரிசீலித்தோம், ஒட்டுமொத்தமாக எது சிறந்தது என்பதைப் பார்க்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துச் செயல்பட்டோம்,,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், NASA
“நாசா சரியான முடிவை எடுத்துள்ளது”
லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தின் விண்வெளித்துறை தலைவரும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஐரோப்பிய கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றியவருமான டாக்டர் லிப்பி ஜாக்சன், இந்த முடிவை ஆதரித்துள்ளார்.
“புட்ச் மற்றும் சுனிதாவின் நல்வாழ்வு எப்போதும் அனைவரின் மனதிலும் பிரதானமாக இருந்திருக்கும். ஏனெனில் அவர்கள் முன்னிருந்த சூழ்நிலைகளை எவ்வாறு சிறப்பாகச் சமாளிப்பது என்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.
“தொழில்நுட்பம் மற்றும் சரியான நிகழ்ச்சி நிரல் காரணங்களுக்காக, நாசா அந்த முடிவுகளை எடுத்தது. மேலும் புட்ச் மற்றும் சுனியைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் சரியான தீர்வையும் நாசா கண்டுபிடித்தது. சர்வதேச விண்வளி நிலையத்தின் சக பணியாளர்களுடன் சேர்ந்து அவர்கள் பூமிக்குத் திரும்புவதைப் பார்க்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று லிப்பி ஜாக்சன் தெரிவித்தார்.