பட மூலாதாரம், Getty Images
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது.
விண்கலத்தில் இருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார்.
இந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல மறுநுழைவு என அழைக்கப்படும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து பூமியை நோக்கி பயணித்தது. பிறகு பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அதன் வேகம் குறைக்கப்பட்டு, நீரில் இறங்கி, மிதந்தது.
இதற்குப் பிறகு இந்த நான்கு விண்வெளி வீரர்களும் அமெரிக்க நேரப்படி இரவு 11:19 மணிக்கு ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தின் எலிங்டன் ஃபீல்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இங்கு அவர்களுக்கு விண்வெளி பயணத்திற்குப் பிறகான மருத்துவப் பரிசோதனைகளும், பயிற்சிகளும் அளிக்கப்படும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
பட மூலாதாரம், @NASA_Johnson
அவர்கள் வந்த விண்கலம் ஸ்பிளாஷ்டவுன் (splashdown) என்ற செயல்முறையின் மூலம் கடல் பகுதியில் இறங்கியது. அதாவது, விண்கலம் இறங்கும்போது கடலில் உள்ள தண்ணீர் மிகப்பெரும் அளவில் தெறிக்கும் என்பதால், அந்த செயல்முறையை ‘ஸ்பிளாஷ்டவுன்’ என்கின்றனர்.
சற்றுத் தொலைவில் படகுகளில் காத்திருந்த மீட்புக் குழுவினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டனர்.
தொடர்பு துண்டிக்கப்பட்ட சில நிமிடங்கள்
டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது சற்று நேரத்துக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது வழக்கமான நடைமுறையாகும். அப்போது விண்கலத்தைச் சுற்றி 1927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. டிராகன் விண்கலத்தின் வெப்பத்தடுப்பு ஓடுகள் உள்ளே இருந்த விண்வெளி வீரர்களைப் பாதுகாத்தன.
சிறிது நேரத்துக்குப் பிறகு தகவல் தொடர்பு மீட்கப்பட்டு கடலில் இறங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தன்னிச்சையாக விண்கலம் பூமியை நோக்கி விரைந்தது.
அப்போது விண்கலம் சுமார் 27,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. பின்னர் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கும் பாரசூட்கள் விரிந்தன. நாசாவின் கேமராக்களில் இந்த நிகழ்வுகள் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு கடலில் வந்து விழுந்த விண்கலத்தை, நாசாவின் மீட்புப் படகுகள் பத்திரமாக கப்பலுக்கு எடுத்து வந்தன.
பட மூலாதாரம், NASA
துள்ளிக் குதித்த டால்பின்கள்
விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டால்பின்கள் மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தது நாசாவின் கேமராக்கள் காட்டின. அது மீட்புக் குழுவுக்குக் கிடைத்த பெருமை என்று நாசா விஞ்ஞானிகள் நகைச்சுவையாகக் கூறினர்.
கடலில் இருந்து விண்கலம் மீட்புப் படகில் ஏற்றப்பட்டபோது அதில் இருந்த கடல் நீர் கொப்பளித்து வெளியேறியது.
விண்வெளியில் ‘சிக்கியவர்கள்’ என்பது உண்மையா?
சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் திட்டமிடப்பட்ட 8 நாட்களை விட அதிக நாட்கள், அதாவது சுமார் 286 நாட்கள் விண்வெளியில் தங்க நேரிட்டது. இருவரும் விண்வெளியில் சிக்கித் தவிப்பதாக விவரிக்கப்பட்ட போதிலும் அது ஒருபோதும் உண்மையில்லை.
ஏனெனில், கப்பல்களில் உள்ள உயிர் காக்கும் படகுகள் போலவே, சர்வதேச விண்வெளி நிலையத்திலும் ஒரு விண்கலம் அவசர கால பயன்பாட்டிற்காக எப்போதும் இணைந்தே இருக்கும். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்ட நாசா, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு கருதி, அதே விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவதை தவிர்த்துவிட்டது. அதற்குப் பதிலாக, அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தொடர்ந்து தங்கியிருக்கவும், ஏற்கனவே திட்டமிட்டபடி, பூமியில் இருந்து செல்லும் அடுத்த விண்கலத்தில் இருவரும் பூமிக்கு அழைத்து வரவும் நாசா தீர்மானித்தது.
நாசாவின் இந்த முடிவே, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதை மாதக்கணக்கில் தள்ளிப் போட்டது. ஆகவே, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளியில் அதிக காலம் தங்கி ஆய்வுகளைத் தொடர்ந்தனர். அவர்கள் சுற்றுப்பாதை ஆய்வகத்தில் பல சோதனைகளை மேற்கொண்டதுடன், ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையிலும் அவர்கள் பலமுறை ஈடுபட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
விண்வெளியில் தங்கிய கூடுதல் நாட்களில் இருவரும் சாதித்தது என்ன?
விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே அதிக மணிநேரம் செலவழித்த பெண் ஆகிய சாதனைகளை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். இது சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளிப் பயணம். மூன்று பயணத்திலும் சேர்த்து மொத்தமாக ஒன்பது முறை விண்வெளியில் நடந்துள்ளார் சுனிதா. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்களை அவர் விண்வெளி நடையில் செலவிட்டுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தது, கிறிஸ்துமஸ் கொண்டாடியது, ஏற்கனவே வீட்டில் செலவிட திட்டமிட்டிருந்த கிறிஸ்துமஸுக்கு ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பியது, செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியது என பலவற்றையும் அவர்கள் சாதித்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
அடுத்தக் கட்டம் என்ன?
9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் விரைவில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அங்கு அவர்கள் மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவார்கள்.
நீண்ட கால விண்வெளி பயணங்கள் உடலை பாதிக்கின்றன, விண்வெளி வீரர்கள் எலும்பு அடர்த்தியை இழந்து தசை இழப்பை சந்திக்கின்றனர். இரத்த ஓட்டமும் பாதிக்கப்படுகிறது. கண் பார்வையும் பாதிக்கப்படலாம்.
உடல் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகலாம், எனவே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரின் உடலும் புவி ஈர்ப்பு விசையுடன் வாழ்வதற்கு மீண்டும் பழகுவதால் அவர்களுக்கு விரிவான உடற்பயிற்சி முறை வழங்கப்படும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது அளித்த பேட்டிகளில், இருவருமே தாங்கள் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் தங்குவதற்கு நன்கு தயாராக இருந்ததாகக் கூறியுள்ளனர் .
கடந்த மாதம் CBS இடம் பேசிய சுனிதா வில்லியம்ஸ், “என் குடும்பத்தினரையும், என் அன்புக்குரிய நாய்களையும் மீண்டும் பார்ப்பதுடன், கடலில் குதிப்பதையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். பூமிக்குத் திரும்பி பூமியை உணருவது மிகவும் நன்றாக இருக்கும் .” என்றார்.
பட மூலாதாரம், NASA
விண்வெளி எத்தகைய கடினமானது என்பதை உணர்த்திய பயணம்
புட்ச் மற்றும் சுனிதாவின் வியத்தகு பணி, விண்வெளி கடினமானது என்பதை நமக்குக் காட்டுகிறது என்று பிபிசியின் அறிவியல் பிரிவு ஆசிரியர் ரெபேக்கா மொரெல்லி கூறுகிறார்.
நினைத்தது தவறாகப் போகலாம். தவறானது நடக்கலாம். அப்படி நிகழும்போது, சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்கிறார் அவர்.
“எட்டு நாட்களில் முடிய வேண்டிய பணியை ஒன்பது மாதங்களாக நீட்டிக்க வேண்டியிருப்பது நாசாவிற்கு சாதாரணமானது அல்ல. ஆனால் புட்ச் மற்றும் சுனிதா இந்த சூழலுக்கு ஒரு பதிலாக இருக்கின்றனர். புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு விண்வெளி நிலையத்தில் வாழ்வது – ஒரு விண்வெளி வீரர் என்பதற்கான ஒரு பகுதியாகும்.”
ஒரு திட்டத்தை வைத்திருப்பது – அதை மாற்றுவதற்கும் தயாராக இருக்க வேண்டியது ஆகியவற்றை இந்தப் பயணம் உணர்த்தியிருக்கிறது என்கிறார் ரெபேக்கா.
பட மூலாதாரம், NASA
900 மணி நேர ஆராய்ச்சி, 150 பரிசோதனைகள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் திட்டமிட்டதற்கு மாறாக பல மாதங்கள் தங்கியிருக்க நேரிட்ட சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்ஸ்மோரும் அங்கு பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர்.
இந்த விண்வெளிப் பயணத்தின் போது அவர்கள் 900 மணிநேர ஆராய்ச்சிகளைச் செய்திருக்கின்றனர். நாசாவின் விண்வெளி செயல்பாட்டு இயக்குநரகத்தின் ஜோயல் மொண்டல்பானோ இந்தத் தகவலைக் கூறியிருக்கிறார். சுனிதா, புட்ச் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய காலத்தில் 150 பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
நாசா விண்வெளி வீரர்கள் செய்திருக்கும் பணி “தேசத்திற்கு நன்மை பயக்கும்” என்றும், தசாப்தத்தின் இறுதிக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதரை தரையிறக்கும் இலக்கை நாசா அடையும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்றும் மொண்டல்பானோ கூறுகிறார்.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தால் ஏற்பட்ட காலதாமதம்
61 வயதான வில்மோர், 59 வயதான சுனிதா இருவரும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலமாக கடந்தாண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் எட்டே நாட்களில் பூமிக்கு திரும்பி வர வேண்டியது.
இந்த ஸ்டார்லைனர் விண்கலம் மனிதர்களுடன் சென்ற போயிங்கின் முதல் விண்கலம் ஆகும். வழக்கமான பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு விண்கலம் எவ்வாறு செயல்படும் என்பதை கவனிப்பதற்கான சோதனை ஓட்டமாக இது இருந்தது.
ஆனால் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கிய போது பல பிரச்னைகளை சந்தித்தது. விண்கலத்தை வழிநடத்தும் அதன் ஐந்து உந்துவிசை அமைப்புகள் செயலிழந்தன. அதிலிருந்த ஹீலியமும் தீர்ந்து போனது.
இதன் காரணமாக இவர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவது தாமதமானது.
அதன்பிறகு அமெரிக்க தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-இன் விண்கலத்தைக் கொண்டு அவர்களை பூமிக்குத் திரும்ப அழைத்து வருவது என 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்டது.
பட மூலாதாரம், NASA
முதலில் அவர்களை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குக் கொண்டு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு மார்ச் மாதம் என முடிவு செய்யப்பட்டது.
“சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள இரண்டு விண்வெளி வீரர்களையும் விரைவில் பூமிக்கு அழைத்து வருமாறு அதிபர் கூறியுள்ளார். நாங்கள் அப்படியே செய்வோம். பைடன் நிர்வாகம் இத்தனை காலம் அவர்களை அங்கேயே விட்டுவிட்டது மிகவும் மோசமானது,” என்று ஈலோன் மஸ்க் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
சுனிதா வில்லியம்ஸின் பின்னணி
பட மூலாதாரம், Getty Images
கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி நடையில் அதிக அனுபவம் கொண்ட பெண்களில் இரண்டாவது இடத்தில் (9 முறை 62 மணி 6 நிமிடம்) உள்ளார்.
“விண்வெளியில் இருந்து நாம் வாழும் இந்த பூமியை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன்” – இது தனது விண்வெளி பயணங்கள் குறித்து சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்த வார்த்தைகள்.
தற்போது வெற்றிகரமாக மற்றுமொரு நீண்ட விண்வெளி பயணத்தை நிறைவு செய்து, பூமிக்கு திரும்பியுள்ள இவருக்கு உலகெங்கிலும் வாழ்த்துகளும், வரவேற்புகளும் குவிந்து வருகிறது.
சுனிதா லின் வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் ‘எக்ஸ்பெடிஷன் -14’ குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவை நாசா சேர்த்துக் கொண்டது.
1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா. அவருடைய அப்பா தீபக் பாண்டியா, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தீபக் பாண்டியா 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்.
சுனிதாவின் அம்மா போனி பாண்டியா. சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவரும் ஒரு விமானியாக பணியாற்றியவர். தற்போது அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
1998-ஆம் ஆண்டு நாசா சுனிதாவை விண்வெளி வீரராக தேர்வு செய்தது. சுனிதா அமெரிக்க கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு திறமையான போர் விமானி என்று குறிப்பிடுகிறார் உள்ளூர் பத்திரிகையாளர் சலீம் ரிஸ்வி.
சுனிதா இதுவரை 30 வகையான விமானங்களை இயக்கியுள்ளார். அதில் அவர் 2700 மணி நேரம் பறந்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்.
படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ் கடற்படையில் விமானியாக தன்னுடைய பணியை துவங்கினார்.
பட மூலாதாரம், EPA
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணங்கள்
2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதன்முறையாக டிஸ்கவரி விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு பயணப்பட்டார். Expedition 14 குழுவுடன் பணிகளைத் தொடர்ந்த அவர் Expedition 15 விண்கலத்தில் பணிகளை முடித்துக் கொண்டு 2007ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பினார்.
2012ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி இரண்டாவது விண்வெளிப் பயணத்தை ரஷ்யாவின் சோயுஸ் டிஎம்ஏ-05 எம் விண்கலத்தின் மூலம் மேற்கொண்டார் சுனிதா வில்லியம்ஸ். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அதே ஆண்டில் நவம்பர் 19ம் தேதி பூமிக்கு திரும்பினார்.
2015ம் ஆண்டில் வணிகரீதியான விண்வெளி பயணங்களுக்கான முதல் விண்வெளி வீரராக சுனிதா வில்லியம்ஸ் அறிவிக்கப்பட்டார். இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக 2024ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்தார்.
ஸ்டார்லைனர் விண்கலத்தின் த்ரஸ்டர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இக்குழு இன்றி விண்கலம் பூமிக்கு திரும்பியது. இதனால் வெறும் 8 நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணம், 9 மாதங்களைக் கடந்து நீண்டது.
2025, மார்ச் 15ஆம் தேதி இவர்கள் இருவரையும் அழைத்துவர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிகளை தொடர ஏதுவாக புதிய குழுவினர் அந்த விண்கலத்தில் சென்றனர்.
க்ரூ-10 திட்டத்தின் கீழ், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நள்ளிரவு 12 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்ததாக நாசா கூறியது.
பிறகு, மார்ச் 17 இந்திய நேரப்படி காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கிய தங்களது பயணத்தை, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும் தொடங்கினார்கள்.
59 வயதான சுனிதா வில்லியம்ஸ் தனது விண்வெளிப் பயணத்தில் அனுபவத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். எதிர்பாராத விதமாக கூடுதல் நாட்கள் தங்க நேர்ந்த போதிலும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நாசா தொடர்ந்து கூறிவந்தது. இறுதியாக அவர் இன்று (மார்ச் 19) பத்திரமாக பூமியை வந்தடைந்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு