0
‘நடிக்கலாமா? தொடர்ந்து இயக்கலாமா? என்ற குழப்பத்தில் இருந்தபோது.. என் பாதுகாப்பற்ற உணர்வை உடைத்து, நடிப்பை தெரிவு செய்ய வைத்தவர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ‘வித் லவ்’ படத்தின் மூலமாக நான் நாயகனாக நடிப்பதற்கு அவர்தான் காரணம்.
அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என ‘வித் லவ்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் அபிஷன் ஜீவந்த் தெரிவித்திருக்கிறார்.
எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஜீயான் பிலிம்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகி, எதிர்வரும் ஆறாம் திகதி என்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் ‘வித் லவ்’ எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிபி சக்கரவர்த்தி – தேசிங் பெரியசாமி – ரஞ்சித் ஜெயக்கொடி – தயாரிப்பாளர் அருண் விஷ்வா – நடிகர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக படக் குழுவினருடன் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் பங்கு பற்றி பேசிய படத்தின் நாயகன் அபிஷன் ஜீவந்த், ” டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் பணிகளின் போதே எம்மிடம் உதவியாளராக பணியாற்றிய மதன் இந்த கதையை கொடுத்து படித்துப் பார்க்குமாறு சொன்னார்.
அந்தக் கதை நன்றாக இருந்தது. அதன் பிறகு வேறு ஒரு தருணத்தில் அந்தக் கதையில் நான் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் மனதிற்குள் குழப்பமும் ஏற்பட்டது. அப்போது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய போது.. என் குழப்பமும், பயமும் நீங்கியது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
இதனிடையே இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் ட்ரோன் ஷோ நடத்தி ரசிகர்களின் கவனத்தை படக் குழுவினர் கவர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.