• Sun. Feb 15th, 2026

24×7 Live News

Apdin News

சுலபமான தக்காளி தொக்கு – Vanakkam London

Byadmin

Feb 15, 2026


தற்போது தக்காளி விலை குறைவாக இருக்கும் நேரத்தில், அதை பயன்படுத்தி சுவையான தொக்கு அல்லது ஊறுகாய் செய்து வைத்துக் கொண்டால், தினசரி சைடு டிஷ் கவலை இருக்காது. இந்த தக்காளி தொக்கு இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்துடன் கலந்தும் ருசியாக சாப்பிடலாம். ஒருமுறை செய்து வைத்தால் பல நாட்கள் வரை நன்றாக பதமாக இருக்கும்.

இப்போது வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய தக்காளி தொக்கு செய்முறையைப் பார்ப்போம்.

முதலில் நன்றாக பழுத்த தக்காளியை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் சிறிதளவு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

அதன் பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நடுத்தர தீயில் நன்றாக கெட்டியாகும் வரை கிளறி வேகவிட வேண்டும். தக்காளி நன்றாக மசியத் தொடங்கும் போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து கலக்க வேண்டும். புளிப்புத் தன்மை மற்றும் பதம் அதிகரிக்க சிறிதளவு புளி கரைசல் சேர்க்கலாம்.

கலவை எண்ணெய் பிரிந்து பதமாகும் வரை மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இறுதியாக சிறிதளவு பெருங்காயத் தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும். முழுவதும் குளிர்ந்த பிறகு காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்தால் பல நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

இந்த தக்காளி தொக்கு இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

விரிவான செய்முறை இதோ:

முதலில் புளியை சிறிது நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தக்காளியை துண்டுகளாக்கி குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, ஊற வைத்த புளியை பிசைந்து சாறு எடுத்து, வடிகட்டி சேர்க்க வேண்டும்.

பின்பு அதில் மிளகாய் தூள் மற்றும் நல்லெண்ணெயை சேர்க்க வேண்டும்.

அதன் பின் 2 முழு பூண்டு எடுத்து, பூண்டு பற்களை தட்டி சேர்த்து கிளறி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 200 மிலி எண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதன் பின் அதில் தட்டி வைத்துள்ள 3 முழு பூண்டின் பற்களை தட்டி சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அதில் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, மத்து பயன்படுத்தி தக்காளியை நன்கு மசித்து விட வேண்டும்.

பின் மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நீர் ஓரளவு சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

இறுதியாக அதில் தாளித்து வைத்துள்ளதை அப்படியே ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தக்காளி தொக்கு தயார்.

By admin