படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன்
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாள் கெடு விதித்த மறுநாளே செங்கோட்டையன், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் அவர் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று முதல் செங்கோட்டையன் அந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று காலை திண்டுக்கல்லில் முகாமிட்டிருந்தார். அங்கே ஒரு தனியார் ஹோட்டலில் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் அவர் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக செங்கோட்டையனை அவர் வகித்து வந்த கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை வெளியாகியுள்ளது.
செங்கோட்டையன் ஆதரவாளர்களும் பதவிநீக்கம்
அதிமுகவில் செங்கோட்டையனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) K.A. சுப்பிரமணியன்,
நம்பியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. M. ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி,
கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. N.D. குறிஞ்சிநாதன்,
அந்தியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. M. தேவராஜ்,
அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர் திரு. S.S. ரமேஷ்,
துணைச் செயலாளர் திரு. வேலு (எ) தா. மருதமுத்து,
ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் திரு.K.S. மோகன்குமார்
ஆகியோர் தங்களது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் பதில்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “இந்த அறிவிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பது தொண்டர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு. அதை வெளிப்படுத்தும் விதமாகத் தான் நான் பேசியிருந்தேன். அதற்கு இன்று கழகத்தின் பொறுப்புகளிலிருந்து என்னை விடுவித்துள்ளார்கள்.”
“ஜனநாயக முறைப்படி கட்சியிலிருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். விளக்கம் கேட்காமலே என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று நாங்கள் ஜனநாயகத்தை காக்கிறோம், சுயமரியாதையோடு யாரும் எங்கள் கட்சியில் கருத்து தெரிவிக்கலாம் எனப் பல மேடைகளில் பேசியிருக்கிறார். இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும். என்னுடைய பணி நான் சொன்னதை நோக்கி தான் தொடரும். சிலர் என்னிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள். நாங்கள் 6 பேர் பொதுச் செயலாளரை சந்தித்தது உண்மை என அன்றே தெளிவுபடுத்தி இருக்கிறேன். பொதுக்குழுவை கூட்டினால் தான் அதில் பேச முடியும். நேற்று நான் பேசுகையில் 10 நாட்களுக்குள் இந்தப் பணியை துவங்க வேண்டும் என்று தான் கூறினேன். எனது கருத்துக்கு ஆதரவாகப் பலரும் பேசியுள்ளனர். நான் பேசியது கட்சியின் நலனுக்கானது, என் நலனுக்காக அல்ல” எனத் தெரிவித்தார்.
படக்குறிப்பு, டிடிவி தினகரன்
செங்கோட்டையன் பதவி நீக்கம் பற்றி தினகரன் கருத்து
செங்கோட்டையன் பதவி நீக்கம் அவருக்குப் பின்னடைவு அல்ல என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கூறியது கட்சியைத் தாண்டி மக்கள் விரும்புகின்ற கோரிக்கை. அவரை நீக்குவது என்பது கெடுவான் கேடு நினைப்பான் என்பதைப் போன்ற செயல் ஆகும். அது அவருக்கு பின்னடைவு அல்ல, அவரை நீக்கியவர்களுக்கே பின்னடைவு என்பதை காலம் உணர்த்தும்.” எனத் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் கருத்து
செங்கோட்டையனின் பதவி நீக்கம் தொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் எல்லோரும் ஒன்றாக வந்தால் தான் வீழ்த்த முடியும். திமுக வேண்டாம் எனச் சொல்பவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அதிமுக ஒன்றுபடுவது குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
செங்கோட்டையன் பேசியது என்ன?
கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று(05/06/2025) செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். எந்த நிபந்தனையும் இல்லை, எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்களோடு இணைந்து பணியாற்றுவோம், எந்தத் தியாகத்தையும் செய்து பணியாற்றுகிறோம் என்று பல்வேறு மேடைகளில், கடிதங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
நாங்கள் எல்லோரும் தவித்துக்கொண்டிருக்கிறோம். யார் இதை எடுத்துச் சொல்வது என்ற நிலையில், நான் இதைப் பேசுகிறேன். மக்கள் ஆட்சி மாற்றம் தேவை என நினைக்கிறார்கள். அப்படி ஆட்சி மாற்றம் தேவை என்றால் வெளியே சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். வெளியே அமைதியாக இருப்பவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். அப்படிச் செய்யும்போதுதான், வெற்றிபெற முடியும். நாளை நம் ஆட்சி மலரப் போகிறது என யாராலும் சொல்ல முடியாது. என்னிடம் பலரும் பேசினார்கள். அதன் அடிப்படையில்தான் உங்களைச் சந்தித்துப் பேசுகிறேன். அவர்கள் (வெளியில் இருப்பவர்கள்) எந்தப் பொறுப்பும் தேவையில்லை என அவர்கள் சொல்லும்போது, நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதனை விரைந்து செய்ய வேண்டும். தேர்தல் பணிகள் துவங்கிவிட்டன. அப்படிச் செய்யவில்லையென்றால் இந்த மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் பணிகளை மேற்கொள்வோம். அதனைச் செய்யவில்லையென்றால் ஜெயலலிதா ஆட்சி மலர ஏதுவாக இருக்காது. இந்தப் பிரச்சனைக்கு முடிவுவந்தால்தான் சுற்றுப் பயணத்தில் கலந்துகொள்வேன்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
“அது நடக்கவில்லையென்றால் எல்லோரையும் ஒருங்கிணைத்து அந்த பணிகளைச்செய்வோம். 10 நாட்கள் காலக்கெடு. நாங்கள் ஆறு பேர் சென்று பேசிய பிறகு, கழகத்தின் பொதுவான கருத்துகளை என்னிடம் பேச முன்வரவில்லை. எல்லோரையும் ஒருங்கிணைக்கும்போதுதான் கட்சி ஒருமைப்படும். அப்போதுதான் நாம் மாபெரும் வெற்றியைப் பெற முடியும். இப்போது பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறேன். பிறகு இதே மனநிலையோடு இருப்பவர்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பேன். என்னுடைய மனநிலையை, தொண்டர்களின் மனநிலையை முன்வைத்திருக்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.