சென்னை: பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் தலா 7 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் தேவைகள் அடிப்படையில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அந்தவகையில், 5 விரைவு ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைந்து, இயக்கப்பட உள்ளன.
இதன்படி, தாம்பரம் – செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிலம்பு அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக 7 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. அதாவது, தலா ஒரு ஏசி 2 அடுக்கு மற்றும் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டியும், இரண்டு மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும் என 7 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயிலில் நவ.1-ம் தேதி முதலும், செங்கோட்டையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் நவ.2-ம் தேதி முதலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் தலா ஒரு ஏசி இரண்டடுக்கு மற்றும் ஒரு பொதுப் பெட்டியும், இரண்டு மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயிலில் நவ.2-ம் தேதி முதலும், நாகர்கோவிலில் இருந்து நவ.3-ம் தேதி முதலும் இணைத்து இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலில் நவ.3-ம் தேதி முதலும், திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலில் நவ.4-ம் தேதி முதலும் இணைக்கப்பட உள்ளன.
இதுதவிர, சென்னை சென்ட்ரல் – ஆலப்புழா இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில், கோயம்புத்தூர் – ராமேசுவரம் இடையே இயக்கப்படும் ரயில் உள்ளிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.