சென்னை: சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் நேற்று திடீரென 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை தடத்தில், ரயில்பாதை பராமரிப்பு பணி நடப்பதால் நேற்று 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, காலையில் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதேநேரம் சென்ட்ரல் – எண்ணூர், மீஞ்சூர் வரையில் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இருப்பினும், இந்த திடீர் அறிவிப்பால் சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, பேசின்பிரிட்ஜ், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் மின்சார ரயிலுக்காக ஒரு மணி நேரம் வரை காத்திருந்தனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ‘‘ரயில் பாதை பராமரிப்பு பணி என்பது திட்டமிட்டு நடத்தப்படுவதுதான். ஆனால் நேற்று காலை 9 மணியளவில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அடுத்த 2 மணி நேரத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்வது ஏற்புடையதல்ல. முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தால் அதற்கு தகுந்தவாறு நாங்கள் பயணத்தைத் திட்டமிட்டிருப்போம்’’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.