தமிழ்நாட்டின் 2026 சட்டப்பேரவை தேர்தலில், சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 14 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. திமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றிபெறவில்லை.
கடந்த 2016 மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் திமுகவுக்கு இது மிகப்பெரிய இழப்பு.
தமிழ்நாட்டின் தலைநகரில் இவ்வளவு பெரிய தோல்வியை திமுக சந்தித்தது ஏன்?
பட மூலாதாரம், TVK
படக்குறிப்பு, சென்னை, தியாகராய நகர் தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது
‘சென்னை- திமுகவின் கோட்டை’ என்ற பிம்பம் தகர்ந்துவிட்டதா?
சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், மற்றும் வேளச்சேரி என 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
இதில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. குறிப்பாக திமுக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி வேளச்சேரி தொகுதியிலும் வெற்றி பெற்றது.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்தபோது கூட, சென்னை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருந்தது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது.
அப்படியிருக்க இந்த சட்டப்பேரவைத் தேர்தலில், நிலைமை தலைகீழாக மாறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
“சென்னை எப்போதுமே திமுகவின் கோட்டையாக இருந்துள்ளது என்பதை நன்கு அறிந்துதான் தொடக்கம் முதல் தவெக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தியது. விஜய் உள்பட அதன் முக்கிய தலைவர்கள் சென்னையில் களம் கண்டனர்” என்கிறார் அரசியல் ஆய்வாளர் சஞ்சீவ் சடகோபன்.
பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டதன் தாக்கம் அதன் அருகில் உள்ள கொளத்தூர் தொகுதியிலும் உணரப்பட்டது, அதுவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தோல்வியிலும் தெரிந்தது என்றும் சஞ்சீவ் சடகோபன் குறிப்பிடுகிறார்.
“சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர்ப்புறங்களில் அதிமுகவுக்கு பெரும் ஆதரவு இருந்ததில்லை. அதனால் திமுகவுக்கு எதிரான வாக்குகளைக் கவர்வதில் ஒரு வெற்றிடம் இருந்தது, அதை தவெக சரியாகக் கணித்து, பயன்படுத்திக்கொண்டது”.
“சென்னையில் 4 முதல் 5 தொகுதிகள் தவெக-வுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 14 தொகுதிகள் கிடைத்துள்ளது, அக்கட்சியினருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்” என்கிறார் சடகோபன்.
திருவள்ளூர் மாவட்டத்தின் 10 தொகுதிகளில் திருத்தணி தவிர்த்து மீதமுள்ள 9 தொகுதிகளில் தவெக வெற்றிபெற்றுள்ளது. அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4 தொகுதிகளில் அனைத்திலும் தவெக வெற்றி பெற்றுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் 7 தொகுதிகளில் 5இல் தவெக-வும், இரண்டில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
“சென்னையில் சில இடங்களில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் தாக்கம், பிற இடங்களிலும் எதிரொலித்தது. இதை அப்படிதான் பார்க்க முடிகிறது. திமுக, விஜய் மற்றும் தவெகவை குறைத்து மதிப்பிட்டுவிட்டது” என்கிறார் சடகோபன்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விளக்கப் படம்
‘அடிப்படை பிரச்னைகளை திமுக கவனிக்கவில்லை’
தவெக தலைவர் விஜயின் வெற்றி, 1977 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவின் வெற்றியோடு ஒப்பிடப்படுகிறது.
ஆனால் 1977 தேர்தலில் கூட அதிமுக கட்சி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதேபோல, 2011 தேர்தலில் சென்னையின் பெரும்பாலான இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றபோதும், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
“திமுகவின் இந்தத் தோல்விக்கு காரணம் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் மக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்கு கூட திமுக அரசு செவிசாய்க்கவில்லை என்பதுதான்” என்கிறார் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன்.
“உதாரணத்திற்கு தாம்பரத்தில் சிட்லப்பாக்கம் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டால், இங்கு வசிக்கும் மக்களுக்கு திமுக அரசு மீது பெரும் அதிருப்தி இருந்தது. காரணம், குடிநீர் மாசுபாடு. ஏரி நீரில் சாக்கடை கலந்து மாசுபாடு ஏற்பட்ட பிறகு இந்த பகுதி மக்கள் நம்பியிருந்தது நிலத்தடி நீரைதான்.”
“ஆனால், அதிலும் மாசுபாடு ஏற்பட்டது நாங்கள் மாதிரிகளை ஆய்வகங்களுக்கு கொடுத்து சோதித்ததில் தெரிந்தது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மோசமான சாலைகள் குறித்தும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரிய விளக்கங்களுக்கும் தாமதமாகவே பதில் கிடைத்தது.” என்கிறார் கிருஷ்ணன்.
“இப்படி அடிப்படை பிரச்னைகளுக்கு கூட அதிகாரிகள், பிரதிநிதிகள் காட்டிய அலட்சியம் தேர்தலில் எதிரொலித்துள்ளது என நான் நினைக்கிறேன்” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடந்த 2023இல் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்பை சந்தித்தது.
‘வடசென்னையின் மக்களுக்கு இருக்கும் அதிருப்தி’
“தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையை திமுக அரசு கையாண்ட விதம், எங்கள் பகுதி மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது” என்கிறார் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மோகன்.
திமுக அரசின் சில திட்டங்கள் வடசென்னை மக்களுக்கு முழுமையான பலனை அளிக்கவில்லை என்று கூறும் அவர், “எளிய உதாரணம், வடசென்னை பகுதியில் சில புதிய மைதானங்களை திறந்தார்கள். ஆனால் அதை சாமானிய மக்களால் அணுக முடியாத நிலை இருந்தது. இதுபோன்ற பல பிரச்னைகள் மக்கள் மனதில் பதிந்திருந்தன.” என்கிறார்.
கடந்த 2023இல் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்பை சந்தித்தது. அப்போது மழையால் ஏற்பட்ட சேதம் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் குறித்தும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் அந்த நிகழ்வு அரசியல் பிரச்னையாகவும் உருவெடுத்தது.
திமுக அரசால் திட்டமிடப்பட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகள் என்ன ஆனது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
“4000 கோடிக்கு பணிகள் நடந்த காரணமாகத்தான் 47 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மழை பெய்தும் சென்னை இப்போது தப்பித்திருக்கிறது. இதற்கு அந்த நான்காயிரம் கோடியை திட்டமிட்டு செலவு செய்ததே காரணம்” என முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது விளக்கமளித்திருந்தார்.
“ஆனால், களத்தில் அது பிரதிபலிக்கவில்லை. ஒவ்வொரு மழையின் போதும், வடசென்னை மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்” என்கிறார் மோகன்.
“எங்கள் பகுதி மக்கள் விஜய் என்ற நடிகரின் திரைக்கவர்ச்சிக்காக வாக்கு அளிக்கவில்லை, இந்தப் பிரச்னைகளினால் ஏற்பட்ட கோபமே இந்த முடிவுக்கு காரணம். திமுக இதிலிருந்து பாடம் கற்க வேண்டும்” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், TVK
ஆனால் “இந்த அடிப்படை பிரச்னைகளைத் தாண்டி, ‘விஜய்’ என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே சென்னை மக்கள் வாக்களித்துள்ளனர். தன்னுடைய சித்தாந்தம், கொள்கை குறித்த எந்த தெளிவும் வழங்காத ஒருவருக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்திருப்பதை வேறு எப்படி பார்ப்பது” எனக் கேள்வியெழுப்புகிறார் மூத்த பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன்.
“தூய்மைப் பணியாளர்களின் போராட்டம், அரசு ஊழியர்களின் போராட்டம் என திமுக சில தவறுகளை செய்துள்ளதை மறுக்க முடியாது, ஆனால் அது மிகப்பெரிய அளவிலான கோபமாக அல்லது அதிருப்தியாக மாறவில்லை.” என்கிறார் அவர்.
‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒருவரை மக்கள் தேடி வந்தார்கள். விஜய் வரவு அதற்கு ஏற்ப அமைந்தது. இதுவே சென்னையிலும் தமிழ்நாட்டிலும் பிரதிபலித்தது’ எனக் குறிப்பிடுகிறார் ராதாகிருஷ்ணன்.