சென்னை: ஃபோர்டு நிறுவனத்தால் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வாகன இன்ஜின் (Next-Gen Engine) உற்பத்தி ஆலை சென்னையில் அமையவுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், ‘முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம். ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.
அடுத்த தலைமுறை இஞ்சின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
