
சென்னை: சென்னையில் உள்ள 947 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான வாக்காளர் உதவி மையம் நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை மேற்கொள்வதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி சார்பில், வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக வாக்காளர் உதவி மையம் நவ.18-ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், இந்த உதவி மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை மாநகரம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களாக உள்ள பள்ளிகளில் நேற்று காலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கான உதவி மையங்கள் தொடங்கி பணிகள் நடைபெற்றன.