சென்னை: சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு 70 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மதுரைக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் திடீரென்று இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். விமானத்தை சென்னைக்கு திருப்பி கொண்டு வருமாறு உத்தரவு வந்ததைத் தொடர்ந்து, காலை 9 மணியளவில் சென்னையில் விமானம் தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானப் பொறியாளர்கள் குழுவினர் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதேநேரம், பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.