இன்று, ஜூன் 8 அன்று, தமிழ்நாட்டில் வெளியான பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் இடம் பெற்ற முக்கியச் செய்திகளின் தொகுப்பை நாம் இங்கே காணலாம்.
சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் இறந்த வழக்கில் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு, இவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.
“திருச்சியை சேர்ந்தவர் நித்யா (26). இவரும், கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா காலனி 6-வது தெருவைச் சேர்ந்த பாலமுருகனும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கொடுங்கையூர் ஆசிரியர் காலனியில் வாடகை வீட்டில் இரண்டு மாதங்களாக தம்பதியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த நித்யாமர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 25 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நித்யா, சில மாதங்களுக்கு முன்பு வரை சைதாப்பேட்டை சடையப்பன் சந்து பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சந்தோஷ்குமார் (27) என்பவரை காதலித்திருப்பதும், பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதும், சம்பவம் நடந்த அன்று சந்தோஷ்குமார் அங்கு வந்து சென்றிருப்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணை இதையடுத்து போலீஸார் சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதில், நித்யா கொலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மறுத்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்து சென்றது குறித்த கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட ஆதாரங்களை காட்டி போலீஸார் விசாரணை நடத்தியதில், நித்யாவை கொலை செய்ததை சந்தோஷ்குமார் ஒப்புக் கொண்டார்.
விசாரணையில் சந்தோஷ் சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார், ஆலந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வருகிறார். சமூக ஊடகம் மூலமாக கடந்தாண்டு அவருக்கு நித்யா அறிமுகமாகியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நித்யா, தான் மென்பொறியாளர். அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன் என்று சொன்னதை, சந்தோஷ்குமார் நம்பியுள்ளார். காதலிக்க தொடங்கிய இருவரும், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் தம்பதிகளாக வாழ்ந்தனர். இதற்கிடையே நித்யாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், சந்தோஷ்குமார் பிரிந்து சென்றுள்ளார்.
ஆனால் நித்யா, இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை சந்தோஷ்குமாரிடம் காட்டி, சமூக ஊடகங்களில் அதை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி சந்தோஷ் குமாரிடம் இருந்து ரூ.8.50 லட்சம் பறித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று நித்யா, சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். அன்று சந்தோஷ்குமார் சென்றதும், இருவரும் மது அருந்தியுள்ளனர். இதில் நித்யா, மதுபோதையில் இருந்தபோது தனக்கு லேசாக தலைவலிப்பதாக தெரிவித்துள்ளார்.
உடனே சந்தோஷ்குமார், நித்யாவின் தலைக்கு மசாஜ் செய்வதுபோல நடித்து, அவரை கொலை செய்துள்ளார்.
பின்னர் அந்த வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தை நித்யாவின் கைவிரல் ரேகை மூலம் திறந்து, அதில் இருந்த 25 பவுன் தங்க நகையை எடுத்து கொண்டு தப்பியோடியுள்ளார். நகையை, தனது வீட்டின் எதிரே வசிக்கும் நண்பரிடம் கொடுத்துள்ளார். அந்த நகையையும் போலீஸார் தற்போது மீட்டுள்ளனர். இதையடுத்து, சந்தோஷ்குமாரை கைது செய்த போலீஸார், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர் என நீதிபதி கருத்கருத்து
பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கும் குவாரி உரிமையாளர்கள்: உயர் நீதிமன்றம் கருத்து
தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“குவாரி உரிமம் முடிந்த நிலையிலும், குவாரியை வெட்டி எடுத்த கோவை குவாரி உரிமையாளர் செந்தாமரைக்கு ரூ.32.29 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 7 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் குவாரி நடத்த உரிமையில்லை. சட்டவிரோதமாக எடுத்த கனிமத்துக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அபராதம் விதிப்பை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவார்த்தி, “தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர்.
பேராசைக்காரர்களிடம் இருந்து பூமியைக் காக்கவே சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உள்ளது. குவாரி மூடப்பட்டதாக அறிக்கை தந்துவிட்டு மறுபுறம் குவாரி செயல்பட அதிகாரிகள் அனுமதி அளித்திருக்கிறார்கள்.
குவாரி உரிமம் 2023ல் முடிந்ததால் அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை. இந்த வழக்கில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. குவாரி மோசடியில் அதிகாரிகள் பங்கு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும், “நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.